Monday, December 22, 2014

சங்ககாலத்தில் நட்பு


இலக்கியங்கள் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறப்பிடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை, கணவன்- மனைவி  என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உயர் உறவு நட்பாகும். நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களை ஒதுக்கியிருக்கின்றது.

“நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்றும், "அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு" என்றும், "இடுக்கண் களைவதாம் நட்பு" என்றும், "கொட்புன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்றும் நட்புப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார் வள்ளுவர்.

உறவுகளை ஒதுக்கும் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நாலடியாரால் கூட நட்பை விட்டுவிட முடியவில்லை. நட்பிற்காக நாலடியார் மூன்று அதிகாரங்களை வழங்கியிருக்கின்றது.

இந்த அற இலக்கியங்கள் கூறும் நட்பிற்கு முன்னோடியாக அமைந்தவை சங்க இலக்கியங்களே. மன்னனுக்கும் மக்களுக்கும் நெருக்கமான உறவிருந்த அக்காலத்தில் பெரிதும் புலவர்களே மக்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். அரசருக்கு அறிவுரை வழங்குவோராயும், நல்லறிவு சான்ற தூதாகவும் இயங்கினர். இவ்வகையால் மன்னருக்கும் புலவர்க்கும் இருந்த உறவுகள் நெருக்கமடைந்து நல்நட்பாயின. சங்கப் புலவோர் பலர் தம் நட்பை இலக்கியங்களில் அழகுறப் பதிவு செய்துள்ளனர்.

இப்பதிவுகள் வாயிலாகச் சங்ககாலத்து நட்புணர்வை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அவ்வை - அதியமான்

தமிழ்நாட்டின் வடமேற்காக அமைந்திருந்த தகடூர் என்ற பகுதியை அதியமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.

அதேபோன்று தமிழ்நாட்டின் வடகிழக்கில் காஞ்சியைத் தலைநகராக் கொண்டு தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி செய்து வந்தான்.

அதியமானுடன் போரிட்டு வென்று அவன் மண்ணைக் கைப்பற்ற வேண்டும் என்பது தொண்டைமானின் பலநாள் கனவு. போருக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

புலனாய்வாளர் வழியாக அதியமானுக்கு இச்செய்தி எட்டி விடுகின்றது. பெருவீரனாயினும் போரில் விருப்பற்றவன் அதியமான். போரைத் தவிர்க்கவே அதியன் விரும்பினான். அவையைக் கூட்டி கருத்துகள் கேட்டான். தொண்டைமானுக்குத் தூது அனுப்புவது என அவையில் முடிவாயிற்று.

அதியமானுடன் நெருக்கமான நட்புபைக் கொண்டிருந்த அவ்வை எழுந்தாள். காஞ்சிக்குச் சென்று இளந்திரையனைக் கண்டு அமைதிக்கு வழிவகுத்து வருகின்றேன் என்றாள்.

தொண்டைமான் அவையிலும் அவ்வைக்குப் பெருஞ்செல்வாக்கு. அவ்வையை வரவேற்று சிறப்புச் செய்த தொண்டைமான் தன் படைபலத்தை அவ்வைக்குக் காட்ட விரும்பினான். அவ்வை அதியனுக்கு மிக நெருக்கமானவள் என்பதை தொண்டைமான் நன்கறிவான். அவ்வை வழியாகத் தன் படைகளின் பலத்தை அதியனுக்கு உணர்த்தவே இந்த முயற்சி.

தொண்டைமானின் படைக்ககலங்களைப் பார்த்தாள் அவ்வை. போர் ஆயுதங்கள் பலவும் அங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஆயுதங்கள் புதிதாகவும் நெய் தடவி மினுமினுப்பாகவும் காணப்பட்டன. மயில் இறகும், ப+மாலைகளும் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன. இவ்வாயுதங்களைப் பெருமிதத்தோடு அவ்வைக்குக் காட்டினான் திரையன்.

திரையனின் திமிர் அவ்வைக்குப் புரிந்தது. அவ்விடத்தே ஒரு செய்யுளை இயற்றினாள். திரையனின் உணர்வுக்குள் உறையும்படி பாடிக்காட்டினாள்.

“பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி செய் அணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே , அவ்வே
பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில்..”

இங்கே உன் ஆயுதங்கள் எல்லாம் மயில் இறகாலும் பூக்களாலும் அழகாக்கப்பட்டுள்ளன. துருப்பிடிக்கா வண்ணம் நெய் தடவி பளபளப்பாகவும் உள்ளன. ஆனால் பார், அதியனது ஆயுதங்கள் குருதியில் நனைந்து பகைவர்களின் சதைகள் ஒட்டி நிறம் மாறிக்கிடக்கின்றன. அவை முனை மழுங்கிக் கொல்லனின் பட்டறையில் சரிசெய்வதற்காகக் குவிக்கப்பட்டிருக்கின்றன.

பல களம் கண்ட அதியனின் வீரத்தை இதைவிடச் சுருக்கமாக திரையனுக்கு விளக்கியிருக்க முடியாது. தன்னைப் புகழ்வது போல் இகழ்ந்தும் அதியனை இகழ்வதுபோல் புகழ்ந்தும் அவ்வை உணர்த்திய் குறிப்பைத் திரையன் புரிந்து கொண்டான்.

அவ்வைக்கும் அவள் கருத்துக்கும் மதிப்பளித்தான் தொண்டைமான். சிறப்புகள் செய்து அவளைத் தகடூருக்கு அனுப்பி வைத்தான். அதியனோடு போரைத் தவிர்த்து நட்புக் கொண்டான்.

அதியமானுடன் மிக ஆழமான நட்பைக் கொண்டிருந்த அவ்வை நட்பின் உரிமையோடு ஒரு போரைத் தவிர்த்தாள். மண்ணையும் மக்களையும் காத்தாள்.

உயிர்காக்கவல்ல நெல்லிக்கனியைத் தான் உண்ணாது தமிழால் ஆகியிருந்த அவ்வைக்குத் தந்த நட்புரிமை அதியமானுக்கு உரியது. போரொன்றில் அதியன் இறந்தபோது அவ்வை பாடிய “சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே...” என்ற பாடல் பெரும் துயரம் செறிந்தது. அவ்வையும் அதியனும் கொண்டிருந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்த வல்லது.



கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையர்

இலக்கியங்கள் இன்றுவரை போற்றிக் கொண்டாடும் நட்பு பிசிராந்தையர் என்ற புலவருக்கும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுக்கும் இடையிலானது.

பாண்டிய நாட்டிலே பிசிர் என்ற ஓர் ஊர் இருந்தது. இந்த ஊரிலே வாழ்ந்த ஒரு புலவரின் பெயர் ஆந்தையார். ஊரின் பெயரைக் கூடவே இணைத்து தன் பெயர் கொள்வது அக்கால புலவோர் வழக்கம். இவரும் பிசிராந்தையர் ஆனார்.

இவரது நாடு பாண்டிநாடு ஆயினும் சோழ மன்னனான கோப்பெருஞ்சோழனின் நல்லியல்புகளைக் கேள்வியுற்று அவன் மேல் பேரன்பு கொண்டார். தமிழ்மேல் பெருங்காதல் கொண்ட சோழன் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவன். புலவோரைப் போற்றுவதிலும் உயர்ந்தவன். இத்தகைய ஒரு மன்னன் மீது தமிழ்ச்சான்றோர் பேரன்பு கொள்வது இயல்பே.

பிசிர் என்ற ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது சோழனின் உறையூர். சோழனைக் கண்டு வர பிசிராந்தையரால் முடியவில்லை.

அக்காலத்தில் சிறந்த செய்யுள்களை இயற்றிப் புகழ்பெற்றிருந்தார் பிசிராந்தையர்.

“யாண்டு  பலவாக  நரையில வாகுதல்
 யாங்காகியர்  என வினவுதிராயின், .....”

என்று தொடங்கும் இவரது செய்யுள் பெரும் புகழ் பெற்றது. இவை யாவற்றையும் செவியற்ற சோழனும் பிசிராந்தையர் மீது பெரும் அன்பு கொண்டான். பாண்டி நாட்டுக்குச் செல்வோர் வாயிலாகத் தன் அன்பைப் புலவருக்குத் தெரிவித்துவந்தான்.

இந்நிலையில் கோப்பெருஞ்கோழனது கொடையும் புலவரைப் போற்றும் மாண்பும் அவனது புதல்வர்களுக்கு எரிச்சலை மூட்டியது. தந்தையோடு போரிட்டு அரசைக் கைப்பற்றத் தயாராயினர். சூழ்ச்சிகளோடு கலந்து மூண்ட போரில் தன் புதல்வரைக் எதிர்க்கத் தயாரான கோப்பெருஞ்சோழனை புலவர் எயிற்றியனார் தடுத்தார். ‘மன்னா நீ மறைந்த பிறகு இந்த நாடு யாருக்கு? அவர்களுக்குத்தானே’ என உணர்த்தினார்.

புதல்வர்களை மன்னித்து அவர்களுக்கு அரசை வழங்கிவிட்டு வடக்கிருந்து உயிர்நீக்கப் புறப்பட்டான் சோழன்.

இந்த செய்திகள் எதுவும் பிசிராந்தையருக்குத் தெரியாது.

வடக்கிருக்கச் சென்ற சோழன் உடன் சென்ற பலவர் பொத்தியாரை நோக்கி, பொத்தியாரே, என் நண்பர் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். அவரிடம் என் அன்பைத் தெரிவித்துவிடுங்கள் என்றான்.
“மன்னா அது எப்படிச் சாத்தியம்? இங்கு நடந்த எதுவும் அவருக்குத் தெரியாதே?”
“அவர் நிச்சயம் என்னைக் காண வருவார்” என்றான் சோழன் உறுதியுடன்.

நட்பின் மிகுதியால் மன்னர் கருத்திழந்து பேசுகின்றார் என அருகிருந்த சான்றோர் தமக்குள் பேசிக்கொண்டனர். இது மன்னன் செவியில் விழுந்தது.

“பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.”  (புறம் 215)

“பிசிர் எனும் ஊரைக் கொண்டோன் நான் செல்வச் செழிப்போடு இருந்தவேளை என்னைக் காண வருபவன் அல்லன். நான் துன்பமுற்றிருக்கும் வேளையிலேயே வரக் கூடியவன். நிச்சயமாக வருவான்” என்றான் மன்னன்.

கூட இருந்தோர் அனைவரும் அதை நம்பவில்லை ஆயினும் மன்னன் வேண்டுகோளை ஏற்றனர்.

நீரும் உணவும் இன்றி வடக்கிருந்து உயிர்நீத்தான் சோழன். அரசன். இறந்த ஓரிரு நாட்களில் அவன் கூறியதைப் போன்றே பிசிராந்தையர் அங்கு வந்தார். அவர் வரவு கண்டு எல்லோரும் வியந்தனர். நடந்ததைக் கூறினர். ஆறாத் துயர் கொண்டார் பிசிராந்தையர். மரணத் தறுவாயிலும் மன்னன் கொண்டிருந்த நடபின் ஆழம் அவரைத் துயரத்தின் எல்லைக்கு இட்டுச் சென்றது.

மன்னன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்திற்கு இருகே தானும் வடக்கிருந்து உயிர்நீத்தார்.

கண் கொண்டு காணாத இருவரின் நெஞ்சார்ந்த நட்பின் ஆழத்தை பொத்தியார் துயரம் சொரியப் பாடினார்.

“இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக
இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்
வருவன்  என்ற  கோனது  பெருமையும்
அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்
வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே." (புறம் 217)

புகழ் மேம்பாடு அடையும்படியாக நட்பையே பற்றுக்கோடாகக் கொண்ட “மன்னன் நல்லதொரு பொழுதில் என் நண்பரான பிசிராந்தையர் இங்கு வருவார்” என்றான். இவ்வாறு உரைத்த மன்னனமு பெருமையும், மன்னன் கூற்று பொய்க்காவண்ணம் வந்துசேர்ந்த பிசிராந்தையரின் அறிவும் பெரு வியப்பைத் தருகின்றது.

காலம் உள்ளவரை போற்றப்படவல்ல இலக்கிய நட்பு இதுவெனச் சான்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

பாரி – கபிலர் 

பாரியின் அரசவை. பாரின் கொடை வேண்டி உழவர் மூவர் அவைக்கு வருகின்றனர். அவர்கள் குறை கேட்டு கொடை வழங்க ஆணையிடுகின்றான் பாரி. வந்தோர் மூவரும் மூவேந்தர். பறம்புமலையேறிப் பாரியை வெல்லமுடியாதிருந்த மூவரும் போலி வேடதாரிகளாய் அவைக்குள் நுழைந்திருந்தனர். மூவரும் மறைத்து வைத்திருந்த கைவாளால் பாரியை நெருங்கிக் குத்தி விடுகின்றனர். மூவரையும் சூழ்ந்த வீரரை விலக்கி, “கொடை கேட்டு வந்தவர்கள், கொல்லுதல் ஆகாது. பத்திரமாய் வழியனுப்பி வையுங்கள்” என மரணத் தறுவாயிலும் தன் வீரர்களுக்கு ஆணையிடுகின்றான் பாரி.

இத்துயர் காணப் பொறுக்காது அருகிருந்த அருமை நண்பர் கபிலர் குத்துவாள் கொண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முற்படுகின்றார். கையசைத்து ‘ஓழிக’ (தற்கொலை செய்வதைத் தவிர்க்க.) எனக் கூறிக் கபிலரைத் தடுத்து அவரது கடமைகளை உணர்த்தி அவையிலேயே தன் உயிரை விடுகின்றான் பாரி.

பாரியோடு தானும் மாண்டு போகவில்லையே என்று மனமுடைந்து போகின்றார்  கபிலர்.

பறம்புமலையை ஆண்ட குறுநில மன்னன் பாரியின் கொடைத்திறன் அவன் காலத்திலேயே தமிழகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது. ஒரு குறுநில மன்னன் தம்மிலும் புகழ் பெறுவதைப் பொறுக்காத சேர, சோழ, பாண்டியர் பாரியை போருக்கழைத்தனர். மலைமேல் இருந்த பாரியை முற்றுகையிட முடிந்ததே தவிர நெருங்க முடியவில்லை.

பாரியைத் தவிர யாரையும் பாடாத பாரியின் நண்பரான கபிலர் மூவரையும் சந்திக்கின்றார். “பாரி பெருங் கொடைவள்ளல், இரந்து கேட்டால் பறம்பையே தாரை வார்த்து விடுவான். இதற்கு ஏன் இவ்வளவு முற்றுகை” என இச் செய்யுள் வழி கூறுகின்றார்.

கடந்து அடுதானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே,
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே    (புறம்-110)

நீங்கள் மூவரும் கூடி நின்றாலும் பறம்பு நாட்டைக் கைப்பற்றுவது அரிதான செயல். இப்போது பாரியிடம் நாடு இல்லை. ஊரெல்லாம் பரிசாகக் கொடுத்து விட்டான். மலைதான் உண்டு. மலை நிகர்த்த பாரி உண்டு. இடையில் தான் உண்டு. யார் வேண்டுமானாலும் ஆடுநர் பாடுநராகச் சென்று வேண்டினால் பாரி தன்னையே ஈவான். மலையே வேண்டினும் நல்குவான். என்றார்.

பாரியின் கொடைக் குணத்தையே அவன் கொலைக்குப் பயன்படுத்தி விடுகின்றனர் மூவரும்.

பாரி இறந்தபிறகு பாரியின் பிள்ளைகளான அங்கவையையும் சங்கவையையும் பாதுகாக்கும் பொறுப்பு கபிலருக்கு வந்துவிடுகின்றது. பாரியைத் தவிர பிறரைப் பாடாத வாயால் இந்த மகளிருக்காக பிற வேந்தரையும் பாடுகின்றார் கபிலர்.

பல வேந்தர் பாரியின் புதல்வியரை மணம் முடிக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் துயரம் நீண்டுகொண்டிருந்தது.

“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில் வென்று எறிமுரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே”

அன்றொரு நாள் முழுநிலவில் எம் தந்தையும் இருந்தார். எம் குன்றும் எம்மோடிருந்தது. இன்றைய நாள் இந்நிலவில் முரசறைந்த வேந்தர் எம் குன்றைக் கொண்டார். எம் தந்தையும் இப்போது இல்லை.

பாரி மகளிரின் குரலாகக் கபிலரே இப்பாடலைப் பாடுகின்றார்.

இந்த இரு பெண்களையும் அழைத்துக்கொண்டு குறுநில மன்னனான இருங்கோவேளிடம் செல்கின்றார். தான் பாரியின் தோழன் எனக் குறிப்பிட்டு, மகளிரை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றார்.

“..............................................................
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாமப் பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர்என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே!”  (புறம் 201)

மூவேந்தரோடும் முரண்பட விரும்பாத இருங்கோவேள் மகளிரை ஏற்க மறுத்து விட்டான்.

பாரியின் மகளிரை யாருக்குத் திருமணம் செய்து வைத்தார் என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. ‘பகைவர் எளிதில் அணுகாத பார்ப்பனர் இடத்தே பாரியின் பெண்களைப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டு, மனச்சுமை நீங்கினார் கபிலர்’ எனத் தன் புறநானூற்று உரையில் ஒளவை துரைசாமிப்பின்ளை குறிப்பிடுகின்றார்.


திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக்கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

தன் கடமைகளை முடித்த பிறகு பாரியை மனதிற் கொண்டு உயிர் விடத் துணிகின்றார் கபிலர். திருக்கோவிலூர் அருகே உள்ள வடபெண்ணை ஆற்றுக்கருகில் சிறு குன்றைக் கண்டு அதில் தீ மூட்டி  உயிர் துறக்க முடிவு செய்கின்றார்  அவ்வேளை அவரது மரண வாக்குமூலமாக எழுகின்றது இப்பாடல்.

“கலை உணக் கிழிந்த ......
........................................
யான் மேயினேன் அன்மையானே  ஆயினும்,
இம்மைபோலக் காட்டி, உம்மை
இடைஇல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே” (புறம்-236)

என் இனிய பாரியே, என்னை நீ பல ஆண்டுகள் பேணிப்
பாதுகாத்தாய்;. அக்காலமெல்லாம் நீ என்னோடு உயிரோடு கலந்த  நட்புக்கொண்டிருந்தாய்.  ஆயினும், நீ இவ்வுலகை விட்டுப் பிரியும் வேளை
என்னையும் உன்னோடு உடன்வரவிடாது “இருந்து வருக”
எனக் கூறிப் பிரிந்தாய்;.  இதனால் நீ என்னிடமிருந்து வேறுபட்டாய்.  நான்  உனக்குப் பொருந்தாதவன் போலும்;. எவ்வாறாயினும் ஆகட்டும்.  இனி,
இப் பிறப்பில் நம்மிருவரையும் கூட்டி ஒன்றிய நட்பால் உயர் வாழ்வு
வாழச்செய்த நல்லூழ், மறுமையிலும் உன்னோடு உடனுறையும் வாழ்வை
நல்குவதாக”  எனக் கூறிவிட்டு தீயிற் கலந்து உயிர் நீத்தார் கபிலர்.

இன்றும் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் ‘கபிலர் குன்று’ என்றும் ‘கபிலக் கல்’ என்றும் கூறுகின்றனர்.

பல இலக்கியக் குறிப்புகள் கபிலர் பிராணம குலத்தவர் எனக் குறிப்பிட்ட போதும், வருண பாகுபாடுகளுக்து அப்பாற்பட்ட தூய்மையான தமிழ்ச் சான்றோனாகவே கபிலர் வாழ்ந்திருக்கின்றார். பாரியோடு உயிர் துறக்க முயன்று முடியாது போகவே,  தன் பணிகளை நிறைவு செய்யும் வரை காத்திருந்து பிறகு பாரிக்காகவே உயிர் துறக்கும் அவரது நட்புணர்பு மிக உயர்வானதாகப் போற்றப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட செய்திகள் யாவும் புலவோருக்கும் அரசருக்குமிடையேயான நட்புறவை மட்டுமே சுட்டுகின்றன. இலக்கியங்களை ஆக்கியவர்கள் புலவர்கள் என்பதால் அவர்களைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள் மட்டுமே பெரிதும் பதிவு செய்யப்பட்டுள்ன. மன்னர்களுக்கிடையே ஆழமான நட்புறவு இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடவில்லை. போரை முன்னிட்டும், அரசியலை முன்னிறுத்தியும் சில அரச உறவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தலைவியும் தோழியும்

சங்க இலக்கியத்தில் நட்புக்கு இலக்கணமாகத் திகழும் மற்றுமொரு உறவு தலைவிக்கும் தோழிக்கும் உரியதாகும். சங்ககால இலக்கியங்களில் அக இலக்கியங்கள் தனிச்சிறப்புப் பெறுவன. காதல் உணர்வு சான்ற தலைவன் தலைவி என்னும் இரு பாத்திரங்களுக்கிடையேயான உணர்ச்சிப் பெருக்கின் பல்வகை வெளிப்பாடே அக இலக்கியத்தின் கருப்பொருள் ஆகின்றது. வாழிடத்திற்கேற்ப, தொடர்புபடுகின்ற பொருட்களும் காட்சிகளும் வேறுபடுகின்றனவே அன்றி, கருப்பொருளாகிய காதலில் மாற்றமில்லை.

காதல் வயப்பட்ட ஆண் பெண் இருவரையும் தலைவன் தலைவி என அழைப்பது அக இலக்கிய மரபாகும். இவர்கள் பொதுமக்களாகவோ அரச குலத்தவராகவோ இருக்கலாம். இவர்களோடு நட்பாகவிருக்கும் தோழன் தோழியரை இலக்கியம் பாங்கன் பாங்கி எனக் குறிப்பிடுகின்றது.

இந்தக் காதல் களத்தில் தலைவியோடு பெரிதும் உடனிருக்கும் பாத்திரம் தோழியாவாள். அதிகாரத்திலும் வலிமையிலும் மேம்பட்டிருந்த ஆணாகிய தலைவனோடான காதலை வழிநடத்தி, அதை திருமணம் வரை கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றாள் தோழி.

இச்செறித்தல் (வீட்டிற்குள் பெண்ணைக் காத்தல் ) போன்ற கட்டுப்பாடுகளுக்குள் வாழுகின்ற தலைவி தன் உணர்வுகளைப் பகிரவும், காதற் தூதாகச் செல்லவும், ஊரறியாமல் காதலைக் காக்கவும் தோழியே பெரிதும் பயன்பட்டிருக்கின்றாள்.

தோழியின் சான்றாமையைப் புலப்படுத்தும் சில இலக்கியக் காட்சிகளை நோக்குவோம்.

புறநானூறு இலக்கியத்தில் ஒரு காட்சி.

 அது மலை சூழ்ந்த நிலம். காலம் நள்ளிரவாகிக் கொண்டிருந்தது. தலைவன் வருகைக்காகத் தோழியோடு காத்திருக்கின்றாள் தலைவி. தோழியின் மனதில் சில சிந்தனைகள் தோன்றின.

பேசத் தொடங்குகின்றாள்.

“தலைவியே,  அவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கின்றான். அவனைச் சந்திக்கும் போதெல்லாம் நீயோ மொழி பேச மறந்துவிடுகின்றாய். இன்று நீ தலைவனைச் சந்திக்க வேண்டாம். நான் போய்ப் பேசி வருகின்றேன்.”

தலைவி சம்மதம் தெரிவிக்க, தோழியே தலைவனைச் சந்திக்கப் போகின்றாள்.

தலைவன் வருகின்றான். தலைவியை அங்கும் இங்கும் தேட, எதிர்ப்பட்டாள் தோழி;.

“எங்கே தலைவி?”
“உடல் நலமில்லை இன்று வரமாட்டாள்.”
“அப்படியா நான் சென்று வருகின்றேன்.”
“கொஞ்சம் பொறுங்கள், நான் சில வார்த்தை பேச வேண்டும்.”
“என்ன?”

மூங்கில் வேலிகளால் சூழப்பட்ட வேரில் பழுக்கின்ற பலாமரங்களைக் கொண்ட மலைச்சாரல்களை உடைய நாட்டைச் சேர்ந்தவனே, நான் சொல்வதைக் கேள்.

எப்போது என்ன நடக்கும் என்பதை யாரும் அறிந்தவர் இல்லை. சிறு காம்பிலே தொங்குகின்ற பெரிய பலாப்பழத்தைப்போன்று அவள் உயிரும் காதலும் இருக்கின்றது. காம்பைப் போன்றிருக்கின்றது அவள் உயிர். உன்னால் ஏற்படுத்தப்பட்ட காதல் நோயோ பலாப்பழம் போன்று பெருத்திருக்கின்றது.

“வேரல் வேலி வேர்கோட் பலவின்  
சார னாட செவ்வியை யாகுமதி    
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.”  (புறம் 18)

தோழி தலைவனுக்குக் கூறிய வார்த்தைகள் இவ்வளவே. ஆனால் உட்பொதிந்திருக்கும் ஆழம் மிகப் பெரிது.

தலைவா, நீ கொடுத்த காதல் நோய் பலாப்பழம்போல் பெருத்துவிட்டது. உரிய நேரத்தில் உரியவரால் அப்பழம் பறிக்கப்படாவிட்டால், எந்த நேரத்திலும் காம்பு அறுந்து விடலாம். அதாவது காதல் கனம் தாங்காது எவ்வேளையிலும் அவள் உயிர் விடலாம். காம்பு அறுந்து விழும் பழமானது ஊரெங்கும் மணம் பரப்புவதைப் போல் அவள் இறப்பின் காரணம் ஊரெங்கும் பரவி உனக்கும் இழுக்கை ஏற்படுத்தும்.

சிலவேளை இப்பலாபழச் செய்தி உனக்குப் புரியாமலிருக்கலாம் ஏனெனில், வேலிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உன் நாட்டுப் பலாமரங்கள் வேரிற்தானே பழுக்கின்றன.

எனவே இனியும் காலம் தாழ்த்தாதே, விரைந்து திருமணம் செய்.

ஐந்தே அடிகளால் தலைவனுக்கு இத்தனையையும் உணர்த்திவிட்டுத் தோழி போய்விடுகின்றாள்.

வெகு பண்புடனும், மிக நுட்பமாகவும், சுருங்கிய சொற்களாலும் ஆழமானதொரு செய்தியை அழுத்தமாகக் கூறிவிட்டுச் சென்ற தோழியின் பேரறிவு இன்றுவரை வியப்போடு நோக்கப்படுகின்றது.

மற்றுமொரு பாடலில் தலைவனை நோக்கிப் பேசும் தோழி வெளிப்படுத்தும் கருத்துகள் தலைவியின் நல்வாழ்வு மீது அவள் கொண்ட அதீத அக்கறையைப் புலப்படுத்துகின்றது.

இக்காட்சியிலும் தோழியே தலைவனை எதிர்கொள்கின்றாள். கூறவேண்டியவற்றை நேரடியாகவே வெளிப்படுத்தகின்றாள்.

நீ அவளைக் காண்பதற்காக எடுத்துக்கொள்ளும் கால இடைவெளி அதிகமாக இருக்கின்றது. அது அவளை வருத்துகின்றது. தலைவியின் தோள்களில் கண் மயங்கிக் கிடத்தலை நீயும் விரும்புகின்றவன். ஊரின் சான்றோர் தலைவி மீது அன்பு கொணடவராயினும் பழியோடு வருகின்ற இன்பத்தை விரும்பமாட்டார்கள். விண் முட்டும் மலைகளைக் கொண்ட நாட்டை உடையவனே, அவளை முறைப்படி மணம் செய்து கொள்ளத் தயங்குவது ஏன்?

“நாள்இடைப் படின் என்தோழி வாழாள்
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
வரையின் எவனோ? வான்தோய் வெற்ப”  (பா.112.9-13)

தன் தலைவியின் காதலுக்காகத் தலைவனிடம் போராடுகிறாள் தோழி. திருமணத்திற்கு முன்பதான  களவு ஒழுக்கம்  ஊரார் போற்றுகின்ற கற்பு வாழ்வாக மலர வேண்டும்.  இக்கற்பு வாழ்வில் காதல் நிலையானதாக இருக்க வேண்டும்.  இதுவே உண்மை; ஆழமான அன்புநிலை. பேரழகானதான இந்த வாழ்வுநிலையைத் தோற்றுவிக்கும் அறிவு சான்ற கதாபாத்திரமாகத் தோழி திகழ்கின்றாள்.

பிறிதொரு பாடலில் தலைவியோடு தாம் கொண்டிருக்கும் நட்பின் ஆழத்தைத் தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.

தலைவி மீது நீ மட்டுமே அன்பு கொண்டிருப்பதாகக் கருதுகின்றாய். தாய் தன் கண்ணை போன்று மகளைப் போற்றுகின்றாள். இவள் காலடி சிவக்க நிலம் நடக்கப் பொறுக்க மாட்டாதவர் தந்தை.  இருதலைப் பறவையை நீ அறிவாயா? அப்பறவையைப் போன்று இரு தலை ஓருயிர் ஆனவர். பிரிவறியாதவர்.

“யாயே கண்ணினும் கடுங்கா தலளே
எந்தையும் நிலனுறப் பொறா அன் சீறடிசிவப்ப
எவனில குறுமகள் இயங்குதி என்னும்
யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே” (அகம் 12)

வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம் தலைவனுக்கு அறிவுரை கூறவும், தேவைப்பட்டால் அதட்டவும் முயன்றிருக்கின்றாள் தோழி.

தலைவியும் தன் அகவுணர்வுகளை ஒளிவு மறைவின்றி தோழியிடம் சொல்கின்றாள்.

காதலன்  செல்வம் தேடுவதற்காகக் காட்டு வழியே பிரிந்து சென்றுவிட்டான். அவன் பிரிவைத் தாங்காது தவித்தவள் ஆறி அடங்கத் தோழியின் அருகாமையே உதவுகின்றது. “நான் மிகவும் வேதனைப்படும்படியாக என்னைப் பிரிந்து போய்விட்டார். என்னைப் பிரிய மாட்டேன் என முன்னர் கூறிய வார்த்தையையும் மறந்து விட்டார்” என்றுரைத்து வருந்துகின்றாள்.

 “பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி”    (அகம் 9)

தலைவின் மாற்றங்களை உணர்ந்து ஐயுறும் பெற்றோருக்கும், செவிலித்தாய்க்கும் கதை சொல்பவளாகவும் தோழியே திகழ்கின்றாள்.

தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன” (தொல் : பொருள்: 11) என தொல்காப்பியம் தோழியின் சிறப்புக்கு இலக்கணம் கூறுகின்றது.

தோழியானவள் தலைவன், தலைவியின் வாழ்வு செழுமையான நெறியில் செல்வதற்கு வழி செய்கின்றாள்.  அன்பு, அறிவு, அறன் என்ற மூன்றையும் சொல்லிலும் மனத்திலும் செயலிலும் கொண்ட நட்பின் உருவமாகத் திகழ்கின்றாள் தோழி.

தோழமைப்பண்பின் உயர்ந்த வடிவமே சங்க இலக்கியம் காட்டும் தோழி.


தலைவனும் தோழனும்

தலைவியின் அகவாழ்வில் தோழி பெற்றிருக்கும் உயர் பங்கு தலைவனின் காதல் வாழ்வில் தோழனுக்கு இருக்கவில்லை என்பது உண்மையே. தவைவனோடு தோழி பேசுவதற்கு உடன்பட்ட இலக்கிய மரபு தலைவியோடு தோழன் பேசுவதற்கு உடன்படவில்லை.  காதலுற்ற பெண்கள் பிற ஆடவரை நோக்குதலைத் தலைவனின் நண்பனாக இருப்பினும் இலக்கியங்கள் தவிர்க்கவே முயன்றிருக்கின்றன. தோழன் தலைவியின் முன் எதிர்ப்பட்ட போதும் தலைவி அவனை வழிபோக்கனாகவே கருதுவாள். ஏனெனில் அவளுக்கு தலைவனின் தோழர்களைத் தெரியாது.

தலைவியின் இருப்பிடம் அறிந்து கூறுவதுவும், அவள் வருகையை உணர்த்துவதுமே தோழனின் கடமைகளாகவிருந்தன.

‘தோழியிற் கூட்டம் போலப்பாங்கன்
உரையாடி இடைநின்று கூட்டாமையின்’ (தொல். 1047) என
நச்சினார்க்கினியாரும்,  “தன் வயிற்பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யான்”
(தொல். 1443) எனப் பேராசிரியரும் தோழனின் கடமைகளை வரையறை செய்துள்ளனர்.

தலைவனுக்கும் தோழனுக்குமிடையான சுவையான உரையாடல் ஒன்ற குறுந்தொகையில் இடம்பெறுகின்றது.

தலைவியைச் சந்திக்கச் சென்ற தலைவன் வாடிய முகத்தோடு வருகின்றான். எதிர்கொண்ட தோழன் தவைவனின் முகவாட்டம் உணர்ந்து என்ன நடந்து என வினாவுகின்றான்.

“தலைவியைச் சந்தித்த வேளை சற்றே நெருங்கிவிட்டேன். அவள் கோபித்து விட்டாள்.”

“காதற் சந்திப்பில் இது ஒன்றும் புதியதில்லையே. நீ ஏன் வருந்துகின்றாய்?”

“இல்லை நண்பா, தலைவியும் தோழியும் என்னைத் தவறாக எண்ணுகிறார்கள்.”
“கலங்காதே நண்பா, காதலில் காமமும், காமத்தில் காதலும் கலந்துதான் இருக்கும். காமம் எம்மை வருத்தி அழிக்கின்ற ஆயுதமல்ல, தீர்த்துவிட முடியாத கொடிய நோயும் அல்ல. அது எவ்வகையிலும் குறைந்ததல்ல.  அதோ பார், அங்கே ஒரு பல்விழுந்த வயசான பசு புல் மேய்ந்துகொண்டிருப்பதை. புதிதாக முளைத்த அந்த இளம் புற்களை அந்தப் பசுவால் மேய முடியாது. பல் இல்லை. ஆனாலும் தன் நுனி நாக்கால் அந்தப் புற்களைகளைத் தடவி அவற்றை மேய்ந்த இன்பத்தைப் பெறுகின்றது. அப்படித்தான் காதலோடு இணைந்த காமமும். நினைக்கின்ற போதெல்லாம் இன்பந்தர வல்லது. இதயத்திற்கு இதம் தரக் கூடியது. மணமாகும் வரை எல்லை மீறாது இன்பத்தை உனக்குள் உணர்ந்து கொள்”

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே: நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே” (குறு 136)

இதுவே தோழன் தலைவனுக்குக் கூறிய அறிவுரை. தலைவனின் மனம் நோகாது ஆறுதலும் கூறி, அழகான உவமையோடு எல்லை மீறாதே என இடிந்துரைக்கும் பண்பும் சங்கத் தோழனிடத்தே சிறந்திருப்பதை இப்பாடல் வழியாக உணரலாம்.

தோழனோடு தொடர்புபட்ட வேறு சில செய்திகளும் சங்க இலக்கியத்திலே இடம் பெற்றுள்ளன.

மேற் கூறப்பட்ட நட்புறவுகள் சங்ககால இலக்கியங்களிலே அழகுறவும் அழுத்தமாகவும் கூறப்பட்டுள்ளன. நட்பு மிகச் சிறந்த உறவு என்பதைக் காலங்காலமாக இலக்கியங்களும் ஏனைய கலைகளும் வெளிப்படுத்தி வந்துள்ளன.

காதலுக்கு அடுத்தபடியாக இலக்கியங்கள் அதிகம் பேசிய உறவு நட்பே.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றும் வெவ்வேறானவை. இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

சங்க இலக்கிய காலத்திற்குப் பின்னான அறநெறிக்காலத்தில் காதல் உணர்வுகளுக்கு முதன்மை வழங்கப்படவில்லை. ஆனால் அற இலக்கியங்கள் பலவும் நட்பைப் போற்றியிருக்கின்றன. நடபு பற்றிய அழுத்தமான படைப்புகள் இன்றுவரை இலக்கியங்களில் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன.

“துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு”      - கவிஞர் அறிவுமதி.




                      துணை நின்ற நூல்களும், இணையத்தளங்களும் :

தொல்காப்பியம்
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
தமிழ்க்காதல்  - முனைவர் வ.சு.ப. மாணிக்கம்

Saturday, November 15, 2014

பெருஞ்சித்திரனார்


 வறுமை... அளவிட்டுக் கூறமுடியாத வறுமை.

குப்பையிலே முளைத்த கீரை. அதன் இலைகள் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டன. அந்தக் கணுக்களிடையே புதிய தளிர்கள் முளைவிட்டிருக்கின்றன. அவை இன்னமும் முதிரவில்லை. அந்த பிஞ்சுத் தளிர்களைப் பறித்து உப்பில்லாமல் நீரையே உலையாகக் கொண்டு காய்ச்சி, மோரும் இன்றி, சோறும் இன்றி, உண்கின்ற வறுமை.

புலவர் பெருஞ்சித்திரனார் குடும்பத்தில் தாண்டவமாடிய வறுமை இப்படித்தானிருந்தது.

 எஞ்சிய உயிரோடும், ஒட்டிய உடலோடும் வள்ளல் குமணனை நோக்கிப் போகின்றரர் புலவர்.

பகையை மட்டுமல்ல, புலவோர் வறுமையையும் புறமுதுகிட்டோடச் செய்யும் பெருவள்ளல் குமணன்.

"மன்னா! கொடும் வறுமையில் வாடும் என் சுற்றம் மகிழ நீ பொருள் தந்துதவ வேண்டும். நான் வருத்தியும் நீ வருந்தியும் தரும் பொருள் வேண்டாம். மனமுவந்து நீ ஈயும் பொருள் குன்றிமணி அளவேயாயினும் நாம் கொள்வோம். விரைந்து தருவாயாக" என்கிறார்.

குமணண் சில நாள் அவரை தன்னோடு இருத்தி உடல்வளம் பெருகச் செய்து பொருள் கொடுத்து அனுப்புகின்றான்.

பெரும் பொருள். வாழ்நாள்வரையிலும் அவர் குடும்பத்திற்குப் போதுமான பொருள்.

பொருளோடு சென்ற பெருஞ்சித்திரனாரைக் குற்றுயிரும் குலையுயிருமாக வாடிக்கிடந்த குடும்பம் வரவேற்றது. மனைவியின் கையில் அத்தனை பொருளையும் ஒப்படைக்கின்றார்.

“என் மனைக்குரியவளே,

உன்னை விரும்பியவர்களுக்கும், நீ விரும்பியவர்களுக்கும் இந்தப் பொருளைக் கொடு. நமது சுற்றமாகத் திகழ்கின்ற மூத்த பெண்களுக்கெல்லாம் கொடு. வறுமையுற்ற காலத்தே கடனாகப் பொருள் தந்துதவிய அனைவருக்கும் கொடு. இன்ன தன்மையர் இவர், என்று வேறுபாடு காட்டாது எல்லோருக்கும் கொடு. கொடுக்கின்றபோது என்னைக் கலந்துபேச வேண்டும் என்று எண்ணாதே. நீயாகவே எல்லாம் செய்துவிடு. பொருள் இருக்கின்ற காலத்திலே அதில் பற்று வைத்து, சேமித்து நீண்டநாள் வாழலாம் என்ற எண்ணம் வேண்டாம். எல்லோருக்கும் கொடு. இது முதிரமலைத் தலைவன் குமணன் தந்த பொருள்” என்கிறார்.

வறுமையிலும் செம்மை செறிந்த வாழ்வு என இதைத்தான் கூறுவதா?

கிடைத்த பெரும்பொருளை தனக்கென வைத்து வாழாமல் சுற்றம் செழிக்கக் கொடு என்கிறாரே... இந்த உயர்வுள்ளத்தை எப்படி வாழ்த்துதா? இல்லை வைவதா?

“இது குமணன் தந்த பொருள். என்னுடைய பொருள் அல்ல. தன்பொருள் எனப் பற்று வைக்காது வேந்தன் ஈந்த பொருள். அதில் நாம் பற்று வைப்பதா? வேண்டாம். அனைவருக்கும் அதைப் பகிர்வோம்” என்கிறார் புலவர்.

'நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும்
பண்மான் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும்
இன்னோர்க் கென்னா தென்ணொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமண னல்கிய வளனே  (புறம் 163)  

தமிழையே எழுதி வாழ்ந்த பெருமை மிக்க புலவோரின், தரம் தாழ்ந்து போகாத வாழ்வுக்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. பொருளையே விரும்பும் சிந்தையுடையோர், சிலபொழுதில் புலவரை இகழ்தல் கூடும்.

மனதிடை எழும் உணர்வுகளை படைப்பாக்கும் மாசற்ற புலவோர் மனதின் வழியேதான் செல்வர். அதனாற்றான் அவர்கள் சிறத்த படைப்பாளிகளாகவும் திகழ்திருக்கின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர்.

Thursday, October 30, 2014

சங்கத்தமிழரின் உணவுமரபு

அவர்களுக்கு அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிக இளவயது. இருவரும் தனிக்குடித்தனம்போவதாக முடிவாகிவிட்டது. ஊரார் ஆசியுடன் குடித்தனத்தைத் தொடங்கியுமம் விட்டனர். 
துடித்துப் போனாள் மணப்பெண்ணின் தாய். தனிக்குடித்தனம் எப்படிச் சாத்தியம்? பொறுப்பேதுமின்றி துடுக்குத்தனத்துடன் உலாவித் திரிந்தவளால் தனக்குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப்போடுவாள்? 
தாய்மனதால் அமைதி கொள்ள இயலவில்லை. தன் தோழியை அழைத்து வேதனையைப் பகிர்ந்து கொண்டாள். மகளின் தனிக்குடித்தனச் ‘சிறப்பைக்’ கண்டு வருமாறும் கேட்டுக்கொண்டாள். 
அதுதான் மணமக்கள் குடியிருக்கும் வீடு. அருகே சென்ற தோழி உள்ளே செல்லாது மறைந்திருந்தே நடப்பதைப் பார்ப்பதென முடிவுசெய்தாள். 
கணவன் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். திரும்பி வரும் கணவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் இளமனைவி. 


நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்தாள். எப்போதுமே நன்கு முற்றிய தயிர்தான் உணவுக்குச் சுவை தரும். ஆக்குவதற்;கு முன்பாகத் தயிரைக் கட்டித்தன்மை இல்லாதவாறு பிசைய வேண்டும். தன் மெல்லிய விரல்களால் தயிரைப் பிசைந்தாள். அவ்வேளை அவள் அணிந்திருந்த கலிங்கம் எனப்பட்ட பெறுமதியான சேலை நழுவிவிட்டது. நழுவிய சேலையை அள்ளியெடுத்துச் செருகியாக வேண்டும். தயிர் பிசைந்த கை. சேலையைத் தொட்டால் அது அழுக்காகி விடும். கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டுவிடும். 
அவளுக்குத் தயிரின் பதமே பெரிதாகவிருந்தது. தயிர்க்கறை படியச் சேலையை அள்ளிச் செருகிவிட்டு தன்பணி தொடர்ந்தாள். 
நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும். முறைப்படி தாளிக்கின்றாள். கடுகும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, தாளிதப் புகை பொங்கி எழுந்தது. முகம் எங்கும் படிந்து கண்களினுள் புகைந்தது. கண்ணைக் கசக்கியபடி தாளிதத்தைத் துழாவிக்கொண்டிருந்தாள். தாளிதச் சட்டியைவிட்டு விலகவேயில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறிவிட வாய்ப்பு உண்டு. 
ஒரு வழியாகத் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க்குழம்பை ஆக்கிவிட்டாள். 
கணவன் வீடு வருகின்றான். இன்முகத்தோடு உணவு பரிமாறுகிறாள். ‘இனிமையாக இருக்கிறதே உணவு’ என்றவாறு கணவன் மகிழ்ந்து உண்கிறான். அந்த  அழகைக் கண்ணுறுகிறாள். நுண்மையான இன்பக் கோடுகள் அவள் முகமெங்கும் படர்ந்தன. 
இது சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்   
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் 
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின் 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”    கு.தொ. 167 
சங்ககாலத்துக் குடும்பப் பெண்ணொருத்தி உணவு ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டைப் புலப்படுத்துகின்றது இப்பாடல். 
சங்ககால மாந்தரது வாழ்வியல் அடையாளங்களில் அவர்கள் கைக்கொண்ட உணவுப் பழக்க வழக்கம் உன்னதமானதொரு இடத்தைப் பெறுகின்றது. உண்ணுதல் என்பது ஓர் உடல் சார்ந்த தேவையாக இல்லாமல் சமூகம் சார்ந்த செயலாகவே சங்ககாலத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தே விருந்தினருக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையும், குடும்பம், ஊர் சார்ந்த நிகழ்வுகளில் உணவு பெற்றிருந்த சிறப்பும் உணவின் சமூகச் சார்பைப் புலப்படுத்துகின்றன. 
உண், ஊன், உணவு போன்ற சொற்களின் வேர்ச் சொல் ‘உள்’ என்பதாகும் என்கின்றார் தொ. பரமசிவன். உட்கொள்ளுதல் என்ற செயலிலிருந்து பிறந்ததே இந்த வேர்ச்சொல் ஆகும். 

சங்ககாலத்தவரது வாழ்வை நுனிப்புல்லாக மேய்ந்தோர் சிலர் “அக்காலத்தோரின் உணவு மரபு போற்றுதற்குரியதல்ல” எனக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறானோரின் கருத்துகளை மறுதலிக்கவும், அக்காலத்தோரின் உணவு மரபினை இக்காலத்தோர் விளங்கிக்கொள்ளவும் வாய்ப்பாக இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

மனித குலத்தின் உணவு தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பர். சங்ககாலத்தோரின் வியத்தகு வளர்ச்சியில் உணவுப் பாரம்பரியத்தின் பங்கு  இன்றியமையாததாக இருந்தது. மனிதனது உணவுத் தேவையானது இருப்பின் தேவையை நிறைவு செய்த போதும் அது இனம் சார்ந்த பண்பாட்டாலும், சுற்றுப்புறச் சூழல்களாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. சங்ககால இலக்கியங்கள் வெளிப்படுத்தும் உணவு தொடர்பான செய்திகள் ஒரே களத்தைக் கொண்டவையாகவும், ஓரே காலத்துக்கு உரியனவாகவும் இருக்கவில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுப்பப்பட்ட வாழ்களங்கள் தோறும் மாறுபட்ட உணவு மரபுகளை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு களத்திலும் குறிப்பிட்ட பொருட்களே கிடைத்தன அல்லது உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் எல்லாக் களங்களுக்கும் எல்லாம் கிடைக்கவில்லை. தம்மிடம் மேலதிகமான இருப்பதைக் கொடுத்து பிற களத்தாரிடமிருந்து தேவையானதைப் பெற்றுக்கொண்டனர். எனவேதான் பண்டமாற்றும் பகிர்தலும் அக்காலத்தில் ஓங்கியிருந்தன.

சில நூற்றாண்டுகள் இடைவெளியைக் கொண்ட பல வளர்ச்சிப்படிகளினூடாகச் சங்ககாலத்தோரது உணவு மரபினை நாம் நோக்கலாம். 

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், குறிப்பேடுகள் கல்வெட்டுகள் என்பன சங்ககால உணவுகள் குறித்துப் போதிய சான்றுகளைத் தருகின்றன. 

தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நில அடிப்படையில் ஐந்தாக வகுக்கின்றது. ஐவகை நிலங்களில் வாழ்ந்தோர் தமிழர் என்ற போதிலும் நிலம் சார்ந்த பண்பாட்டு மாற்றங்களுக்கு ஏற்பவும், இயற்கை அமைவுகளுக்கிசைவாகவும் உணவுகளும் ஆக்கும் முறைகளும் வேறுபட்டிருந்தன. 

தொல்காப்பியம் சுட்டிய ஐவகை நிலங்களுக்குமுரிய உணவும் நீர் வகைகளும் கீழே தரப்படுகின்றன.

முல்லை நிலமக்களுக்கு உணவு- வரகு, சாமை
        நீர் – கான்யாறு

குறிஞ்சி நில மக்களுக்கு உணவு – திணை, தேன், மூங்கிலரிசி 
        நீர் – அருவி நீர், சுனை நீர்

மருதநில மக்களுக்கு உணவு – செந்நெல் – வெண்ணெல் 
        நீர் – ஆற்றுநீர், மனைக்கிணற்றுநீர், பொய்கை நீர்

நெய்தல் நிலமக்களுக்கு உணவு – உப்புக்கு விலைமாறிய பண்டம், மீனுக்கு விலைமாறிய பண்டம் 
        நீர் – மணற்கிணறு, உவற்குரிநீர்

பாலை நில மக்களுக்கு உணவு – ஆறலைத்த பொருள், சூறை கொண்ட பொருள் 
        நீர் – அறுநீர் கூவலும், சுனை நீரும்.

தொல்காப்பியர் மரபியலில் என்னும் பகுதியில், 
“மெய் திரி வகையின் எண்வகை உணவில்” (பொரு 623) 
                                      என எட்டுவகை உணவைக் குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதிய நச்சினார்கினியர் நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார்.  ஆனால் சங்ககாலத் தமிழகத்தில்  இறுங்கு, கோதுமை போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை. ஆயினும் வடமொழி செவ்வியல் இலக்கியங்கள், தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடிவகை என எட்டு வகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக இருக்கலாமோ என்ற ஐயமும் ஆய்வாளரிடத்தே உள்ளது. 

தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்ககாலத்தில் இருந்ததைச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம்.

இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப்பட்டதாம். இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது. 

“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி,
ஆனா விருப்பின், தான் நின்று ஊட்டி, (சிறுபாணாற்றுப்படை 238-245)

இந்த நூல் குறித்த செய்திகள் மணிமேகலையிலும், சீவகசிந்தாமணியிலும் காணப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனி;த்துவமான ஒரு நூல் எழுதப்பட்டிருக்கின்றது என்ற செய்தியே அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது. 

அக்காலத்தே பத்துக்கு மேற்பட்ட சொற்களால் உணவைக் குறித்தனர். 

“உணாவே வல்சி உண்டி ஓதனம்
அசனம் பகதம் இரை ஆசாரம்
உறை, ஊட்டம்”

எனப் பிங்கல நிகண்டு உணவைக் குறிக்கும் பிற சொற்களைத் தருகின்றது.  இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.


அடுப்பு – அட்டில் - குழிசி 

நெருப்பைக் கண்டறிந்து அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகே சமையல் முறை சிறப்புற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை. நெருப்பு மூட்டிச் சமைக்கும் அடுப்புகள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன. 

“முடித்தலை அடுப்பு”              (புறம்.28.6)
“ஆண்டலை அணங்கடுப்பு”         (மது.காஞ்.29)
“ஆடுநனிமறந்த கோடுயர் அடுப்பு”    (புறம்.164)
“முரியடுப்பு”                      (பெரும்பாணாற்றுப்படை)
“களிபடுக்குழிசி கல் அடுப்பு”            (நற்றிணை 41)

இவ்வாறான பல அடுப்புகள் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுப்பு என்ற சொல்லாட்சி அக்காலத்திலிருந்தே வழக்கிலிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுப்புகளை விடவும் வேட்டைக்குச் செல்வோர் தீ மூட்டி இறைச்சியை வாட்டி உண்ணும் வழக்கமும் இருந்திருக்கின்றது. 

உணவுமரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை இல்லங்கள் தோறும் தோற்றங் கொண்ட ‘சமையலறை’ எனலாம். அக்காலத்தே வீடுகளில் தனித்துவமான சமையலறைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அட்டில் என அழைத்திருக்கின்றனர். 

“உதியனட்டில் போல ஒலியெழுத்து அருவியார்க்கும்” என அகநானூறும்
“புளிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்”  எனச் சிறுபாணாற்றுப்படையும்
“அறநிலை இய அகனட்டில்” எனப் பட்டினப்பாலையும் சமையலறைகளைக் குறிப்பிடுகின்றன. 

அக்காலத்தே சமையற் பாத்திரங்கள் குழிசி என்னும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கின்றன. அவை உட்குழிந்து இருப்பதால் இப்பெயர் தோன்றியிருக்கலாம். 

“இருங்கட் குழிசி”                       (புறம்.65-2)
“மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி”      (புறம்-168-9)
“அட்டகுழிசி அழற்பயந்தாங்கு”             (புறம்-23)
“வெண்கோடு தோன்றாக் குழிசி”            (புறம்-251)
“முரவு வாய் ஆடுறு குழிசி”               (புறம்-371)
“களிபடுக்குழிசி”                         (நற்றிணை 41)

தண்ணீர் எடு;த்துவரப் பயன்பட்ட பாத்திரம் ஒன்று, 

“தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்” - (அகநானூறு 393) என அழைக்கப்பட்டிருக்கின்றது. 

இவை தவிர, புகர்வாய்க் குழிசி, சோறடு குழிசி போன்ற பாண்டங்களையும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். 

சமையல் வகைகளும் உண்ணும் முறைகளும்

சங்கத்தமிழர் பல்வேறு சமையல் முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். நீரிலிட்டு அவித்தல், அவித்து வேக வைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், நெய்யிலிட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் போன்ற சமையல் முறைகளை இலக்கியங்களில் காணலாம். 

உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர். அவையாவன, 

அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

மிக நுட்பமாக உணவருந்தும் வழிகளை ஆய்ந்து பொருத்தமாகப் பெயரிட்டிருக்கும் சிறப்பு வியக்க வைக்கின்றது. 

சங்கத்தமிழர் வாழ்நிலமெங்கும் நூற்றுக்கணக்கான உணவுமுறைகள் காணப்பட்டிருக்கின்றன. நிலம், குலம், தொழில் சார்ந்து அவை வேறுபட்டிருக்கின்றன. 

இனி சங்கத் தமிழரது உணவு வகைகளையும் ஆக்கும் முறைகளையும் நோக்குவோம். 

சோறு 

அக்காலந்தொட்டே வழக்கிருந்து வரும் சொல் சோறு. அக்காலத்திலேயே சோறுதான் முதன்மை உணவாக் திகழ்திருக்கின்றது. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் அரிசியின் பயன்பாட்டை அறிந்திருக்கின்றனர். பழங்காலத் தமிழரது வாழ்வை வெளிப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் ஆதிச்ச நல்லூர் தொல்பொருட்கள் தமிழரது அரிசிப் பயன்பாட்டைப் புலப்படுத்துகின்றன. 

கோதுடன் இருந்தால் நெல், குற்றியெடுத்தால் அரிசி, வேக வைத்தபின் சோறு எனப் பயன்படத்தப்பட்ட சொல் வழக்கங்களே அரிசிப் பயன்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. 

வெண்நெல், செந்நெல் என்ற இருவகை நெல்லும் அக்காலந்தொட்டே வழக்கிலிருந்தன. நெல்லுக்கு வரி, செஞ்சாலி, செந்நெல், சொல், இயவை, ஐவனம் என்ற பெயர்களும் புழக்கத்தில் இருந்துள்ளன. 

சோறு என்பதை அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை, பருக்கை, பிசி, அன்னம் என்ற பல சொற்களால் குறித்தனர். 

பச்சரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப்; பொங்கல் என்றும்,
புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது.

ஆக்கிய சோற்றுடன் பிற உணவுப் பொருட்களைக் கலந்து உண்டிருக்கின்றனர். கலக்கப்பட்ட பொருட்களுக்கு ஏற்ப, பல பெயர்களால் அவை அழைக்கப்பட்டன. 

ஊன் சோறு : ஊனும் சோறும்
கொழுஞ்சோறு : கொழுப்பு நிணம் கலந்து ஆக்கியது
செஞ்சோறு : சிவப்பு அரிசிச் சோறு
நெய்ச்சோறு : நெய் கலந்தசோறு
புளிச்சோறு : புளிக்குழம்பு கலந்தசோறு
பாற்சோறு : பால் கலந்த சோறு
வெண்சோறு : வெள்ளிய அரிசிச் சோறு

அரிசியை மூன்று ஆண்டுக் காலம் பாதுகாக்கும் முறை பற்றிய தொழில்நுட்பம் பற்றிப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். (னு.ளு. ளுசiniஎயளய ஐலநபேயசஇ 1983இ ப.253)

இராச அன்னம் எனப்பட்ட உயர்வகை அசிரியினை பார்ப்பனர் உண்டனர் என்ற செய்தியும் இலக்கியத்தில் உண்டு.

பண்டமாற்றின் போது பெறுமதி மிக்க பொருளாக நெல் விளங்கியிருக்கின்றது. உப்பும் நெல்லும் ஒத்த பெறுமதி கொண்டதாக கருதப்பட்டிருக்கின்றது. 

இருபுறமும் இரும்புப் பூண் கொண்ட உலக்கையால் உரலி;ல் இட்டு நெல் குற்றினர் என்ற செய்தியை,

“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (193-195)
                                                       எனச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.

சங்ககாலத்தில் அரிசிப்பொரி வழக்கில் இருந்திருக்கின்றது. புழுங்கிய நெல்லிலிருந்து பொரி எடுத்த செய்தியையும் பொரியோடு பாலையும் கலந்துண்ணும் வழக்கம் இருந்ததையும்  ஐங்குறுநூறு (53) தெரிவிக்கின்றது. 

சங்ககால ஒளவையார், அதியமான் சிறுசோறு, பெருஞ்சோறு வழங்கியதாகக் குறிப்பிடுகின்றார். தனிப்பட்ட ஒருவருக்கோ, சிறு குழுவிற்கோ வழங்கிய சோறு சிறுசோறு எனப்பட்டிருக்கலாம். மங்கல நிகழ்வையொட்டி சிறுசோறு வழங்கப்பட்தாகப் புறநானூறு (110)  கூறுகின்றது.  போர்வீரர்களுக்கும் பெரு நிகழ்வுகளிலும் வழங்கப்பட்ட சோறு பெருஞ்சோறு ஆகியிருக்கலாம். பாரதப் போரிலே பங்குபற்றிய வீரருக்கு சோறு வழங்கினான் என்பதற்காக “பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன்” என ஒரு சேர மன்னன் அழைக்கப்பட்டிருக்கின்றான். 

நெல்லரிசி தவிர மூங்கிலரிசி, வரகரிசி, சாமையரசி, திணையரிசி, கம்பரிசி, இறுங்கரிசி என்பனவும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

இவை தவிர, பயறு, உழுந்து, எள், கொள்ளு, அவரைப் பருப்பு போன்ற தானியங்களையும் பயன்படுத்தியிருக்கின்றனர். 

இவ்வகை அரிசிகளோடு கூடி ஆக்கப்பட்ட உணவு வகைகளை பின்னர் நோக்குவோம். 

ஊன் உணவு

சங்கத் தமிழரின் பெருவிருப்புக்குரிய உணவாகத் திகழ்ந்தவை ஊன் வகையறாக்களே. ஊர்வன, பறப்பன என்பவற்றோடு பல்வகை விலங்குகளும் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. ஊனினைச் சுவைபட பல்வேறு விதங்களில் ஆக்கிப் பதப்படுத்தி உண்டிருக்கின்றனர். அவற்றை சற்று விரிவாக நோக்குவோம். 

ஊன், புலால், புலவு பைந்தடி, பைந்துணி, உணங்கல் எனப் பல பெயர்களால் இறைச்சி வகையாக்கள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

வெள்ளாடு, வரையாடு, செம்மறியாடு, பன்றி, மான், ஆமான், முயல் போன்ற விலங்குகளும், உடும்பு, அணில், எலி போன்ற சிறு பிராணிகளும், கோழி, காடை, காட்டுக்கோழி, புறா போன்ற பறவையினங்களும் மழைக்காலத்து ஈசல்களும் உணவாக்கப்பட்டிருக்கின்றன. சில பிரிவினரால் மாடு உணவாக்கப்பட்ட செய்திகளையும் சங்க இலக்கியம் கூறுகின்றது. 

உணவு சேரிக்கக் கானகம் சென்ற ஒருவன் பிடித்து வரும் உயிரிகளைப் பட்டியலிடுகின்ற நற்றிணை. 

‘உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து 
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் 
கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்’….-(நற்றிணை 59)

உடும்பினைக் குத்தித் தூக்கிக்கொண்டு, மண்ணைத் கிளறி வரித்தவளைகளைப் பிடித்துக்கொண்டும், உயரமான மண்புற்றுகளை உடைத்து அங்குள்ள ஈசல்களை அள்ளிக்கொண்டும் சுடவே ஓரு முயலினையும் கொண்டுவந்தான் வேடன். 

இறைச்சியை வேக வைத்தும் சுட்டும் தமிழர்கள் உண்டனர். வேக வைக்கப்பட்டது வேவிறைச்சி என்றும், தீயில் வாட்டப்பட்டது சூட்டிறைச்சி என்றும் அழைக்கப்பட்டது. 

இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் இறைச்சியை உப்புக்கண்டம் போட்டு உண்ணும் வழக்கம் இருந்திருக்கின்றது. 
இறைச்சித் துண்டங்களை இருப்புக் கம்பிகளில் கோர்த்து உப்பும் கருமிளகுத் பொடியும் கடுகும் சேர்த்து வாட்டியுண்டிருக்கின்றனர். 

வீரர்கள் தொடர்ந்து இறைச்சியைத் உண்டதால் நிலத்தை உழும் கலப்பையின் கொழு தேய்வதைப் போற் பற்கள் மழுங்கிப் போயின என்று பொருநர் ஆற்றுப்படை கூறுகின்றது. 

இறைச்சியைக் காயவைத்துப் பதப்படுத்தி வற்றலாகவும் பயன்படுத்தியுள்ளனர். 

“இரும்புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்” என இச் செய்தியைப் புறநானூறு தெரிவிக்கின்றது.

 இறைச்சியை எண்ணெயில் பொரிக்கும் பழக்கம் ஆரம்பகாலத்தில் இருந்திருக்கின்றது. கொதிக்கும் நெய்யில் இறைச்சி பொரிக்கும் போது எழும் ஓசை நீர் நிறைந்த பொய்கையில் மழைத்துளி விழுவது போல் இருந்தது எனப் புறநானூறு (386)  கூறுகின்றது. 

ஆட்டிறைச்சியைப் பற்றிய பல செய்திகள் சங்க இலக்கியமெங்கும் கூறப்பட்டிருக்கின்றன. 

பரிசில் பெறச் சென்ற கூத்தன் ஒருவனுக்கு, தணலில் வேகப்பட்ட (தற்போதைய டீ டீ ஞ வகையைச் சார்ந்த)  செம்மறியாட்டு இறைச்சியை கரிகால் வளவன் வழங்கி உபசரித்த காட்சி பொருநராற்றுப்படையில் இடம்பெற்றிருக்கின்றது.

“பதனறிந்து 
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை  
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே..."

இது எவ்வாறான உணவு தெரியுமா?  அறுகம்புல்லைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் இறைச்சியில் சமைக்கப்பட்ட உணவு. அந்த இறைச்சி, இரும்புக் கம்பிகளில் குற்றி பக்குவமாகச் சூடாக்கி வேகவைக்கப்பட்டது. அந்தச் சுவையான உணவினை ஆசையுடன், சூட்டோடு வாயிலிட, அதன் வெம்மை தாங்க முடியவில்லை. வாயில் இடப்புறமும் வலப்புறமுமாக மாற்றிமாற்றிச் சுவைத்து, இனி போதும் போதுமென மறுக்குமளவுக்குத் தான் உணவு உண்டதாகச் சொல்கிறான் அந்தக் கூத்தன்.

உடும்பு இறைச்சி அக்காலத்தோரால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. இன்றும் ஈழத்தில் வன்னி மாவட்டத்தில் உடும்பு இறைச்சிக்குப் பெருமதிப்பு உண்டு. 

உடும்புக்கறி சிறந்தது என்பதைக் குறிக்கும் “முழு உடும்பு, முக்கால் காடை, அரைக் கோழி, கால் அடு” என்ற பழைய  தொடர் வழக்கிலிருந்திருக்கின்றது. அக்காலத்தில் நாய்களைப் பழக்கி உடும்பை வேட்டையாடியிருக்கின்றனர். 

சிவப்பரிசிச் சோற்றை மூடுமளவுக்கு நாய் கொண்டு பிடிக்கப்பட்ட உடும்புக்கறிப்  பொரியலைப் பரிமாறி உண்ணச்செய்த சிறப்பை என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. 

“சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்" பெ.பா.ஆ.ப (129-133)

வேட்டையின் போது பெறப்பட்ட மான் இறைச்சியும் விரும்பிச் சுவைக்கப்பட்டிருக்கின்றது. 

‘கோப்பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னன் தீ மூட்டும் கோலால் தீயை உண்டாக்கி, வேட்டையாடிய மானின் இறைச்சியைச் சுட்டு, வேட்டைக்குப்போன ஏனைய வீரர் வருவதற்கு முன்பாக உண்ணுமாறு கொடுக்கப் புவவர்கள் உண்டு பசி தீர்த்தனர்’ என்கின்றது புறப்பாடல் (150) ஒன்று.

இறைச்சிக்காக அக்காலத்தோரல் பெரிதும் விரும்பப்பட்ட மற்றுமொரு விலங்கு பன்றியாகும். 

‘நீரின்றி நிலம் வரட்சியுற்ற காலத்தில் நீர் பெறுவதற்கு வெட்டிய குழிகளில் பதுங்கியிருந்தவாறு நள்ளிரவில் வாகைப்பூவின் வடிவினைக் கொண்ட பன்றிகளின் வரவினை வேடுவர் எதிர்பார்த்திருப்பர்’ என்கிறது பெ.பா.ஆ.ப (106 -111)

இடித்த நெல்லைப் பன்றிக்கு உணவாகக் கொடுத்துக் கொழுக்க வைப்பர். அதனை பெண் பன்றியோடு சேரவிடாது குழிகளுக்குள் இட்டு வளர்த்து அதன் ஊனுக்குச் சுவை கூட்டிக் கொன்று கள்ளோடு உண்பர் என, மேலும் கூறுகின்றது பெ.பா.ப (34-35)

வேடுவர் முயலை வேட்டையாடி உண்டிருக்கின்றனர். திறந்த வாயையுடைய நாயோடு காட்டிற்குச் சென்று வேலிகளில் வலையைக்  கட்டுவர். பின் பசிய பற்றைகளிலிருந்து முயலை வெளிப்படச் செய்து பிடிப்பர். பெ.பா.ஆ.ப (111-116)

சுவை கூட்டிய ஊன்கறியைச் சோறு, காய்கறி போன்ற பிற பொருட்களோடு சேர்த்து ஆக்கிய உணவுவகைகளைப் பின்னர் பார்ப்போம். 

நீருயிர் உணவு 

நீர்வாழ் உயிரிகளான மீன், நண்டு, இறால், ஆமை, சிப்பி போன்றவற்றை பலவாறாகச் சமைத்து உண்டிருக்கின்றனர். நன்னீரிலும் கடலிலும் இவை பிடிக்கப்பட்டிருக்கின்றன. 

நெய்தல் நில மக்களின் முதன்மைத் தொழில் மீன்பிடித்தலாகவே இருந்தது. சிறு மீன்களை வலையெறிந்தும் பெருமீன்களை உளி எறிந்தும் பிடித்திருக்கின்றனர். மீன் பிடிப்பதற்குப் பரவலாக தூண்டில் பயன்படுத்தியிருக்கின்றனர். குறித்தவகை மீன் தங்கத் தூண்டிலுக்கு மட்டுமே சிக்கும் என்பதைக் கண்டறிந்து தங்கத்தூண்டிலையும் பயன்படுத்தியிருக்கின்றனர் (நாஞ்சில் நாடன்).

இறால், சுறா போன்றவற்றோடு பலவகையான மீன்களைப் பிடித்தனர். மீன்களை உப்புக்கண்டம் போட்டு உலர வைத்து கருவாடாக்கியிருக்கின்றனர். சுட்ட கருவாட்டைப் பிற நிலத்தாரும் உணவாகக் கொண்டிருக்கின்றனர். 

மருதம் போன்ற பிற நிலத்தார் நன்னீர் மீன்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். நீர் நிறைந்த வயல்களின் அகப்ட்ட மீன், நண்டு, ஆமை என்பன உணவாக்கப்பட்டிருக்கின்றன. 

‘சுறவு கோட்டன்ன முள் இலைத் தாழை,’
‘கருங்கண் வரால்,’
‘கடுஞ்சுறா எறிந்த கொடுந் திமில் பரதவர்,’
‘இருஞ் சேற்று அயிரை,’
‘ஒழுகு நீர் ஆரல்,’
‘கணைக் கோட்டு வாளை’  
                                                       என்ற மீன் வகைகளோடு 17 வகையான மீனினங்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன. 

அயிரை, ஆரல், இரால், சுறா, வரால், வாளை போன்ற மீன்களைச் சுட்டும், வேகவைத்தும், புளிசேர்த்துக் குழம்பாகவும் அக்காலத்தார் எண்ட செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. (பெரும்பாண் 280, குறும் 320, பட்டினப் 63, நற்றிணை 60)

வாளைமீனைச் சமைத்து உவியல் என்னும் தொடுகறி செய்ததையும் சோற்றுடன் அதைச் சேர்த்து உண்டதையும் புறநானூறு (395) கூறுகின்றது. பெரும்பாலும் பழஞ்சோற்றுக்கு இக்கறி கூட்டாக இருந்திருக்க வேண்டும்.

அயிரை மீன் துண்டுடன் புளிக்கறி ஆக்கி முரல் வெண் சோற்றுடன் உண்ட செய்தியையும் புறநானூறு(60 - 4-6) கூறுகின்றது. 

நெய்தல் நில மக்கள் மீனை வாட்டி நெய் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தனர். அந்த நெய்யிலே மீன் இறைச்சி போன்றவை பொரிக்கப்பட்டிருக்கின்றன. பிற நிலத்தார் பண்டமாற்றாக மீன் நெய்யைப் பெற்றுச் சென்றிருக்கின்றனர். (தமிழர் உணவு. பக். 110)

 குழல் மீனைக் காயவைத்த உணவைக் ‘குழல் மீன் கருவாடு’ என்பர். நெய்தல் நிலவழியாகச் சென்றால் இத்தகைய குழல் மீன் கருவாட்டை உணவாகப் பெறலாம் என்பதை,

“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்” 
                                 என சிறுபாணாற்றுப்படை (163)
 நெய்தல் நில மக்களின் உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

நெய்தல் நிலக் கள்ளுக்கடைகளில் மீன் வறுவல் விற்கப்பட்டிருக்கின்றது. 


காய்கறிகள். 

தொ. பரமசிவன் தமிழர் உணவு என்ற கட்டுரையில் காய்கறி என்ற சொல்லைக் கீழ்வருமாறு விளக்குகின்றார்.

“காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். மிளகாய் அறிமுகமாகும்வரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காகக் கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி சமைக்கும்போது  அதிகமாக மிளகினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே 'கறி ' எனப் பின்னர் அழைக்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் (வால்மிளகு) தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர்.”

இன்றைய நாட்களில் எமக்குக் கிடைக்கின்ற காய்கறிகள் அப்போது இருக்கவில்லை. வழுதுணங்காய் என அழைக்கப்பட்ட கத்தரி, பாகல், பீர்க்கு, அவரை, முருங்கை, பல்வேறு கீரை வகைகள், அவரைப் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை என்பனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. 

வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும் உண்ணப்பட்டிருக்கின்றன. 

தற்போது பெரிதும் பயன்படுகின்ற வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், மரவள்ளி, சக்கரைவள்ளி, உருளைக்கிழங்கு மைசூர்ப் பருப்பு, தேங்காய், பழப்புளி என்பன சங்ககாலத்தில் இருக்கவில்லை.

கடுகு, கருமிளகு, வெண்மிளகு, மஞ்சள், இஞ்சி, சீரகம் என்பனவும் அக்காலத்தே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

வடஇந்தியாலிருந்து இஞ்சியும், சீனாவில் இருந்து மஞ்சளும் சங்ககாலத்திற்கு முன்போ அல்லது தொடக்கத்திலோ தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என பேராசரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி ‘தாவரமும் தமிழரும்’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

முருங்கைக்காய் சங்ககாலத்திற்கு முன்னரே ஈழம்வழியாக வந்திருக்கலாம் என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகின்றார். 

தேங்காய் பிலிப்பைன் தீவுகளில் இருந்து ஈழம் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்திருக்கலாம் என்பதுவும் பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தியின் கூற்று.

வெங்காயம், பெர்சியா மற்றம் ஆப்கானிலிருந்து 10ம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. சிலி நாட்டிலிருந்து மிளகாயும், ஐரோப்பிய நாட்டிலிருந்து உருளைக்கிழங்கும் போத்துக்கீயரால் 16ம் 17 நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டன. 

பாதாம் பருப்பு, கிராம்பு என்பனவும் ஈழம் வழியாகத் தமிழகத்தி;ற்கு வந்தவையே என்பது பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி கருத்தாகும். 

சங்ககாலத்தோர் தமிழ் நிலத்திற்கே உரித்தான பனைமரத்தைப் போற்றி வளர்த்திருக்கின்றனர். பல உணவுப் பொருட்களைப் பனையிலிருந்து பெற்றிருக்கின்றனர்.

எனினும் 200க்கு மேற்பட்ட உணவுக்குரிய இயல் தாவர வகைகளை சங்கஇலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. 

காய்கறிகளை வேறுபொருட்களோடு கூட்டிச் சுவைபட சமைத்து இறைச்சி, சோற்றுடன் கலந்து உண்டிருக்கின்றார்கள். 

உணவுக்குச் சுவை கூட்டும் உப்பு சங்ககாலத்திற்கு முன்பே பாவனைக்கு வந்துவிட்டது. சங்க காலத்தில் உப்பு, விலை உயர்ந்த பொருளாகக் கருதப்பட்டது. “நெல்லும் உப்பும் நேராகும்” என்பதே அன்றைய நிலை. உமணர் என்போரே உப்பை விளைவித்து விற்பனை செய்தனர். 

தேன் அதிகம் பெறப்படுகின்ற குறிஞ்சி நிலத்தோருக்கு மட்டுமல்ல, ஏனைய நிலத்தோருக்கும் உயர்ந்த உணவுப்பொருளாகத் திகழ்ந்தது தேன். தேனைத் தனி;த்தும் வேறு பல உணவுகளோடும் கூட்டி உண்டிருக்கின்றனர். 


கனிகள்

சங்ககால மக்கள் பல்வேறு கனிகளை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். 

மா, பலா, வாழை என்பவற்றோடு மாதுளம்பழம், நெல்லி, நாவற்பழம் நாரத்தம் பழம், கொவ்வை, ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம் (இலந்தை) போன்றவற்றை அக்காலத்தோர் விரும்பி உண்டிருக்கின்றனர். 

வாழை ‘கதலி’ என்ற பெயரிலேயே இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. 

‘பெரும்பெயர் ஆதி’ என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.

“கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்
பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்
டெயினர்” (புறம் 177 11-3)

உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை,

'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
தாத னின்னகத் தடக்கிக்
சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)
                             எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.

அன்னாசி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. அயல்நாடு சென்று வந்த வணிகர் பின்னாளிலேயே இவற்றை எடுத்து வந்தனர். 

அன்னாசி, பப்பாளி மலேசியாவிலிருந்தும், கொய்யா பெரு நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 


சிறப்புக்குரிய உணவு வகைகள். 

மேற்கூறப்பட்ட அரிசி வகைகள், தானியங்கள், ஊன் வகைகள், காய்கறிகள் என்பவற்றைக் கொண்டு சுவை மிக்க உணவுகளை ஆக்கிப் படைத்துள்ளனர் எம் முன்னோர். இன்று அந்நியப் பெயரில் அழைக்கப்படும் பல உணவுகள் சங்கத் தமிழர் உருவாக்கியவையே. 

ஊன்சோறு: இன்று பிரியாணி என அழைக்கப்படும் இவ்வுணவு ஊன்சோறு என்ற பெயரால் சுவைமிக்க உணவாக அன்று ஆக்கப்பட்டிருக்கின்றது. இது சங்கப் புலவர்களால் ‘ஊன் துவையடிசில்’ எனச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐவகை நிலத்தாரும் பல்வகை உணவு முறைகளில் வேறுபட்டிருந்தாலும் ஒன்றுபட்டிருந்த ஓர் உணவுவகை ஊன்சோறுதான். பாமரமக்கள் முதல் மன்னர் வரை ஊன்சோற்றினை உண்டு மகிழ்ந்துள்ளனர். 

அக்காலத்தே சமையற்காரன் வாலுவன் என அழைக்கப்பட்டிருக்கின்றான். அத்ததைய வாலுவன் தன் கைகளையே அகப்பையாகக் கொண்டு, துழாவி
ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. 

"துடித்தோட்கை துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்"(மதுரைக்காஞ்சி  34 - 36)

வெண்சோற்றுடன், நெய் கலந்து, ஆட்டிறைச்சி சேர்த்து சமைத்துண்டனர் 
என்ற செய்தியை நற்றிணை புலப்படுத்துகின்றது.

“மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்" (நற்றிணை 83, 4-9 வரிகள்)


சோறும் மரக்கறிகளும்

இறைச்சி வகையன்றி மரக்கறி உணவுகளும் அக்காலத்தே சிறப்புப் பெற்றிருந்தன. கடினமற்ற மென்மையான உடையாத முழு அரிசியால் ஆக்கப்பட்ட சோறு விரல் போல் நிமிர்ந்து தனித்தனியாக இருக்கின்றது. அதை பால் விட்டுச் சமைத்த பொரிக்கறிகளோடும், புளிக்கறிகளோடும் நிறைவாக உண்போம் என பொருநர் எனப்படும் கலைஞர் கூட்டத்தார் கூறுகின்றனர். 

முரவை போகிய முரியா அரிசி
விரல்என நிமிர்ந்த நிரல் அமைபுழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை”                  பொ. ஆ. ப. (113-116)


புளிக்குழம்பு

அக்காலத்தே புளிக்குழம்பு அல்லது புளிக்கறி பெரிதும் விரும்பி உண்ணப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் சோற்றுடன் புளிக்குழம்பைக் கூட்டி உண்டிருக்கின்றனர். இப்போது நாம் பயன்படுத்து;ம புளி அக்காலத்தில் இருக்கவில்லை. புளிச்சுவைக்காக நாரத்தம் (எலுமிச்சை) காய்களைப் பயன்படுத்தியுள்ளனர். மாங்காய்ச் சாற்றினைச் சேகரித்து வைத்து புளிச்சுவை கூட்டியிருக்கின்றனர். 

நெல்லிக்காய், துடரிக்காய் என்பனவும் புளிச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

புளிச்சுவையோடு கூடிய சோற்றைப் புளிச்சோறு, புளிக்குழப்புச் சோறு என அழைத்திருக்கின்றனனர். மீன் இட்டும் புளிக்கறி ஆக்கப்பட்டிருக்கின்றது. புளிக்குழம்பில் தயிர் மோர் என்பனவும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. (கு.தொ.167)

அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவர்; உண்டனர் என்பதை மலைபடுகடாம் கூறுகின்றது.

“செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளைநெல்லின் அவரையும் புளிங்கூழ்
அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட.....” மலைபடுகடாம் (434-443)

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த கானகர் எனப்பட்ட வேடுவர் வீட்டில் இறைச்சி வகையறாக்களோடு புளி சேர்த்து உணவு சமைக்கப்பட்டதை கூத்தராற்றுப்படை கூறுகின்றது. 

“வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து..."  கூத்தராற்றுப்படை 

‘நன்கு ஆக்கப்பட்ட கடமானின் கொழுப்பு மிக்க தசையும், பன்றித் தசையும் உடும்புக் கறியும் தருவார்கள். அத்துடன் புளியும் மோரும் இட்டு உலையேற்றிச் சமைத்த மூங்கில் அரிசிச் சோறும் தருவார்கள்’ என்கிறார்
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.


சோறும் ஊன்கறியும்.

சோற்றோடு ஊன்கறி சேர்த்து உண்டலே சங்ககாலத்தில் பெருவழக்காக இருந்தது.  இவ்வுணவு வாழிடச் சூழலுக்கு ஏற்பவும், செல்வநிலைக்கமையவும் வேறுபாடு கொண்டிருந்தது. 

மன்னர், நிலவுடமையாளர்; போன்றோர் விருந்தினரைப் போற்றும் வகையில் நெய்யிட்டு ஆக்கப்பட்ட இறைச்சியோடு பலவகைச் சோறும் வழங்கியிருக்கின்றனர். 

இத்தகைய விருந்துண்ட புலவர் பலர் தம் உணர்வையும் உணவின் சுவைகளையும் இலக்கியங்களில் பதிவு செய்திருக்கின்றனர். 

“அவன் எமக்கு வழங்கிய சுவைமிக்க சூட்டிறைச்சி பற்றிச் சொல்வேனா, இல்லை வளமான மனைக்குரிய  கள் பற்றிக் கூறுவேனா இல்லை, குறுமுயலின் தசை கலந்து தந்த நெய் மணக்கும் சோற்றைச் சொல்வேனா” என்கிறார் ஒரு புலவர். 

“கொழுந்தடிய சூடென்கோ
வளமனையின் மட்டென்கோ
குறுமுயலின் நிணம் பெய்த
நறுநெய்ய சோறென்கோ” - புறநானூறு “:396

கரும்பனூர்க் கிழான் என்னும் சிற்றூர்த் தலைவன் வழங்கிய விருந்து குறித்து நன்னாகையர் என்னும் புலவர் புறநாநூற்றில் குறிப்பிடுகின்றார். 

ஊன் கலந்த சோற்றுணவில் நீரை விட அதிகளவு நெய்யிட்டுச் சுவை மிகக் கூட்டி சூடு குறையாது நாள்தோறும் தானும் உண்டு மற்றவர்களுக்கும் தந்தான்.  உண்ணமுடியாமல் எஞ்சிய உணவை இலை மடித்து எறிந்த நாட்களையும், பல்லில் சிக்கிக்கொண்டவற்றைத் தோண்டி எடுப்பதற்குமாகக் கழிந்த நாட்களையும் எண்ண முடியாது என்கிறார். 

“நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மண்ணாணப் புகழ் வேட்டு
நீர்நாண நெய் வழங்கிப்
புரந்தோனெந்தை யாமெவன்றொலைவதை
அன்னோனையுடைய மென்ப வினிவறட்கி
யாண்டு நிற்க வெள்ளி மாண்டக
உண்டநன்கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நன் பல் ஊன் தோண்டவும்
வந்தவைகலல்லது
சென்ற வெல்லைச் செலவறியேனே” – புறநானூறு : 384

புற்றீசல் புளிக்குழம்பு

மழைக்காலத்தில் தோன்றி குறுகிய நாட்களே வாழும் ஈசல்கள் சுவை மிகுந்த உணவாகப் பயன்பட்டிக்கின்றன. 

செம்மையான புற்றிலிருந்து பிடிக்கப்பட்ட ஈசலை வறுத்து மோரில் ஊற வைத்துப் புளிக்கறி செய்தனர். இச் செய்தியை,

செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லேர்..” என புறநானூறு (119) கூறுகின்றது. 

ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பதற்கு அகநானூற்றுப் பாடல் ஒன்றும் சான்று தருகின்றது. 

“சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்த …” (அகநானூறு - 394: 1- 7)

சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசியோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர்.


பாலுணவு

சங்ககாலத்திற்கு முன்பே தமிழர்கள் பாலுணவு பற்றி நன்கு அறிந்திருந்தனர். வேட்டைச் சமூகநிலைக்கும் வேளாண் சமூகநிலைக்கும் இடைப்பட்ட காலத்தே மந்தை வளர்ப்பு தோற்றம் கொண்டிருக்கலாம். தொடக்கத்தில் பால், இறைச்சி என்பவற்றிற்காக மந்தை வளர்ப்பில் ஈடுபட்டாலும் பி;ன்னாளில் எருது போன்ற விலங்குகள் வேளாண் தொழிலுக்குப் பேருதவி பரிந்தன. இவ்வுதவிகளே பின்னாளில் மாட்டிறைச்சி உண்ணுதல் வழக்கற்றுப்போகக் காரணமாக இருந்திருக்கலாம். 

மிக நீண்டகாலத்தி;ற்கு முன்பாகவே தமிழர் பாலைப் புளிக்க வைத்துத் தயிராக்கவும். தயிரைக் கடைந்து மோர், வெண்ணெய், நெய் என நுட்பமாகப் பிரித்துப் பயன்படுத்தவும்; கற்றுக்கொண்டிருந்தனர்.
முற்றிய தயிரில் புளிக்குழம்பு செய்யப்படிருக்கின்றது. குளிர்ந்த மோர் சிறந்த பானகமாகக் கருதப்பட்டது. வெண்ணெய் பெறுமதி மிக்க உணவுப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது. 

“நறுமோர் வெண்ணெயின்...” என மோர் கடைந்து வெண்ணை எடுக்கப்படுவதனை பெரும்பாணாற்றுபடை கூறுகின்றது. 

பசுநெய் பெரும்பாலும் செல்வர்களாலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

அக்காலத்தில் மாடுகளே பெறுமதி மிக்க செல்வங்களாகக் கருதப்பட்டன. ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்பன தமிழது போர் மரபுகளாகும். 


பார்ப்பனர் உணவு

வேதங்கள் ஒதும் பார்ப்பனர் சங்ககாலத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய பல குறிப்புகள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் ஊன் உணவை முற்றிலும் தவிர்த்துக் காய்கறிகளையே பெரிதும் உண்டனர். 

தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய பார்ப்பனர்களையே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  

இப்பார்ப்பனர் பாற்சோறும், பருப்புச் சோற்றும் உண்பர். அவர்கள் இராசா அன்னம் என்ற பெயருடைய உயர்ந்த நெற்சோற்றினை விரும்பி உண்பர். மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும் உண்பர்.  

தயிர்ச்சோறு, மாங்காய்ச்சோறு, புளியஞ்சோறு போன்ற உணவு வகைகளையும் உண்பர். தம் வீட்டுக்கு வந்தோருக்கும் அவற்றைக் கொடுத்து மகிழ்வர். இச்செய்தியைப் பெரும்பாணற்றுப்படை (301-310) கூறுகின்றது.

மறையோர் வீட்டிற்குச் சென்றால் ‘கருடச் சம்பா அரிசியில் சமைத்த சோற்றையும், மோரில் கடைந்தெடுத்த வெண்ணெயில் மிளகுத்தூளும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கிய காய்கறிப் பொரியலையும், ஊறுகாயுடன் உண்டு மகிழலாம்’ என்று பாணன் கூறுவதாகப் பெரும்பானாற்றுப்படை மேலும் கூறுகின்றது. 


செல்வந்தர் உணவு

வேட்டுவநிலையிலிருந்து வேளாண்நிலைக்குச் சமூகம் உயர்ந்தபோது 
நிலவுடமைச் சமூக முறைமை தோற்றம் கொண்டது. நில உடைமையாளர்களாக ‘ஆண்டை’களும், தொழிலாளர்களாகக் ‘களமர்’களும் சமூக அமைப்பில் அங்கம் பெற்றனர். இச் சமூக மாற்றம் செல்வநிலையிற் பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. செல்வந்தர்; பெரும் செழிப்புடன் வாழ்ந்தனர். அவர்களது உணவுப் பழக்கமும் உயர்ந்ததாகவிருந்தது. 

கடின வேலைகள் செய்து பழக்கப்படாத செல்வர், வீடுகளில் இருந்தபடியே உண்டு மகிழ்ந்தனர். அவர்களது உணவு முறைக்கு ஒரு சான்று தருகின்றது புறநானூறு.

“நீர் நிறைந்த குளத்தில் விழுகின்ற மழைத்துளிகளைப் போன்று, துள்ளித் தெறிக்கின்ற புதிதாக உருக்கிய நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளின் வறுவல்களை மணம் நுகர்ந்து உண்பர். சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட இறைச்சித் துண்டுகளையும் உண்பர். வெள்ளியாலான பாத்திரத்தில் பால் வழியவும் சுடச்சுட உண்பர். இதனால் அவர்கள் உடல் வியர்த்ததேயன்றி, செய்கின்ற தொழிலால் உடல் வியர்த்தில்லை” என்கிறார் புலவர்.

‘நெடுநீர நிரை கயத்துப்
படுமாரித் துளிபோல
நெய்துள்ளிய வறை முகக்கவும்
சூடுகிழித்து வாடூன் மிசையவும்
ஊன் கொண்ட வெண்மண்டை
ஆன் பயத்தான் முற்றளிப்வும்
வெய்துண்ட வியர்ப்பல்லது.
செய்தொழிலால் வியர்ப்பறியாமை’ - புறநானூறு : 386

வளம்;மிக்கவர்கள் வெண்மையான நெற்சோறுடன் வீட்டில் வளர்ந்த பெட்டைக் கோழியின் பொரியலைச் சேர்த்து உண்டனர். இதனை,

“தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளிக்ன் வாட்டொடும் பெறுகுவீர” (253-256)

                                      எனப் பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.


உழவோர் உணவு

வேளாண் சமூகத்தில் உழவர்களே மிகுந்திருந்தனர். பெரும்பாலானோர் அன்றாடம் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் உண்ட உணவு பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. 

கிள்ளிவளவனின் சோழ நாட்டில்,  சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லைப் பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குற்றி அரிசியாக்குவாள். அந்த அரிசியால் ஆக்கிய சோற்றை, புளித்த நீருள்ள உலையில் இடுவாள்.  

மாமரத்தின் இனிய மாம்பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக்குழம்பும், பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறாமீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற்காயும், பாதிரி அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்துப் பின் அவித்த சோற்றுடன் உழைப்போர்க்குப் பரிமாறுவாள். 

வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர். இச் செய்தியைப் புறநானூறு (399) தருகின்றது. 

‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாணுலக்கைப் பரூஉக் குற்றரிசி
காடி வெள்ளுலை கொளீஇ நீழல்
ஓங்கு சினைமாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிரு வரா அற் கோட்டு மீன் கொழுங்குறை
செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகற்
பாதிரி யூழ் முகையவிழ் விடுத்தன்ன
மெய்களைந்தினனொடு விரைஇ
மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்
அளிகளிற் படுநர் களியட வைகிற்
பழஞ்சோறயிலும்’ -                   புறநானூறு : 399


நன்செய் நிலம் என அழைக்கப்டுகின்ற மென்மையான மருத நிலத்து வயல்களைச் சார்ந்த உழவர் காடும் புல்லும் நிறைந்த முல்லை நிலத்தில் தம் மாடுகளை மேயவிட்டுக் களைப்பாறுவர். அவ்வேளை, குறு முயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நீண்ட வாளைமீனைக் கொண்டு செய்த அவியலைப் பழைய சோற்றுடன் உண்பர். 

‘மென்புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடுவாளைப் பல்லுவியற்
பழஞ்சோற்றுப் புக வருந்தி - புறநானூறு : 395


வரகரிசிச் சோற்றை, அவித்த அவரைப் பருப்புடன் கலந்து உழவர் உண்டு வந்தனர். அதனையே விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

“நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி
புகர் இணர் வேங்கை வீசுண்டன்ன
அவரை வான் புழுக்கட்டிப் பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவிர்” (192-196)

இது ஏழை உழவர்களின் எளிமையான உணவாக இருந்தது.

அவரை விதை, மூங்கிலரிசி, நெல்லரிசி, இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவினை, நெய்யோடு கலந்து மருத நிலத்தில் வாழ்ந்த உழவுத் தொழில் புரிந்த ஏழைகள் உண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தியை மலைபடுகடாம் (434-443) குறிப்பிடுகின்றது. 

இவ்வாறே வேடவர், பரதவர், எயிற்றியர், எயினர் எனப்பட்டோரும் தமக்கெனத் தனித்துவமான உணவு வகைகளைக் கொண்டிருந்தனர். 

நீரியல் உணவு 

அக்காலத்தோரின் நீரியல் உணவு வகைகளில் முதன்மையானவை கூழும் கஞ்சியுமாகும். அதிகளவில் நீர் கலந்து சோறு கரையுமளவிக்கு வேக வைக்கப்பட்ட உணவு கஞ்சி எனப்பட்டது. அரிசி, வரகு, கேப்பை. கம்பு போன்ற தானியங்களைக் கொண்டும் கூழ் ஆக்கப்பட்டது.

சோறு வடித்த கஞ்சி ஆறுபோல் ஓடியது என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. 

சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி,
என வருணிக்கிறது.  (வரி 44-45)

பழந்தமிழர் பலவகையான பருகுநீர் வகைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் சில, இளநீர், கரும்புச்சாறு, நுங்கு, பானகம், பாயசம், அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர், மது என்பனவாகும்.

ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டுச் சாறு பிழிந்தனர் என்ற செய்தியை “கரும்பி னெந்திரங் கட்டினோதே” என்ற வரிகளின் வாயிலாக மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது.

சங்ககாலத்துச் சி;ற்றுண்டிகள்

சங்கத்தமிழர் பல சிற்றுண்டி வகைகளை அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று தருகின்றன. 

கும்மாயம் என்ற ஒருவகைச் சிற்றுண்டி பற்றிப் பெரும்பாணாற்றுப்படை 194-95) குறிப்பிடுகின்றது. இது பயற்றுடன் சர்க்கரை சேர்த்துச் செய்யபப்டுவதாகும். 

இனிப்புச்சுவைக்காகக் கருப்பஞ்சாற்றைக் கட்டியாக்கிப் பயன்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (259) தருகின்றது. பின்னாளில் இதுவே வெல்லக்கட்டியானது. 

மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அடை என்றால் இலை என்று பொருள். இது இலை வடிவினதான பலகாரமாக இருக்கலாம். 

வெல்லப் பாகையும் பாலையும் கலந்து செய்த பண்ணியம் என்னும் உணவுப் பொருள் பற்றிப் புறநானூறு தெரிவிக்கின்றது 

'உனு மூணு முனையி னினிதெனப்
பாலிற்பெய்தவும் பாகிற் கொண்டனவும்” (புறநானூறு 381).

பொருட்களைக் கூவி விற்பதால் கூவியர் எனப்பட்ட வணிகர் 'கரிய சட்டியில் பாகுடனே வேண்டுவன கூட்டி நூல்போல் அமைத்தவட்டம்” என ஒருவகைச் சிற்றுண்டியை விற்றதாகப் பெரும்பாணாற்றுப்படை (377-378) கூறுகின்றது. 

“மதுரை நகரக் கடைத்தெருவில் சிற்றுண்டிக் கடைகள் இருந்தன. அவற்றிற் பாகினால் செய்யப்பட்ட நல்ல வரிகளுடைய தேனடையைப் போன்ற மெல்லிய அடைகள் செய்யப்பட்டன. பருப்பை உள்ளீடாய்க் கொண்டு, சர்க்கரை கூட்டிப் பிடித்த 'மோதகம்” என்ற ஒரு வகைத் தின்பண்டமும் செய்யப்பட்டது. இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவைக் கொண்டு கூவியர் பல சிற்றுண்டி வகைகளைச் செய்தனர்” என மதுரைக் காஞ்சி (624-627) குறிப்பிடுகின்றது. 

பொரியையும் பாலையும் கலந்து உண்ணும் வழக்கம் மிகப் பழமையானது. ஐங்குநூறு (53) இதைக் கூறுகின்றது. இப்போது உண்ணப்படுகின்ற ‘சீரியலை’ இது ஒத்ததாகும்.  


ஊறுகாய் வகைகள். 

சங்கத்தமிழர்கள் பலவகையான ஊறுகாய்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். மாங்காயில் நல்ல மிளகு கலந்து கறிவேப்பலை தாளித்து ஊறுகாய் செய்யும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (307-10) கூறுகின்றது. இதே போன்று மாதுளங்காய் ஊறுகாயும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. 

“குடும்பத்துடன் உப்பை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராய்ச் சென்று வாணிகம் செய்துவந்த உமணர், ஊறுகாய்ப் பானைகளைத் தம் வண்டிகளில் கட்டியிருந்தனர். அந்த ஊறுகாய், 'காடி' எனப்பட்டது. அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் 'காடி வைத்த கலம்' எனப்பட்டது. 'புளியங்காய், நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் 'காடி' என்றார்,' என்பது நச்சினார்க்கினியர் விளக்கம்” என இராச மாணிக்கனார் ‘சங்ககாலத்து உணவும் உடையும்’ என்ற தன் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். 


சமையல் நுட்பங்கள்

சங்கத்தமிழரின் உணவு முறைகளில் அதிகமாகக் காணப்பட்ட உணவுப் பொருட்கள் நேரடியாக இயற்கையிலிருந்து கிடைக்கப்பட்டவையே. காய்கறி, கனி, கிழங்கு, ஊன்வகை போன்றவற்றை இயற்கையிடத்தே பெற்றுப் பச்சையாகவும்; வேகவைத்தும் உண்டனர். 

உணவுத் தேடலுக்கான வேட்டையாடுதலே உணவுத்தொழில்நுட்பத்தை நோக்கிய தொடக்கம் எனலாம். குறித்த விலங்கினத்தைப் பிடிக்க கையாண்ட உத்திகளும், கண்டறிந்த வேட்டைக் கருவிகளுமே உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான தொடக்கச் சிந்தனைகள் ஆகும். 

வேடுவ சமூகத் தளத்தில் இருந்து ஆநிரை சமூகநிலைக்கு நகரும்போது இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடைகின்றது.  பாலிலிருந்து தயிர் மோர், வெண்ணெய், நெய் உருவாக்கக் கற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். 

மீன் பிடித்தல் மிக தொன்மையான தொழில். தூண்டில், வலைவீசுதல், உளி எறிதல் போன்ற போன்ற நுட்பங்கள் அன்றே பயன்படுத்தப்பட்டுள்ளன. 

உணவைச் சுட்டுத்தின்ற காலத்தை தொடர்ந்து நீரில் வேகவைத்து உண்ணும் நிலைக்கு சமூகம் உயர்ந்தமைக்குக் காரணம் மட்பாண்டங்களின் பயன்பாடடை அறிந்தமையே. பலவகையான மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்களை அக்காலத்தோர் அறிந்து வைத்திருந்தனர். அகழ்வாய்வின் போது கிடைக்கப்பபெற்ற மட்பாண்டங்கள் இதற்குச் சான்று தருகின்றன.

சமூகநிலை மாற்றத்தின் அடுத்த தளமான வேளாண் நிலையே மேலும் பல நுட்பங்கள் தோன்ற வழிவகுத்தது. 

உப்பு, நெய், மிளகு, கடுகு என்பவற்றை என்பவற்றை வேண்டிய அளவு சேர்த்துத் தாளிதம் செய்யும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டிருந்தார்கள். புளியிட்ட உணவு எளிதில் பழுதடையாது என் அறிந்தனர்.

நெல் குற்ற உரல் உலக்கையையும், அரைப்பதற்கு அம்மியையும் (நெடுநல்வாடை 50) கொழிப்பதற்குச் சுளகையும் உருவாக்கினர். உலர்ந்த சுரைக்காயும், மூங்கிற் குழாய்களும் நீர் கொண்டு செல்லப் பயன்பட்டிருக்கின்றன. 

பல்வகையான நுட்பங்களுடன் பல்தரப்பட்ட மது வகையறாக்களை வடிக்கக் கற்றுக்கொண்டனர். 

கரும்பிலிருந்து பல படிமுறைகளினூடாகக் கருப்பங்கட்டியை உருவாக்கத் தெரிந்திருந்தனர்.

நிறைவுரை

சங்கத்தமிழரது உணவு மரபுகள் பற்றிய பல செய்திகள் இதுவரையில் மேலே கூறப்பட்டன. பெரிதும் சங்க இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இச் செய்திகள் பெறப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியவை. சில பாடல்கள் காலத்தால் மிக முற்பட்டவை எனக் கருத இடமுண்டு. 

இந்தக் காலஇடைவெளிகளை சங்கத்தாரது உணவப் பண்பாட்டிலும் காணலாம்.  

ஒரே காலகட்டத்திலும் கூட, நில அமைவுகளும் போக்குவரத்து வசதியின்மையும் சங்ககாலத்தோரது வாழ் களங்களுக்கடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியிருந்தன. குறிஞ்சியில் பெறப்பட்ட தேன், நெய்தல் நிலத்தாருக்கு அரிய பொருள் ஆனது. நெய்தலில் விளைந்த உப்பு குறிஞ்சியாருக்கு எட்டாப் பொருளாயிற்று. பெரும் பணியினூடாகப் பெறப்பட்ட பசுநெய் பலருக்கும் கிட்டாத பெறுமதி மிக்கதானது. மருதத்தில் விளைந்த நெல் மலைக்கும் அலைக்கும் எளிதிற் கிடைக்கவில்லை. 

எனினும் தத்தமது சூழலில் விளைந்த, பெறப்பட்ட உணவுவகைகளைக் கொண்டு குறைவிலாது தம் தேவைகளை நிறைவேற்றினர் சங்கத் தமிழர். பெரும் ஆடம்பரமற்ற எளிமையான உணவுப் பழக்கமே சங்கம் எங்கும் பெரிதும் விரவிக் கிடக்கின்றது. 

பிற இனத்தாரது பண்பாட்டுப் படையெடுப்புகளால் பாதிக்கப்படாத தனித்துவமான உணவுப் பொருட்களும் சமையல் முறைகளும் சங்ககாலத்திலேயே காணப்பட்டிருக்கின்றன.  சங்கத்தை அடுத்த அறநெறிக்காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பெற்ற செல்வாக்கு தமிழர் உணவு மரபில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரையில் தமிழர் உணவில் முதன்மையுற்றிருந்த ஊன்வகைகள் பின்தள்ளப்பட்டன. உணவொழுக்கத்தில் சைவம் அசைவம் போன்ற பாகுபாடுகள் தோன்றின. இறை வழிபாடு தழுவிய நோன்பு முறைகளும் மரக்கறி உணவுகளும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கின. 

இம்மாற்றங்கள் சமூக வளர்ச்சியின் பரிணாமப் படிகள் என எடுத்துக்கொண்டாலும் தமிழரின் தனித்துவ மரபுகள் இ;மமாற்றங்களினால் திரிபுகளுக்கு உட்பட்டதை நாம் ஏற்றாக வேண்டும்.

தமிழர் வாழ்வியல் நீட்சியில் எம் பழம்பெரும் பண்பாட்டை உணர்ந்து கொள்வதற்குச் சங்ககாலத்து உணவு மரபுகள் பெரும் துணை செய்கின்றன. 

                 துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழர் உணவு: பக்தவத்சல பாரதி
பண்பாட்டு அசைவுகள்: தொ.பரமசிவன்
முல்லைநில உணவு முறைகள்: முனைவர் சு. அரங்கநாதன்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்: கே. கே. பிள்ளை
தமிழரும் தாவரமும்: பேராசிரியர் கு.வி. கிருஸ்ணமூர்த்தி
சங்ககாலத்து உணவும் உடையும்: மா.இராசமாணிக்கனார்.
பண்டைத் தமிழர் உணவுகள்: முனைவர் சி. சேதுராமன்
புறநானூறு
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பரிபாடல்
மதுரைக்காஞ்சி
நற்றிணை
பட்டினப்பாலை
அகநானூறு
                                           https://thoguppukal.wordpress.com/2010/06/20/தொல்காப்பியம்-காட்டும்-%EF%BF%BD/

ஆடி (யூலை)  2014  - தாய்வீடு (கனடா) இதழில் வெளியான கட்டுரை. 

இக்கட்டுரைக்கென ஓவியம் வரைந்த ஓவியர் மருது அவர்களுக்கும் வரைகலையால் அழகூட்டிய கருணா  அவர்களுக்கும் நன்றி.