Saturday, December 12, 2015

சங்கத் தமிழர் விளையாட்டுகள்.


 இயற்கை அழகு நிறைந்த பேரரங்கு அது.

அங்கே ஒரு எழில் உலாக் காட்சி (Fashion Show) நடைபெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. அவையோர் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒப்பனைகளால் தம்மை பேரழகாக்கியபடி அழைப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர் உலா மகளிர்.

அழகறிந்து அளவுணர்ந்து மதிப்பிட மங்கையரை மட்டுமே கொண்ட நடுவர் குழு காத்திருக்கின்றது.

இதோ உலா ஆரம்பமாகி விட்டது.

ஒரு பெண் ஒயிலாக நடந்து வருகின்றாள். அவள் சூடியிருக்கும் பூக்களும் ஆடையழகும் அவையோரை ஈர்த்திழுக்கின்றன.

ஒளி வீசும் தன்மை கொண்டதாக வண்ண வண்ணப் பூக்கள் ஐவகை அழகு நிறைந்த அவள் கூந்தலில் செருகப்பட்டிருக்கின்றன.

இரு கைகளிலும் நிறைந்த வளையல்கள். அழகு வழிய, எழிலாகக் கைகளை வீசி நடக்கின்றாள். ஒழுங்குபடுத்தப்பட்ட இனிய ஓசைகளை வளையல்கள் எழுப்பின. அவள் வீசி நடந்தது வெறுங்கையல்ல. தேன் சிந்தும் பேழகுப் பூக்களைக் கொண்ட பூங்கொத்தினை ஏந்திய கை.

நிலம் நோகா மெல்லிய நடைதான் நடந்தாள். ஆயினும் காற் சலங்கைகளின் எழிலோசை உயிர்வரை சென்று உரசியது.

பிசகாத கால இடைவெளியில் கை வீசியும் கால் நடந்தும் இன்னிசை சிந்தி அவள் காட்டிய பேரழகு அங்கிருந்தோர் அனைவரையும் கட்டிப் போட்டது.

உலா மகளிரின் அழகை மதிப்பிட்டு, அவர்களது எழிலைப் பேணியவர்களான நடுவர், உலா வந்தவளுக்குப் புள்ளியிட்டு அடுத்தவருக்காகக் காத்திருக்கின்றனர்.

இது அண்மையில் நடைபெற்ற எழில் உலாக் காட்சி அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி. இது இக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்கின்ற Fashion Show என்பதை ஒத்த விளையாட்டாகும்.

சங்ககாலத்தில் மகளிரின் அழகை மகளிரே ஆராய்ந்து மதிப்பிட்டனர் எனக் குறுந்தொகை கூறுகின்றது.

“கடலங் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்;து” – குறுந்தொகை 245

இப்படி ஆராய்ந்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக மகளிர் தம்மை ஒப்பனை செய்துகொண்டு ஒய்யாரமாக நடந்து காட்டியிருக்கின்றனர். இச் செய்தியை அகநானூறு வெளிப்படுத்துகின்றது.

“கானப் பாதிரி கருந் தகட்டு ஒள்வீ
வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச்
சில் ஐங் கூந்தல் அழுத்தி மெல் இணர்த்
தேம்பாய் மராஅம் அடைச்சி வான்கோல்
இயங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச்
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி” – அகம் 261


விளையாட்டு - சொல்லும் பொருளும்

விளையாட்டுகள் வேட்டைச் சமூக வாழ்தளங்களிலேயே தோற்றம் கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. விலங்குகளை வேட்டையாடுதலும், ஆயுதங்களைக் கையாளுதலும், உடல் வலிமையைப் பேணுதலும் விளையாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கக் கூடும். எனினும் மனித குலம் பண்பாட்டுப் படிகளில் ஏறத் தொடங்கிய காலத்திலேயே விளையாட்டுகளும் முதன்மை பெற்றன எனலாம்.

ஓரினமானது மரபுத் தொடர்ச்சியின் வழியாகப் பின்பற்றிவரும் விளையாட்டுகள், அவ்வினத்தின் பண்பாட்டினைப் புரிந்து கொள்ளவும் அக்காலச் சமூகக் கொள்கைகளை வரையறுக்கவும் வல்ல இனம்சார் அடையாளங்களாகவே திகழ்கின்றன.

விளையாட்டு என்பதற்கான விளக்கத்தைச் சங்கப்புலவோர் வரையறுத்துக் கூறவில்லை. உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய நான்கு வகைக் களங்களைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அதில் ஒன்று விளையாட்டு.  இதிலிருந்து மன மகிழ்ச்சியை விளைவிக்கும் ஒரு செயலே விளையாட்டு எனக் கருதலாம்.

மொழிப்புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் விளை என்றால் விருப்பம் எனப் பொருள் கொண்டு விரும்பியாடும் விளையாட்டு என்று விளக்குகிறார்.

தொல்காப்பியம் உரியியல் (தொல் 319) என்ற பகுதியில் கெடவரல், பண்ணை எனும் இரு சொற்களால் விளையாட்டைக் குறிக்கின்றது. இத்தொல்காப்பியக் குறிப்பு அக்காலத்தே விளையாட்டுகள் மக்களிடத்தே செல்வாக்குப் பெற்றிருந்தமையை உணர்த்துகின்றது. கெடவரல் என்பது நிலத்தில் விளையாடும் விளையாட்டையும் பண்ணை என்பது நீரில் விளையாடப்படும் விளையாட்டையும் குறிக்கும் என்பர்.

சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்பது பெரும்பாலும் நிலத்தில் ஆடப்படுகின்ற விளையாட்டுகளைக் குறித்தது. ஆடுதல் என்ற சொல் நீரோடு இணைந்த விளையாட்டுகளையே பெரிதும் குறித்தது.


சங்கத் தமிழரின் விளையாட்டுக் கொள்கைகள்.

சங்கத் தமிழர் பெரிதும் சமூகம் சார்ந்த செயற்பாடாகவே விளையாட்டைக் கருதினர். குழுநிலை விளையாட்டுகளும், மைதானங்களின் நடுவே இடம்பெற்ற வீர விளையாட்டுகளும் சமூகச் செயற்பாடுகளாகவே திகழ்ந்தன. அரசுகள், ஊர் மன்றங்கள், பெரு விளையாட்டுகளை நடத்தி வென்றோருக்கு மதிப்பளித்தன.

சமூக அங்கத்தவர் எல்லோரும் தத்தம் வயது, பால் என்பவற்றிற்கேற்பப் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர். பெண்களை ‘வீட்டுக்குள் வளர்த்தல்’ (இச்செறித்தல்)  என்னும் நிலை அக்காலத்தில் காணப்பட்டாலும் சிறுமியர், இளம் மகளிர் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆண்களைப் போலவே பெண்களும் பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.

‘சிறுமியர் வெளியிற் சென்று தம் தோழியரோடு விளையாடுவதே அறம். அவ்வாறு விளையாடுவதால் உடலும் உள்ளமும் ஆக்கம் பெறும். மாறாக வீட்டுக்குள் இருந்தால் அது அறமும் இல்லை, ஆக்கமும் தேய்ந்து விடும்’ என்ற செய்தி நற்றிணை என்னும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது.

“விளையா டாயமொடு ஓரை யாடாது  
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்  
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்.....”   (நற்றிணை 68)

வெற்றியையும் தோல்வியையும் ஒத்த உணர்வோடு நோக்கும் பாங்கு சங்க இலக்கியங்களில் உணரப்பபடுகின்றது.

உயிருக்குப் பேரிடர் ஏற்படுத்தும் விளையாட்டுகள் அக்காலத்தே இருந்திருக்கின்றன. எனினும் மனித உயிரை இலக்கு வைத்து விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டதாகச் சான்றுகள் இல்லை.

‘உவகை ஊட்டுதல்’ என்னும் நிலையில் இருந்து பொருளியற் சார்புநிலைக்குச் சில விளையாட்டுக் கூறுகள் சங்ககாலத்திலேயே மாற்றங் கண்டன. வேளாண் சமூக அமைப்பினூடாகத் தனியுடமை உணர்வு அரும்பத் தொடங்கிய பின் சில விளையாட்டுகளின் வாயிலாக பொருள் இழப்பதுவும் பெறுவதும் இயல்பாயிற்று. காய்களை இழந்து பெறுகின்ற பல்லாங்குழி இத்தகைய ஒரு விளையாட்டே என்கிறார் தொ. பரமசிவன்.

அக்கால அரசுகளால் ஆதரிக்கப்பட்ட சதுரங்கமே பின்னாளில் சூதாட்டமாயிற்று என்பர்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் காணப்பட்ட வளர்ச்சியடைந்த சமூகங்கள் பலவகையான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன. அவர்களைப் போலவே தமிழரும் பல்வகை விளையாட்டுகளை உருவாக்கி விளையாடிய செய்திகளை சங்க இலக்கியங்கள் தருகின்றன. விளையாட்டுகள் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொள்ள சங்க இலக்கியங்களைத் தவிர பிற சான்றுகள் பெரிதும் கிடைக்கவில்லை. சங்கச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டே இக் கட்டுரை எழுதப்படுகின்றது. பெரும்பாலான விளையாட்டுகள் பற்றிய குறி;ப்புகள் இவ்விலக்கியங்கள் வாயிலாகக் கிடைத்துள்ளன. ஆயினும் கட்டுரைச் சுருக்கம் கருதிச் சிலவே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.


விளையாட்டு வகைகள்:

சங்க இலக்கியங்கள் பல வகையான விளையாட்டுகளைக் குறிப்பிடுகின்றன. சங்கால விளையாட்டுகள் நில விளையாட்டு, நீர் விளையாட்டு என இருவகையாகக் கருதப்பட்டன.

நில விளையாட்டுகளை,

சிறுவர் விளையாட்டு
சிறுமியர் விளையாட்டு
மகளிர் விளையாட்டு
காளையர் விளையாட்டு
முதியோர் விளையாட்டு
காதலர் விளையாட்டு
மொழி விளையாட்டு
திளைப்பு விளையாட்டு
காட்சி விளையாட்டு
                   என வகைப்படுத்தியுள்ளனர். இப் பகுப்புகளுக்குள் பல்வகை விளையாட்டுகள் அடங்கும்.


அசதியாடல், அம்புலி அழைத்தல், அலவன் ஆட்டல், உலாவல், ஊசல், எண்ணி விளையாடல், எதிரொலி கேட்டல், ஏறுகோள், கண் புதைத்து விளையாடல், கவண், கழங்கு, குதிரையேற்றமும், யானையேற்றமும், குரவை, சாம விளையாட்டுகள், குறும்பு விளையாட்டுகள், சிறுசோறு, சிறுதேர், சிறுபறை, சிற்றில் சிதைத்தல், சுண்ண விளையாட்டு, சூது, செடி கொடி வளர்ப்பு, பந்து விளையாட்டு, பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச் செய்தலும், பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும், பாவை விளையாட்டு, பிசி நொடி விளையாட்டு, மணற்குவியலில் மறைந்து விளையாடல், மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும், மல், வட்டு, வள்ளை, வில், வேட்டை என்பன அக்காலத்தே விளையாடப்பட்ட விளையாட்டுகள் சிலவாகும்.

நீர் விளையாட்டுகளாவன, தைநீராடல், நீச்சல் நடனம், நீச்சல், பந்து, பின்படகு, முன்படகு, வளிப்படகு பண்ணை, பாய்ச்சல், புனலாடல், மிதவை, மூழ்கல் போன்றவை ஆகும்.

இவற்றில் சில விளையாட்டுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.


 உடல் வித்தை விளையாட்டு:

இந்த விளையாட்டு இப்போது Gymnastic என உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

ஒரு மயில் மாம்பழத்தை உண்டுகொண்டிருக்கையில்  அது தவறி ஒரு சிறு சுனையில் வீழ்ந்துவிடுகின்றது. அதை எடுப்பதற்காகச் சுனையில் இறங்கும் மயில் அச்சுனைநீரைப் பருகுகின்றது. அந்தச் சுனையில் பழுத்த மிளகும், பலாவும் விழுந்து ஊறிவிட்டிருக்கின்றது. அதனால் அச்சுனை நீரோ போதையூட்டும் கள்ளாகிவிட்டது. அச்சுனை நீரை அருந்திய மயில், வியலூர் என்னும் ஊரில் இன்னிசை முழக்கத்தோடு ஆடுமகள் ஒருத்தி கயிற்றில் ஏறி ஆடுவது போல் இருந்தது என்கிறது குறிஞ்சிப்பாட்டு (191-194);.

வைகை ஆற்றில் நீராடிய மகளிர் இசைக்கருவிகள் முழங்க ஒருவர் தலைமேல் ஒருவர் நின்று உடல் வளைத்து வித்தை காட்டியிருக்கின்றனர். இதைச் ‘சென்னியர்’ ஆடல் என்கிறது பரிபாடல் (77-80)

ஊன்றித் தாண்டல் (pole vault)

இது இக்கால உலக விளையாட்டுகளில் சிறந்துவிளங்கும் விளையாட்டு.  சங்ககாலத்தில் குன்றக் குறவர்களின் சிறுவர்கள் இந்த விளையாட்டை விளையாடியிருக்கின்றார்கள்.

மந்தி தன் வயிற்றில் குட்டியைப் பற்றிக்கொண்டு, மூங்கில் நுனியைப் பற்றி வளைந்தாடித் தவ்வுவது கண்ட குன்றத்துக் குறவரின் புதல்வர் தாமும் மூங்கில் கொம்பைப் பற்றி வளைந்து ஆடி, வெற்றி கண்டு, அந்த வெற்றியை வெளிப்படுத்தக் கைகொட்டி மகிழ்ந்தனர் என நற்றிணை (95) கூறுகின்றது.

செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க்க்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும் குன்றகம் – நற்றிணை 95

வல்லாட்டம்:

வல்லாட்டம் ஒரு முதியோர் விளையாட்டாகும். ஊர்ப் பொதுமன்றத்தில் இதற்கான வல்லப் பலகை இருந்திருக்கின்றது. முதியோர் மிகுந்த கவனத்தோடு ஆடியிருக்கின்றனர். இவ்வல்லாட்டம் போட்டி விளையாட்டாகவும் ஆடப்பட்டிருக்கின்றது.

“கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின்,”  (அகநானூறு 377);.


வட்டு விளையாட்டுகள்:

வட்டு என்பது ஒருவகைப் பந்தை ஒத்த பொருளாகும். பல வகையான வட்டு விளையாட்டுகள் சங்ககாலத்திலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் வட்டு விளையாட்டுகளை ஆண்களே விளையாடினர்.

 - குணில் வட்டு Hockey) :

குணில் என்பது நுனியில் வளைந்த தடியாகும். உருளும் மணிவட்டைத் குணில் கொண்டு அடித்தனர். அது மேலும் வேகம் கொண்டு ஓடியது. இந்த விளையாட்டு இக்காலத்தில் விளையாடப்படும் கொக்கி விளையாட்டுக்கு ஒப்பானது. இச் செய்தியை,

“உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்” என்ற வரியால் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

 - வட்டுநா விளையாட்டு (Golf):

வட்டை நாக்குப் போன்ற தடியால் அடிக்கும் விளையாட்டு ‘வட்டுநா விளையாட்டு’ எனப்பட்டது. அரக்கினால் சிவப்பு புள்ளிகள் இடப்பட்ட வட்டினை நாக்குப் போல் வளைந்த நுனி கொண்ட கோலால் அடித்தனர். உலகப் புகழ் பெற்ற விளையாட்டான கோல்ப் (Golf ) விளையாட்டில் பயன்படுத்தப்படும் கோலும் நாக்குப் போன்றே வளைந்துள்ளது. நற்றிணை இவ்விளையாட்டு பற்றிய குறிப்பைத் தருகின்றது.

“வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை”  (நற்றிணை 341)


பந்தாட்டம்:

சங்ககாலத்தில் பெரிதும் விரும்பி விளையாடப்பட்ட விளையாட்டு பந்தாட்டம் ஆகும். பெரும்பாலும் பெண்களே இவ்விளையாட்டை விளையாடினர். இவ்விளையாட்டு வீட்டு முற்றத்திலும், மாடங்களிலும், மணல் மேடுகளிலும் ஆடப்பட்டது. நூலினால் செய்யப்பபட்;ட இந்தப் பந்தில் பல வேலைப்பாடுகள் இருந்தன. வானைத் தொடுமளவுக்கு பந்தை எறிந்தனர் என்ற செய்தியை குறிஞ்சிக் கலி (4:22-23, 21ஃ6-7) குறிப்பிடுகிறது. காலால் பந்தை உதைத்து விளையாடினர் என்பதை  நற்றினை (324:7-9) சொல்கிறது.

“தந்தை இடனுடை வரைப்பின்
ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி” - நற்றிணை 324-7

 நீரில் விளையாடப்பட்ட பந்தாட்டத்தை நீர்ப்பந்தாட்டம் என அழைத்திருக்கின்றனர்.


மொழி விளையாட்டு:

பல்வகை மொழி விளையாட்டுகள் அக்காலத்தில் விளையாடப்பட்டிருக்கின்றன. நன்கு வளர்ச்சியடைந்த மொழிகளிடையேதான் மொழி விளையாட்டுகள் காணப்படும். பொதுமக்கள் பேசும் மொழி பொதுமொழி எனப்பட்டது. புலவர்கள் மதிநலத்தால் பேசும் மொழி மதிமொழி எனப்பட்டது. மதிமொழியில் செதுமொழி, முதுமொழி, புதுமொழி என்னும் வகைகள் உண்டு.

புலவோர் செந்தமிழில் எழுதிய பாடல்கள் செதுமொழி எனப்பட்டன. பழங்காலப் புலவோர் மூதறிவால் எழுதிவைத்த பாடல்கள் முதுமொழி ஆயின. பின்னாளில் தோன்றிய புலவோர் திரிசொல்லும் கலந்து எழுதிய பாடல்கள் புதுமொழி எனப்பட்டன.

“பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை சூழ், புனல் ஊர! (கலித்தொகை 68)

மொழிக்கு விழாக் கொண்டாடிய முன்னோர் மொழி வழி விளையாட்டுகளையும் உருவாக்கினர். சிறியோரும் பெரியோரும் இவ்விளையாட்டுகளால் மகிழ்ந்தனர். அதன்வழி மொழியை வளர்த்தனர்.


  - பிசிமொழி விளையாட்டு:

பிசி என்பது விடுகதை. தொல்காப்பியம் இதனை இரு வகையாகக் கூறகின்றது.

“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் தோன்றுவது கிளந்த துணிவினானும் என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே” - தொல்காப்பியம் 3-478

ஒருவர் விடுகதை சொல்வார். மற்றொருவர் அதனை விடுவிப்பார். அல்லது எதிர் விடுகதை சொல்லி, அவரவர் விடுகதையை அவரவரே விடுவித்துச் சமனாக்குவார்.


 -  பிணைமொழி விளையாட்டு:

புதிதாகப் பிணைத்து இட்டுக்கட்டிச் சொல்வது பிணைமொழி. இதனைத் தொல்காப்பியம் பண்ணத்தி எனக் குறிப்பிடுகிறது.

“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே” செய்யுளியல், 180.

இதற்கு, ‘பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு’ என்று பேராசிரியர் உரை எழுதியிருக்கிறார்.

இக்காலப் பிணைமொழிக்கு ஓர் எடுத்துக்காட்டு,

எங்கே போகிறாய் - ஊருக்குப் போகிறேன்
என்ன ஊர் - மயிலாப்பூர்
என்ன மயில் - காட்டு மயில்
என்ன காடு - ஆர்க்காடு
என்ன ஆர் - அடையார்
என்ன வடை - ஆமை வடை
என்ன ஆமை - குளத்து ஆமை
என்ன குளம் - செட்டிகுளம்

விடை கிடைக்கும்வரை இப்படியே தொடர்ந்து விளையாடுவர்.


 - நாப்பயிற்சி விளையாட்டு:

நாவுக்கு உச்சரிப்புப் பயிற்சி தரும் விளையாட்டுகளைப் பேசுமொழி விளையாட்டாகக் கொள்ளலாம். இவற்றைச் சேர்ந்தாற்போல் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.

“ஓடுற நரியிலை ஒருநரி சிறுநரி, சிறுநரி முதுகிலே ஒருபிடி நரைமயிர்”

“மலையிலே ஒருகல் உருளுது புரளுது”

“கடலையிலே ஒருகல் உருளுது புரளுது, தத்தளிக்குது தாளம் போடுது”

“இது யாரு தச்ச சட்டை, எங்க தாத்தா தைச்ச சட்டை”

“ஊர் பூவரச மரமெல்லாம் என் பூவரச மரம்”   இதைத் திரும்பத் திரும்ப விரைவாகச் சொல்லும்போது 'ஊர்ப் புருசனெல்லாம் என் புருசன்' என வாய் குழறிவிடும் என்பர்.


ஓரையாடுதல்:

ஓரை என்பது சங்ககால இளம் மகளிர்; விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஓரை என்றால் ஒலி எழுப்புதல் என்று பொருள். இது
ஆரவாரம் எழுமாறு ஆடப்படும் ஆட்டங்களைக் குறித்ததாகக் கொள்ளலாம்.

கடல் அலை பாயும் மணலிலும், ஆற்று மணலிலும், சேற்று நிலத்திலும், முற்றத்தில் பரப்பப்பட்ட மணலிலும் இது விளையாடப்பட்டதாகச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆமை, நண்டு ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைத்து விளையாடுவது ஓரையாடுதல் என்ற விளையாட்டில் ஒருவகையாகும். இவ்விளையாட்டை ‘அலவனாட்டல்’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.

‘‘ஓரையாயத் தொண்டொடி மகளிர்’’ என ஓரையாடும் மகளிரை புறநானூறு 176 குறிப்பிடுகின்றது.

வண்டலிழைத்தல்:

வண்டலிழைத்தல் என்பது பழங்கால விளையாட்டுகளில் ஒன்றாகும். மணலை நீளமாகக் குவித்து அதில் ஒரு குச்சியையோ அல்லது விதையையோ மறைத்து வைப்பர். மற்றொருவர் இருகைகளையும் கொண்டு மூடிய மணலுக்குள் மறைக்கப்பட்டதைத் தேடி எடுப்பர். அவ்வாறு எடுத்துவிட்டால் எடுத்தவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவார்.

இவ்வாறு வண்டல் இழைத்த ஒருத்தி, வண்டலுக்குள் ஒரு புன்னை விதையைப் புதைக்கையில் தாய் அழைக்க, ஓடிவிடுகிறாள். பின் அவ்விதை முளைத்து மரமாகிறது. பின்னாளில் அதே மரத்தருகில் காதற் தலைவன் அணைக்க முற்படுகிறான். அவள் புன்னை மரத்தைக் காட்டி, ‘இதோ என் தங்கை, அவள் முன் இவ்வாறு செய்யலாகாது’ எனத் தடுக்கிறாள். இது நற்றிணை கூறும் ஓர் அழகிய காட்சி.

இவ்விளையாட்டு இப்போது “கிச்சுக் கிச்சுத் தாம்பளம்’’ எனக் கிராமப்புற மக்களால் அழைக்கப்படுகின்றது.



நீர் விளையாட்டுகள்.

பழங்காலத்தோர் நீர் விளையாட்டுகளுக்குப் பேரிடம் வழங்கியிருக்கின்றனர். இவ்விளையாட்டுகளைக் ‘களிநீராடல்’ என அழைத்திருக்கின்றனர். நீர் விளையாட்டுகள் பல, கட்டுரையின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. சில நீர் விளையாட்டுகள் பற்றி நோக்குவோம்.


 - புனல் நயந்து ஆடல்  (ளலnஉhசழnணைநன ளறiஅஅiபெ  நீச்சல் நடனம்):

இந்நீர் விளையாட்டு அக்காலத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கின்றது. கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்று நீர்த்துறையில், அரசன் கரிகாலன், அவன் மகள் ஆதிமந்தி முன்னிலையில், ஆட்டனத்தி என்ற நீச்சல் வீரனும், காவிரி என்னும் நீச்சல்மகளும் இணைந்து நீச்சல் நடனம் ஆடிக் காட்டினர் என அகநானூறு கூறுகின்றது.

“அத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் அணியை நீரில் மூழ்கிக்கொண்டு காலை நீருக்குமேல் தூக்கி ஆட்டிப் புரட்டிக் காட்டினான். வயிற்றில் கட்டிய ஆடை நழுவாமல் இருக்கக் கச்சம் கட்டியிருந்தான். அத்துடன் பாண்டில் என்னும் அணிகலனும் அணிந்திருந்தான். அந்தப் பாண்டில் அணியில் மணிகள் கோக்கப்பட்டிருந்தன. அந்த மணிகள் ஒலிக்கும்படி வயிறு மட்டும் மேலே தெரியும்படி உருண்டு ஆட்டிக் காட்டினான்.  இப்படி ஆடிய அத்தியோடு கூடி ஆடியவள்  காவிரி. அத்தியை விரும்பிய காவேரி நீரோட்டத்துடன் அவனை ஒளித்துக் கொண்டு சென்றாள்” என அகநானூறு மேலும் கூறுகின்றது.

“கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு” (அகம் 376)


 - பண்ணை:

மகளிர் நீரில் பாயும் விளையாட்டுக்குப் பண்ணை என்று பெயர்.

சங்க காலத்தில் ஆற்றங்கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி ஒருத்தி பண்ணை பாய்ந்தாள். அது மயில் ஒன்று விண்ணிலிருந்து மண்ணுக்குத் தோகை விரித்தபடி இறங்குவதைப் போன்றிருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயிலின் தோகையில் காணப்பட்ட வண்ணப்புள்ளிகளைப் போன்றிருந்தன என ஐங்குநூறு கூறுகின்றது.

“விசும்பிழி தோகை சீர் போன்றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே” – ஐங்குறுநூறு 74.

மரந்தை என்னும் ஊரில் சங்ககால மகளிர் கடலிற் பாய்ந்து விளையாடினர். அப்போது அவர்கள் அணிந்திருந்த பூக்கள் கடலலையில் மிதந்து வந்தன என நற்றிணை (395) கூறுகின்றது.

 - படகு விளையாட்டுகள்:

சங்ககாலத்தோர் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (rowing),  முன்படகு (canoeingஇ   வளிப்படகு (wind-surfing) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்தன. படகை அக்காலத்தோர் புணை என்றும் அழைத்தனர்.

படகை முன்புறமாகச் செலுத்துவதும், பின்புறமாகச் செலுத்துவதும் இக்காலத்திலும் உண்டு. முன்படகைத் தலைப்புணை என்றும், பின்படகைக் கடைப்புணை என்றும் அழைத்திருக்கின்றனர்.

“பலர் புணை செலுத்தி நீரில் விளையாடினர். தலைவன் செலுத்திய புணையை ஒருத்தி பின் தொடர்ந்தாள். அவன் தலைப்புணையில் முன்னோக்கிச் சென்றால் அவளும் தலைப்புணையில் முன்னோக்கி வந்து அவனைப் பின் தொடர்ந்தாள். அவன் கடைப்புணையில் பின்னோக்கிச் சென்றால் அவளும் கடைப்புணையில் பின்னோக்கிச் சென்று அவனைத் தொடர்ந்தாள். அவன் புணையைக் கைவிட்டு நீரோடு மிதந்து சென்றால், அவளும் அவ்வாறே செய்து அவனைத் தொடர்ந்தாள்” என்ற செய்தியைக் குறுந்தொகைப் பாடல் தருகின்றது.

“தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்” (குறுந்தொகை 222)


 - நீச்சல் பந்தாட்டம்:

இவ்விளையாட்டைக் காதலர் பெரிதும் விளையாடியிருக்கின்றனர். நீராடும் காதலர் ஒருவர்மீது ஒருவர் பந்தை வீசி விளையாடுவர். ‘பூநீர் பெய் வட்டம்’ என்று அந்தப் பந்து அழைக்கப்பட்டிருக்கின்றது. பலவகை வண்ண நீரினால் நிரப்பப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொள்வர். பந்து மோதியதும் உடைந்து வண்ண நீர் சிந்தும். இக்காலத்தில் வட இந்தியாவில் கொண்டாடப்படும் ‘கோலி’ விழாவை ஒத்ததாக இது காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்றும் மாமன் முறை கொண்டோர் மீது மஞ்சள் நீர் ஊற்றும் வழக்கம் காணப்படுகின்றது. இச்செய்தியைப் பரிபாடல் தெரிவிக்கின்றது.

“கண் ஆரும் சாயற் கழித் துரப்போரை
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்” (பரிபாடல் 11)

“உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப்
புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய..” (பரிபாடல் 12)


நிறைவுரை:

சங்ககால மக்கள் விளையாட்டின் வழியாகப் பெருமகிழ்வு கொண்டனர். ஒருவரோடு ஒருவர் இணக்கமாகக் கூடி வாழ விளையாட்டு பெருந்துணை செய்தது. நல்ல தோழியரையும் பாங்கர்களையும் (நண்பர்) விளையாட்டுகளே உருவாக்கின. போர் நிறைந்த அக்காலத்தில் உள்ளம், உடல் ஆகிவற்றின் வலிமைகளைப் பேண விளையாட்டுகள் பெரிதும் பயன்பட்டன. ஏறு தழுவல், மற்போர், வாட்போர் யானை, ஏற்றங்கள் என்பன சிறந்த வீரரை அரசருக்கும், மணப்பெண்களுக்கும் அடையாளம் காட்டின.

இக்காலத்தில் உலகெங்கும் போற்றப்படுகின்ற பல விளையாட்டுகள் வேற்றுலகத் தொடர்புகள் பெரிதும் அற்றிருந்த சங்ககாலத்திலும் விளையாடப்பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியம் தருகின்ற உண்மையாகும். குறிப்பாக பெரும் செல்வாக்கும் பெற்றிருக்கும் எழில் உலாவரங்கு (குயளாழைn ளூழற) சங்ககாலப் பெண்களால் நடத்தப்பட்டது என்பது பெருவியப்பளிக்கின்றது.

தற்போதைய உலகப்புகழ் பெற்ற விளையாட்டுகள் பல அக்காலத்தில் எம்மாலும் விளையாடப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இனம் சார்ந்து எம்மைப் பெருமைப்படுத்துபவனவாக உள்ளன.

ஒத்த தன்மை நிலவிய பண்டைய சமூகத்தில் வேளாண் சமூகநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கு வித்திட்டது என்பர். இச்சமூக மாற்றங்கள் விளையாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்தின. ‘உள்ளத்தில் உவகை ஏற்படுத்துதல்’ என்ற சமூகச் சமதன்மை நிலையில் இருந்து பொருளியல் தாக்கத்தினூடாக விளையாட்டு முறைகள் மாறத்தொடங்கின. பொருள் இழத்தலும் ஈட்டலும் சில விளையாட்டுகள் புகுந்துகொண்டன. வன்முறையின்றி சொத்துகளைக் கவரவும் சூது போன்ற விளையாட்டுகள் பயன்படுத்தப்பபட்டன. இந்த மாற்றங்களுக்கு அதிகாரமும் பொருளியற் சமச்சீரின்மையும் உதவின.

எம் பண்பாட்டு விழுமியங்கள் பலவற்றையும் சுமந்து சமூக ஒருமைப்பாட்டைப் பேணப் பயன்பட்ட பல விளையாட்டுகளை நாம் தெலைத்துக்கொண்டிருக்கின்றோம். பல தொலைந்தே போய்விட்டன. பெரும் பண விளையாட்டுகளும், உலகமயமாதலும் தனித்துவமான விளையாட்டு வடிவங்களை மெல்ல மெல்ல அழித்து வருகின்றன.

எம் தொன்மங்கள் சுமந்த இவ்விளையாட்டுகளை மீண்டும் மீட்டெடுக்க முடியுமா? என்பது ஐயமேயாயினும் அவற்றைப் பற்றிய வரலாற்றை அழியவிடாது பேணிக்காப்பது எமது கடன்.


ஆக்கத்திற்கு உதவிய நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை
பண்பாட்டு அசைவுகள்: தொ பரமசிவன்
தமிழர் நாகரிகமும் பண்பாடும்: முனைவர் அ. தட்சினாமூர்த்தி
பழந்தமிழர் விளையாட்டுகள்: முனைவர் இரா. குணசீலன்
சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்: சு. சிவகாமசுந்தரி
புறநானூறு
பரிபாடல்
நற்றிணை
பட்டினப்பாலை
அகநானூறு
குறுந்தொகை
புறநானூறு
h



Tuesday, December 1, 2015

நாம் தொலைந்து போகாதிருக்க....

 தமிழ், தமிழர், தமிழியல் பற்றிச் சற்றே ஆழமாகவும் இறுக்கமாகவும் கருத்துகளை முன்வைக்க முற்படுகின்றவேளை ‘இவர் ஒரு தமிழ் வெறியர்’ என எளிதாகச் சிலர் கூறிவிடுகின்றனர்.

கனடா போன்ற பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ முற்படுகின்ற தனித்துவமான இனங்கள் ஒவ்வொன்றும் தத்தமது அடையாளங்களைப் பேணுவதற்காகப் பெரும் போராட்டங்களை நடத்துகின்றன. தாம் சார்ந்த இனத்துக்குள்ளிருந்தும் புறச்சூழல்களிலிருந்தும் கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்குக் கனடா தமிழ்ச் சமூகமும் விதிவிலக்கல்ல.

அடையாளங்களைப் பேண ஏன் போராட வேண்டும்?

தாயகத்தில் வாழும்போது ஓர் இனத்துக்குள் அடையாளங்களைப் பேணுவதற்காகப் போராட வேண்டியதில்லை. அங்கே எங்கு காணினும் தமிழர், எத்திசை நோக்கினும் தமிழ்ச் சூழல். அடையாளங்களே வாழ்வாகி வாழ்வே அடையாளங்களாகக் கொண்ட தாய்ப்பெருநிலம் அது. நமக்கு அங்கே வேறு பணிகள் இருந்திருக்கும்.

கனடா முற்றிலும் மாறுபட்டதொரு புதியதளம். வண்ணமயமான வாழ்வியல் கவர்ச்சிகள் மிக்க அழகுப்புலம். போற்றிப் பொத்திப் பாதுகாக்கத் தவறின் சுய அடையாளங்கள் யாவும் தானாக நழுவி விழுந்துவிடும் அபாயம் நிறைந்த நிலம்.

கனடாவுக்கே உரித்தான ஒரு பொதுமைப் பண்பாட்டுச் சூழல் எங்கும் வலுவாகச் சூழ்ந்திருக்கின்றது. அது கொண்டிருக்கும் கவர்ச்சிகள் கணக்கற்றவை. சிறியோர், இளையோர், பெரியோர் என அனைத்துத் தரப்பையும் ஈர்த்து இழுத்து விழுங்கிவிட வல்லவை. காலங்காலமாக ஒவ்வோர் இனத்திலும் குறிப்பிட்ட தொகையினர் இந்தச் சூழலுக்குள் அகப்பட்டுத் தொலைந்து வருகின்றனர்.

கனடாவின் பொதுமைப் பண்பாட்டுச் சூழல் வேண்டத்தகாத ஒன்றல்ல. ஒவ்வோர் இனமும் பின்பற்ற வேண்டிய சிறந்த பண்புகளை அது கொண்டுள்ளது. அவற்றை எம்மால் முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது. புறக்கணிக்கவும் கூடாது. பல்லினத்தோடும் நாம் கூடி ஊடாடும் பொதுமை வட்டம் இதுவே. கனடாவில் வாழும் அத்தனை இனத்தாரும் இவ்வட்டத்தக்குள் இணைந்தவாறே கனடாவின் தேசியப் பண்பினை வெளிப்படுத்துவர்.

ஒவ்வோர் இனமும் இனமாக வாழ்ந்தவாறே கனடாவின் தேசிய நீரோட்டத்தில் வலுவாக இணைந்திருக்க வேண்டும். இதையே கனடாவின் பல்லினப் பண்பாட்டுக்கொள்கை வெளிப்படுத்துகின்றது.

ஆயினும் கனடியராகிவிட்ட சிலர் “நாம் இனிக் கனடியர், எமக்கு மொழி உட்பட தனித்துவ அடையாளங்கள் எதுவும் தேவையில்லை. ஆங்கிலமும் கனடிய மயப்பட்ட வாழ்வும் போதும்” எனக் கூறியவாறு வலிந்து அடையாளங்களைத் துறந்து தொலைந்து போகின்றனர். பொதுமைப் பண்பாட்டுக்குள் காணப்படுகின்ற, எம் பண்பாடுகளுக்கு ஒத்துவராத கவர்ச்சிகளுக்குள் கட்டுண்டு போகின்றனர். அவர்களைத் தொடர்கின்ற தலைமுறைகளும் இனவடையாளங்கள் ஏதுமின்றி கரைந்து காணாமற் போகின்றனர்.

இவ்வாறானோரை இனங்கண்டு பேச முற்படுகையில் “ இந்த நாட்டில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என சிந்திக்கவும் முடிவெடுக்கவும் எமக்கு உரிமை இருக்கிறது. தாய்நாட்டோடு எனக்கு எந்த உறவும் இல்லை. நாம் முழுமையான கனடியர். எம்மைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்கின்றனர்.

இவ்வாறானோரை எண்ணி வருந்துவதைவிட நாம் என்ன செய்ய முடியும்?

பல இனங்ககள் கலந்து வாழும் இச்சூழலில் ஒவ்வோர் இனமும் தனித்துவ அடையாளங்களைப் பேணி வலுவேடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே எம் இனஞ்சார் தேவைகளை இம்மண்ணில் வென்றெடுக்க முடியும்.

இனஞ்சார்ந்த எம் வலிமையான செயற்பாடுகளே,
அரச நிர்வாக அலகுகளுக்குச் சில பிரதிநிதிகளைத் தெரிவு செய்தமைக்கும்
தாயகம் சார்ந்த சாதகமாக முடிவுகள் சிலவற்றை அரசு மேற்கொண்டமைக்கும்
தமிழர் மரபுத்திங்கள் போன்ற தீர்மானங்களை அரச நிர்வாக அலகுகள் அங்கீகரித்தைமைக்கும் காரணங்களாகும்.

இவற்றை விட மிக முதன்மையான பணி தாயகம் நோக்கிய செயற்பாடுகளே. பரம்பரை பரம்பரையாக எம்மையும் எம்மினத்தையும் தாங்கி வளர்ந்த அந்தப் பெருநிலத்தைப் போற்றிப் பேண வேண்டியது எம் வரலாற்றுக் கடன். வறியோரையும் பாமரரையும் கணிசமாகக் கொண்டுள்ள எமது தாயகம் அரசை விடப் புலம்பெயர்ந்தோரான எம்மையே பெரிதும் நம்பியிருக்கின்றது. இனஞ்சார்ந்த ஒருங்கிணைப்பு இன்றி இவற்றை எம்மால் நிறைவேற்ற முடியுமா?

தாயகத்தில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியபோது ஓரிரு நாட்களுக்குள் சில மில்லியன டொலர்களைச் சேகரித்தனுப்பிய எமகு சமூக இறுக்கம் சாதனையாக நோக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் அந்த மக்களை ஓரளவேனும் வழமையான வாழ்வுக்கு மீட்டெடுத்தோரும் புலம்பெயர்ந்தோரே.

மற்றுமோர் பேரழிவு தாயகத்தில் எக்காலத்திலும் எவ்வடிவத்திலும் ஏற்படலாம். அவ்வேளை எம்மையன்றி அவர்களைக் காக்க யாரிருக்கின்றனர்?

புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் நாம் கொண்டிருக்கும் இனஞ்சார்ந்த வலிமையான கட்டமைப்பே எம்மையும் எம் தாயகத்தையும் எக்காலத்திலும் காக்கவல்லது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இவ்வாறு இறுக்கமான கட்டமைப்பு மிக்க சமூகமாக வாழ்வதாலேயே சீக்கிய இனத்தோரில் அறுவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மூவர் அமைச்சர்களாகவும் உருவெடுத்திருக்கின்றனர். சீனர்களும் இவ்வாறே.

வலிமையான பிணைப்பைக் கொண்ட இனஞ்சார் வாழ்வு எத்துணைப் பயன்மிக்கது என்பதை ஓரளவு உணர்ந்திருப்பீர்கள்.

எமது இயந்திரத்தனமான வாழ்வோட்டத்தினிடையே சமூக ஒருங்கிணைவு பற்றிச் சிந்திக்கப பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அனைத்துத்; தரப்பினரும் பரபரப்பாகவே இயங்குகின்றனர். ஆற அமர சமைத்துண்ண நேரம் இல்லாமல் உணவகங்களிலும் பதப்படுத்தபட்ட உணவுப் பைகளிலும் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்குச் சமூகஞ்சார் செயற்பாடுகளைச் சிந்தித்துச் செயற்படுத்த நேரம் உண்டா?

இத்தகையோருக்கு இனஞ்சார்ந்த செயற்பாடுகளை விளக்குவதுவும் இனவடையாளம் பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதுவுமே எமது பணி. வெறி கொண்டு வேகமாய் நாம் இயங்கும்போதே இச்செய்திகள் சிலரையேனும் சென்றடைகின்றன.

இதற்காகவே நாம் போராடுகின்றோம். இளைய தலைமுறையை நோக்கி வலிமையான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். எம்மால் ஓய முடியாது. ஓய்ந்துவிடக் கூடாது. இப்பணியில் தொய்வோ இடைவெளியோ ஏற்படுமாயின் நாம் சிலரையேனும் முற்றிலுமாக இழந்துவிடுவோம்.

இப்பணி அரசியலுக்கு அப்பாற்பட்டது. உள்நோக்கங்கள் அற்றது. பதவிகளையோ விருதுகளையோ இலக்கு வைக்காதது. இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காது களமிறங்கிப் பணியாற்றுவோராலேயே நோக்கங்களைச் சென்றடைய முடியும்.

இதுவரையும் இனஞ்சார்ந்த சமூகச் செயற்பாட்டின் முக்கியத்துவம் கூறப்பட்டது.

இவற்றோடு நாம் தமிழர் என எம்மை வெளிப்படுத்தி வாழ்வதில் உள்ள பெருமைகளையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனங்கள் கூடத் தம் அடையாளங்களைப் பேணுவதிலும் வெளிப்படுத்துவதிலும் வெறியோடு செயற்படுகின்றனர். இவ்வுலகில் எப்போது தோன்றினோம்
என்ற காலக்கணிப்பு இல்லாத இனத்தோர் நாம். விபரம் தெரிந்தவரையில் வாழ்கின்ற எல்லா இனங்களுக்கும் தோன்றிய காலம் தெரிந்திருக்கின்றது, எம்மைத் தவிர.

இவ்வுலகில் தமிழர் முதற்குடிகளா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் இப்பூமியின் பழங்குடிகள் என்பது பேருண்மை.

‘நான் இந்த நாட்டின் குடிமகன் அல்லது குடிமகள்’ என எழுதி கழுத்தில் தொங்கவிடும் பெயரட்டடை நாடு விட்டு நாடு பெயரும் போது மாறவல்லது. ‘நான் இந்த மதம்’ என எழுதித் தொங்கவிடும் பெயரட்டையும் மதம் மாறும்போது மாறவல்லது.

உயிரணுக்களோடும் உணர்வோடும் தோலோடும் இரண்டறக் கலந்திருக்கும் இனவடையாளத்தை யாரால் எவ்வாறு மாற்றவியலும்?

இவ்வலகில் எம்மைத் தனிமனிதராகவும் இனமாகவும் பெருமைப்படுத்தவல்ல பேரடையாளம் நாம் தமிழரென்பதே. இதைத் துறந்தோ மறந்தோ செல்ல முற்படுகின்ற ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக்கொள்பவராவர்.

இத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கே அமைப்பு சார்ந்த செயற்பாடுகளாக தமிழர் மரபுத் திங்கள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்த நிகழ்வுகள் முழுமையான பெருவடிவம் கொள்ள நிதிவளமும் ஆட்பலமும் தேவை. இச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாற்றுப்பயன் கருதாமல் பலரும் இணைவோமேயாயின் தோன்றவிருக்கும் ஒவ்வொரு தலைமுறையினையும் நாம் போற்றிப் பாதுகாக்க முடியும்.

--பொன்னையா விவேகானந்தன்

கனடா தாய்வீடு மார்கழி இதழில் வெளிவந்த கட்டுரை.