Monday, October 17, 2011

மண்



மண்.....


அழுத்தங்கள்
மூடி மூடி
மறைத்தாலும்
மீண்டும்
அசுர உருக்கொண்டு
முளைத்துவிடுகின்றன.

மண்ணிருந்து
நான் வாழ்ந்த நினைவுகள்.

பொன் எனப் பொலிந்த
அந்தப் பொழுதுகள்
என் உயிர் பூத்துப் பொழில் கொண்ட
நாட்கள்.

வெயிற்காலப் புழுதிகளில்
அளைந்து,
விதானையார் வீட்டு
எருமைகளோடு கலந்து,
காடேறிகளாய்
கூடு கலைத்து குருவி பிடித்து,
பாம்பைத் துரத்தி மகிழ்ந்து
பாம்பு துரத்தப் பயந்து,
புற்றின் பின் மறைந்து
திருட்டுப் புகை பிடித்து,

அந்திக் கருக்கலில்
புளியமரக் கொப்பேறி,
கொம்பேறி மூக்கர்களாய்
பாதைப் பயணிகளைப்
பயங்காட்டிக் களித்து,

கர்வத்தோடு
பள்ளி போகும்
வெள்ளைக் கமலாவின்
வெண் சீருடை மீது
சேறடித்துச் சிரித்து,
பின்
வீட்டாரிடம் சிக்கித் தவித்து,

இப்படித்தான்

தீச்சுடினும் தீய்ந்து போகாத
கல்வெட்டுகள்
உணர்வெங்கும் இறைந்து
கிடக்கின்றன.

நிலம் பெயர்ந்து
புலம் வாழ்வதை விட,
அங்கம் சில
இழந்தாயினும்
அங்கேயே வாழ்ந்திருக்கலாம். 

Monday, September 26, 2011

வரத்தோடு வாழ்ந்த வாழ்வு



வரத்தோடு வாழ்ந்த வாழ்வு 

மேலைத் திசையிருந்து
கிளம்பித் தரையெங்கும்
திமிரேற்றித் திரியத் தொடங்கும் சோளகம்.

நீர் தேங்கிக் காய்ந்த தரைநுனியில்
இறுகிக் கிடந்த
சேற்றுத் திட்டுகள் உலர்ந்து உதிர்ந்து>
சோளகத் தோளில்
உலாப் போகத் தொடங்கும்
சேற்றுப் புழுதி.

தரை தொட்ட வெளியெங்கும்
வீசி நிறைகின்றது சோளகம்.

பச்சை இலைகளுக்குள்
பயங்கொண்டு பதுங்கும்
சருகுகள் தேடி உதிர்த்து விளையாடும்.

தெங்குத் குருத்தேறி
தெம்மாங்கு பாடி
காவோலை சிலவற்றைக் கவிழ்த்துக் கீழிறங்கும்.

பனையின் தலையாட்டிப்
பழம் சில உதிர்த்துத்
‘தொப்’ என்ற ஒலியை
பொக்கைவாய்ப் பாட்டி
செவியில் சேர்க்கும்.

பள்ளிப் பிள்ளைகளின்
வெள்ளைச் சீருடையில்
கொஞ்சமாய்ப் புழுதி பூசி
செல்லமாய்த் திட்டுகள் வாங்கும்.

மீன் விற்றுத் திரும்பும்
பொன்னம்மாவின் மாராப்புடன் மோதி
சந்தைத் தமிழில் சந்தங்கள் கேட்கும்.

பாதி போதையில்
காத்தவராயன் கூத்தை
தப்புப் தப்பாய்ப் பாடியபடி
உலாசிப் போகும்
சின்னப்புவின் நாலு முழ வேட்டி உருவி
வண்டோடு கொஞ்சி மகிழும்
எருக்கலம் பூவின் நாணம் மறைக்கும்.

தாமரைக் குளம் மீதேறி
அலையாடி விளையாடி புழுதி கழுவும்.

குளத்தின் குளிர் சுமந்து
உள்ளிடம் தொட்டுச் சூடேற்ற
வாலைக் குமரி ஒருத்தியின் கண் சொருகும்.
சும்மா இருந்த சங்கை ஊதி
மங்கைக்குள் சத்தம் எழுப்பும்.

தீராப் பகை கொண்ட
பொன்னப்பர் காணிப் புழுதியை
கன்னையர் வளவுக்குள் வீசி எறியும்.

ஆவக்காய் செய்யவென
அழகக்கா அண்ணாந்து பார்த்திருக்க>
அத்தனை மாம்பிஞ்சுகளையும்
மதில் வீட்டு வளவுக்குள் வீழ்த்தி
வேடிக்கை பார்க்கும்.

வீதியோர வேப்பமர உச்சியில்
கொக்கிருந்து இடும் எச்சத்தை>
அளவறிந்து அண்ணாச்சியார்
தலையில் வீழ்த்தும்.

சோளகக் குறும்பின்
வாரி இறைத்த புழுதி
ஊரின் மேனி எங்கும் பரவிக் கிடக்க>

பொழுதொன்று பார்த்து>
மண்ணாளின் மனதறிந்து
விண்ணகக் காதல் மெல்லக் கீழிறங்கும்.

மண்ணுயிர் யாவும் கூடிப் புரிந்த
அத்தனை தவத்திற்குமான
ஒற்றை வரமாய்
விழுகின்ற துளிகள் தொட>
மண்ணியலாள் மனதெங்கும் மணப்பாள்.

தொட்டால் சிணுங்கிச் செடி கூட
இந்த மழைத்துளி பட்டால் மகிழும்.

வரத்தோடு பிறந்த வாழ்வு
புலத்தோடு இழந்து போக>

சோளகச் சுகத்தை
வாடகைக்கு வாங்கி
வாழ்வதெம் வாழ்வு.




Wednesday, June 1, 2011

வெற்றுத்தாள்



காற்றுத்திசைகளில் அலைக்கழிந்தபடி காலடி ஓரமாய்க் கடந்தது ஒரு வெற்றுத்தாள். எதுவும் எழுதப்பட்டிருக்காத தாள். இனியும் எழுதமுடியாத தாள். வெறுமைத்தாள்.
வெறுமைத்தாளா….?


ஆகா வெறுமை… வெற்றிடமாய் இருப்பது… எவ்வளவு அழகானது. எல்லா நிறைவுகளும் நிறைவு பெறுகின்ற இடம் வெறுமையல்லவா.. குப்பைகூழங்களால் நிறைந்து கிடக்கும் இதயத்தை வெறுமையாக்க முயன்று முடியாமல் தோற்றுக் குவிந்து கிடக்கின்றன தோல்விகள்.  
தூய்மையின் முழுமை வெண்மை என்கிறனர். வெற்றுத்தாள் வெண்மையல்லவா.. நிறங்களை ஏற்றுக் கொண்டாலேயே வெற்றுத்தாள் நிறத்தாள் ஆகிவிடுகின்றது. தாள்களிலேயே தூய்மையான தாள் வெற்றுத்தாளா…? எழுதப்பட்ட தாள்கள் தூய்மை குறித்து அதிகமாய்ப் பேசியிருக்கின்றனவே… வெறுந்தாள்களை விடவும். 


அதிகமாகப் பேசுபவனை விட, அமைதியானவன்தான் ஆழமாய் இருக்கின்றான். வரையப்பட்ட வரிகளை விடவும், மிக அதிகமான தகவல்களைக் கொண்டிருக்கின்றதோ வெற்றுத்தாள்கள். எதுவுமே இல்லை என்பதிற்றான் எல்லாமும் இருக்கின்றன என்கின்றது மெய்மை. வெற்றுத்தாள்களுக்குள் எல்லாமும் இருக்கிறதா..?


கபடமில்லாத குழந்தையின் அழகு அதன் வெள்ளை உள்ளத்தின் வெளிப்பாடு என்கிறதா..?
எல்லாச் சாயங்களும் வெளிறிப்போகையில் வெளிப்படுகின்ற வெண்iமையே மெய்மை என்கிறதா..?
தேடல்கள் யாவும் முற்றுப் பெறுகின்ற ஒற்றைப்புள்ளி வெறுமை என்கின்றதா…?
சாயங்களில் தோய்ந்து தேய்ந்து மாய்ந்து போகாமல் சுயமாய் இருங்கள் என்கிறதா..?
எதுவுமே இல்லாமல் இருப்பதுதான் முழுமை என்கிறதா?
தப்புத் தப்பான எழுததுகளுக்குக் களமாக இருப்பதைவிட கன்னியாக இருந்துவிடுவதே  சிறப்பு என்கிறதா?


பட்டியலிட்டால் விரிகிறதே…. வெற்றுத்தாளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஒளிக்கீற்றுகள்.
உன்னை வெறுமையாக்கிக் கொண்டு வா.. உனக்கு உன்னைக் காட்டுகின்றேன் எனறான் ஒரு ஞானி.
வெறுமையான புல்லாங்குழலாக இரு… உனக்குள் இருந்து இனிய இசை பிறக்கும் என்றான் மற்றொருவன்.


கட்டற்ற வெறுமைக்குள் தொலைந்து போ.. நீ சொர்க்கத்தில் கண்டெடுக்கப்படுவாய் என்றான் எப்போதோ காணாமற் போன ஒரு சொர்க்கவாசி.


வெறுமைக்குப் பொருள் தேடி அலைந்தான் ஒருவன். வெறிச்சோடிக் கிடந்த தெருவேரர மரத்தடியில் படுத்திருந்த சாமியாரை நோக்கி நீண்டன சுட்டு விரல்கள்.
தட்டி எழுப்பிää தாடியைப் பிடித்திழுத்துக் கேட்டான்.. வெறுமைக்குப் பொருள் என்ன?
வெறுமையாய் ஒரு பொருள் கொண்டு வா… 
இதோ குடம் வெறும் குடம்… வெற்றுக்குடம்.. 
இல்லை.. இது நிறைகுடம்.. காற்றால் நிறைந்திருக்கும் குடம்… வெற்றுப் பொருள் கொண்டு வா.. 
இல்லை… என்னால் முடியாது. 
முடியும்…  நீயே வெற்றுப் பொருளாகி விடு. 


வெறுமையின் பூரணம் வெறுமையாகதவரை புரியாது. 
வெறுமை.. வெண்மை… வெற்றுத்தாள்..
உலகம் ஓதிக்கொண்டிருக்கும் நிறைவுக்கான அர்த்தங்கள் உதிர்ந்து போகின்றன. 
வெற்றுப் பொட்டலில் வீசும் காற்றால் எதையும் வீழ்த்த முடியாது. 
வெற்றுத்தாளைப் பார்க்கின்றேன். காற்றின் தாளத்திற்கேற்ப பாடிக்கொண்டே பறக்கிறது. 
இனி மை கொண்டு ஏதேனும் வெற்றுத்தாள் மீது எழுத முடியுமா?
அவ்வாறே எழுதினாலும் வெற்றுத்தாளின் ஆழம் கடந்து எழுத முடியுமா?
இதுவரை இல்லாத ஒரு தனி மதிப்பு வெற்றுத்தாள்களின் மீது ஏற்படுகின்றது.
  
                                                                             பொன்னையா விவேகானந்தன்.

Sunday, May 29, 2011

நத்தார் மரம் இலைகளோடேயே இறந்து போனது.


















கணுக்களின் இடுக்குகளில்
தொங்கும் பனித்துளிகள்
சுரணைக்குச்
சோதனை தர,

கொம்புகளால் மட்டுமே
குளிரை
விரட்டிக் கொண்டிருந்தன
நிர்வாண மரங்கள்.

“கோடையில் துளிர்ப்பதுவும்
குளிரில் விறைப்பதுவுமாய்
பட்டைக்குள் பச்சையங்களைப்
பதுக்கிக் கொண்டு
ஏனிந்த
ஜீவமரணப் போராட்டம்”

மேபிள் லீவ்
தலைமை ஏற்க,
உயிர்ப்பைக்
காழ் பகுதியின்
ஆழத்தில்
பத்திரப்படுத்திவிட்டு
மொட்டை மரங்கள்
மொத்தமாய்க் கூடின.

‘பரம்பரைகளாய்ப்
பழக்கப்பட்ட
மாறாத் துயரம்,
உறைந்து உயிர்க்கும்
இந்த அவலம்
இனியும் வேண்டாம்’
மூத்தமரமொன்று
முனகியது.

‘வெப்பத்தை இழந்து
ஒப்புக்கு உலாவரும்
கனடியச் சூரியன்
கையாலாகாதவன்,
கூதலை விடவும்
சாதலே மேல்.’

நெட்டை மரமொன்று
நெஞ்சு பொருமியது.

‘வரலாற்றுக் காலந்தொட்டு
வகுக்கப்பட்ட வாழ்வு
வாழ்ந்துதான் ஆக வேண்டும்’.

குட்டை மரமொன்று
குரலை மட்டும் அனுப்பியது.

“இயலாமையின் புலம்பல்.....
யாரது?”

மேபிள் கர்ச்சிக்க....
குட்டை மரம்
மேலும் குறுகிக் கொண்டது.

“தாவரப் படைப்பிலும்
ஓரவஞ்சனை
பச்சையத்தைப்
பாதுகாக்கும் சக்தி
நத்தார் மரங்களுக்கு மட்டும்
எப்படிச் சாத்தியம்...?”

“கடும் குளிரிலும்
தன் இலைகளை
இழக்கச் சம்மதிக்காத
நத்தார் மரங்களைக் காரணம் கேட்போம்.”

மேபிள்
தோழர்களை அணிவகுத்தது.

தூரமாய்
ஒரு ஈனஸ்வரம்.....

மொட்டை மரங்கள்
பட்டைக்குள் செருகிக் கிடந்த
செவிகளைக் கூர்மைப்படுத்தின.

நிதானித்தன நிர்வாண மரங்கள்

அழகாய் அடர்ந்திருந்த
நத்தார் மரமொன்றைக்
கோடாரியொன்று
கொத்திக் கொண்டிருக்க,

அதன் ஓலம்
தாவர தேசத்தை ஊடுறுத்தது.

மனிதர்களே......

தேவன் எம்மைப்
பாரங்களாய்ச் சுமந்தார்.
நாங்கள் பாவங்களாய்
உங்களைச் சுமந்தோம்.

ஈற்றில் தேவனையே சுமந்தோம்.

தாவர அழிப்பில் ஏன்
இன்னமும் தேவ பிரார்த்தனை.

எம் இறப்புகளில்தான்
தேவ பிறப்பு
சந்தோஷிக்கப்படுகின்றதா?

ஏற்பாடுகளில்
ஏதேனும் ஒன்று
இதற்கு
உடன்பட்டதுண்டா?

மோஈசனின் தீர்மானங்கள்
இந்த மோசத்தை முன்மொழிந்ததுண்டா?

பட்டை போர்த்திய
மரங்களுக்கிடையே
பச்சையம் போர்த்தியதாலா
எமக்கு இந்தப் பரிதாபம்?

பனிக்காலம்
பருவம் தருகின்ற அற்ப தண்டனை.
பண்டிகைக் காலம்
நீங்கள் தரும்
மரண தண்டனை.

தேவ தர்மத்தின் போதகர்களே.....

உப ஆகமத்தின்
புதிய பாகமாய்
தாவர தர்மத்தையும்
சேர்த்துக் கொள்ளுங்கள்.

மரத்தின் மொழி
மனிதனுக்குப் புரியவில்லைப் போலும்.

கோடாரியின் காம்பு சொன்னது.

உன் மரண வாக்குமூலத்தை யார் கேட்டது?
சும்மா கிட...

நத்தார் மரம் இலைகளோடேயே
இறந்து போனது.

அந்த விறைப்புக்குள்ளும்
வியர்த்து நின்றன
நிர்வாண மரங்கள்.

ஒரு நிமிட வணக்கத்தின் பின்
மேபிள் சொன்னது......

திரும்புங்கள்
கொம்புகளையேனும் காத்துக் கொள்வோம்.

பொன்னையா விவேகானந்தன் 

வலிமை கொண்டெழுவன வலிகளே.....






நந்தவனம் எங்கும் நறுமணம்
அழகழகாய்க் கட்டவிழ்ந்த
வண்ண மலர்கள்.
மது உண்டு மயங்க
வண்டுகளாயும்
சுகந்தம் சுவைக்கத் தென்றலாயும்
மலரெனப் பறித்து
மணந்து பின் எரிக்கவும்
எங்கள் வனத்துக்குள்
வந்துபோன கால்களின் காலம்
அந்தக்காலம்.

இது
வேங்கையர் வாழ்ந்த காலம்
வீர மங்கையர் கொண்டனர் புதுக்கோலம்.


வேலிக்குள் வாழ்வை வைத்து,
சுவருக்குள் சிறை இருந்து
வேர்வையால் உறவை வளர்த்து,
வேகி வெந்த வரலாறு
மறந்து போகுமா எமக்கு.


ஆடவர் கூடி ஆக்கிய விதிகள்
அடக்கி ஆள எழுதிய சதிகள்


முடங்கி மூலையில் அழுத விழிகள்
எழுத முயன்றால் முடியாத கதைகள். 


கண்ணகி சீதை எனும்
கண்ணீர்க் கதா பாத்திரங்கள்
அடக்குமுறைகளின்
வரலாற்று ஆதாரங்கள்,
அழிந்து போகாத
அடையாளங்கள்.


அடுப்பறையில் புகையோடு
ஆவியான கனவுகள்.
அழுதழுது அவிந்து போன
உணர்வுகள்.


எழுத்தறிய,
எழுந்துலாவ,
ஏன் என்று கேட்க
எதற்கும் இல்லை
எமக்கு அனுமதி.


பேசும் மொழியைத் தாய் என்பர்
வாழும் மண்ணைத் தாய் எனத் தொழுவர்.
பெண்ணாகிப் பின்
உயிர்காக்கும் உறவாகி
உடனிருக்கும் உணர்வாகி
உறவெனும் உண்மையாகி
உலகே அவளாகி
உயர்ந்த வாழ்வாகும் பெண்ணை
நாயெனக்கருதிய நாட்கள்
அன்று.


குறையில்லாப்
புலன் ஐந்தொடு.
ஆடவருக்கு இணையாய்
அத்தனை உணர்வுகளும் உண்டு
அவருக்கும் மேலாய் அழகும் கொண்டோம்.


இறை ஈந்த வரமாய்
தாய்மை கொண்டு
நாம் இங்கு வாழ்தல் கண்டு
இகழந்தெம்மை உரைப்பார்
ஈனப் பிறவியன்றி வேறு யார்?


மாதர் தம்மை இழிவு செய்யும்
மடைமைதன்னைக் கொளுத்துவோம்
என்ற
பாரதி பாட்டுக்குப் பின்னாலும்
பாரெங்கும் அதே கொடுமை
நாம் திரண்டு எழுந்தால் அன்றி
எமக்காய்
எந்த நீதியும் எழாது.


மாதராய்ப் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்.
என்றொலித்த ஆண் அதிகாரம்
இதுவரை தந்ததில்லை
எந்த வரமும்.


சபிக்கப்பட்டு
கல்லாகிக் கிடந்த நம்வாழ்வு
ஆடவர் கால்பட்டுக் கனிந்தது
கதையில் மட்டுமே.
கால்பட்டுச் சிதைந்த கதைகள்தானே
எங்கும் ஏராளம்.


எழுதல் இன்றி எதுவும் நிகழாது.
அழுதல் தொடர்ந்தால் பாதை அகலாது.
இனி எம் விதிகளை
நம் கைகளே எழுதட்டும்
புது விதி செய்வோம்


தடுத்தெவர் எழுந்தாலும்
பகை முடித்துப் பயணம் தொடர்வோம்.

                                                               -  பொன்னையா விவேகானந்தன் 

Saturday, May 28, 2011

அகதியின் சுவடுகள்















உள்ளுர மெதுவாய் எழுகின்றது
அச்சம்..

என் மண்ணை அகன்றெழ முடியா ஆதங்கம்
நொறுங்கிச் சிதற..

வேர்கள் இழுவுண்டு அறுபட பிடுங்கியெறியப்பட்டேன்..

இனி எத்திசை நோக்கிச் சிதறினால்த்தான் என்ன..?

அவலம் நிறைந்து வழிந்த உடலத்திற்கு
உலகம் இட்ட பெயர்

அகதி..

அறுக்கப்பட்ட வேரின் நுனிகளை
உறைபனிக்குள் புதைத்தபோதும்
நின்று விடவில்லை இரத்தப் பெருக்கு..

உணர்வுகளை விளையாட்டாய்
விலைபேசிச் செல்லும்  காலம்..
வாசனை எசுத்தர்களை சுவாச வாசலுக்குத்
தூய்மையற்றுக் கொண்டு வரும் காற்று.

என் சுவாசம் உள்ளிழுத்த முதல் காற்றின்
வாசனைக்காக ஏங்கும் இதயம்..

ஒளியைச் சிதறடிக்கும் அப்பிள் குவியலின்
பளபளப்பில் மேலும் வரண்டு போகும் நாக்கு..

கறுத்தக் கொழும்பானின் கற்பனைச் சுவையில்
ஊற்றெடுக்கும் எச்சில்,
உணர்வின் வரட்சிக்குத் தண்ணி காட்டும்..

மேபிள் மர நிழலிலும், பச்சைப் புல் விரிப்பிலும்
உருண்டு திரிந்தன உணர்வுகள் தாமரை இலை தண்ணீர் போல..

மீண்டும் உணர்வுகளை விளையாட்டாய்
விலைபேசிச் செல்லும்  காலம்..

உயிர்ப்பின் அவசியம்
இறுகிக் கிடந்த திராவகத்துக்குள்ளிருந்தும்
என் வேர்களைத் துளிர்க்கத் தூண்டும்.

கடுங்குளிரிலும் தன் இலைகளை
இழக்கச் சம்மதிக்காத
பைன் மரங்களின் உறுதியில் பாதியேனும்
இல்லையெனில்
உயிர்ப்து என்பது இங்கு சாத்தியமில்லை..

உயிர்ப்பின் எழுச்சியிலும் எதிர்ப்புகள்.

போருக்குள்ளேயே தேரோட்டியவை
என் உணர்வுகள்.

எதிர்ப்பை எதிர்கொள்ளும் இன்பத்தில்
மேலும் துளிர்கள் தளிராகி எழுந்தன

வானத்தைத் தொடுவதல்ல, என் இலக்கு.

வசப்பட்டட பின்பும் வாழத் தெரியா
வாழ்க்கையில்,
இழப்புகளும் எதிர்ப்புகளும் வெற்றிகளும்
எழுதப்படும் வரையில்

எழுந்தபடி இருக்கும் என் வாழ்வு.


                           பொன்னையா விவேகானந்தன்





முறிக்கப்பட்ட பேனாவின் அழிவற்ற ஞாபகங்கள்...













சிவராம் நினைவாக,

கலப்பற்ற உண்மைகளை
உலகமொழியில் பேசிய
ஒரு தமிழ்ப்பேனா...

மூர்க்கர்களினால்
மூளை பிடுங்கப்பட்டிருக்கின்றது.

உயிர்க் குவியல்களுக்குள்
இருந்த உண்மைகளை
எச்சரிக்கை மீறியும்
எழுதியதற்காக,

பேனாவைப் பிரசவித்த
கர்ப்பம்
ஒரு தமிழ்த்தாயினுடையது
என்பதற்காக...

பேனாவின் இதயமான
ஈழத்தேசியத்தை அழவைப்பதற்காக..

எதற்காயும் இருக்கலாம்...

இது,
மூடத்தனத்தின் முழுமை திரண்டு
ஈனத்தனமாய் இயங்குவதின்
உலக சாட்சி..

இது,

மையிட்டு எழுதும் கோல்களுக்குள்
பொய்யிட்டு எழுதுவதைப் புறந்தள்ளி
மெய்யிட்டுக் கோளறு பதிகம்
எழுதிய கோல்..

கறல் ஏறிய
பேரினச் செங்கோலின்
ஓரின வாதத்தை
பூமியின் செவிட்டுச் செவிகளுக்குள்
ஓங்கி எழுதிய தீக்கோல்.

எம் எழுதுகோல்கள்
ஈழத்தேசியத்தைத் தூக்கி நிறுத்திய
மூன்றாம் கால்கள்....


உயிர், மெய் இரண்டோடு
உயிர்மெய்யும் கொண்டு
ஆய்தம் கண்டு
ஆனது  எம் எழுத்து

கடல் திரண்டு கோள் எழுந்து
கொள்ள வந்தபோதெல்லாம்
கோளையே குடித்து
எழுந்த கோல்கள்

பகை மிக்க நண்பனே!

யாரை அழ வைக்க
அற்பங்கள் செய்கின்றாய்...?

என்றோ அழ வைத்த
காரணத்தால்த்தானே
எழத் தொடங்கினோம் நாம்!

அதன் பின்
நாம் அழ மறந்த கதையை
நீ அறிந்ததில்லையா...?

ஈழத்தேசியத்தின் விழி
ஆழமாய்   கசிகின்றது
நீராய் அல்ல.. அமிலமாய்..

சிதறிவிழும் இடத்தில்
தீப்பற்றும் திராவகமாய்...

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட
இந்தப் பேனா
சூரியச் சுவர்களில் மோதித் தெரித்த
உயிர்மெய் எழுத்து..

பகை திகைத்து நிற்க,
கரியான பின்பும்
பிரபஞ்ச வெளிகளில்
இவனே எழுதப்போகின்றான்..

                                 பொன்னையா விவேகானந்தன்