Friday, November 11, 2022

ஆண்களுக்கான தூய தமிழ்ப் பெயர்கள்!

 ஆண்களுக்கான தமிழ்ப் பெயர்கள்! 

இப்பெயர்கள் வடமொழிக்கலப்பு அற்றவை, அத்துடன் பொருள் செறிந்தவை.

அறிவன், அறிஞன்,அழகன்,அழலன், அன்பன், அருள், அருளன், அதியன், அனைத்தன், அரணன், அமுதன், அமிழ்தன், அகண்டன்,அகத்தியன், அகவன், அகில்,அங்கயன், ,அண்ணல்,அண்ணாவி, அணியன், அம்பரன், அம்பலன்,அமரன்,அரங்கன் .அரன், அரவணையன், அறன்,  அரியன், அருந்திரள், அருகன், அருங்கலன், அருளி, அரும்பன், அளியன், அனலன் ,அழல்வண்ணன், அறவோன், அறவாழி,அறவாணன், அறுமுகன்,அனிச்சன், ஆழன், அரசன், அஞ்சுகன், அகன், 

ஆதன், அறிவன், ஆடகன், ஆணையன், ஆரூரன், ஆர்கலியன்,ஆராவமுதன், ஆழியன், ஆழ்வார், ஆளரி, ஆற்றுநன், ஆன்றவன், ஆய், ஆயன், ஆயனன், 

இனியன், இயன், இதழன், இமிரன், இசை, இளவல், இயல்,  ஈழவன், எழில், எழிலன், ஈகன்,  ஒளிரன், உதியன், உரன், உரவோன், எல், எல்லாளன், ஐயன், ஐயன்கோ, ஐயனார், ஒப்பிலான், 

வாகை, கோ, வளவன், சேயோன், வழுதி, கோன், முருகன், சான்றோன். யாழன், வள்ளல், பாரி, வேள், வேந்தன், நன்னன், எயினன். நாடன், கிள்ளி, தமிழ், தமிழவன், சுடர், சுடரவன்,  பரிதி, பாகன், பகலவன், தூயோன், தென்றல், கிழான், வழுதி, வெற்பன், சேந்தன், வேலன், ஐயன், பாவலன், புரவலன், புலவன், மன்னன், மலரவன், வானன், வாணன். நாகன், வேங்கை, 








Saturday, November 5, 2022

சங்கத் தமிழரது குடும்பக் கொள்கைகள்

 சங்கத் தமிழரது குடும்பக் கொள்கைகள்

அனைத்துலக மனித உரிமை சாசனம் குடும்பம் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது.

“குடும்பம் என்பது, சமுதாயத்தின் இயல்பானதும் அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன் சமூகத்தாலும் தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கான தகுதியைக் கொண்டது என்பதாகும்.”

குடும்பமே ஓர் இனத்தின் முதன்மையான சமூக அலகு எனப்படுகின்றது. மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஓர் இனத்தினது பண்பாட்டு வளர்ச்சியின் அடையாளமாகவும் பண்பாட்டைப் பேணி வெளிப்படுத்தும் தளமாகவும் குடும்ப அலகே  திகழ்கின்றது. 

தமிழர் வரலாற்றில் குடும்ப அமைப்பு எப்போது, எவ்வாறு தோன்றியது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. எனினும் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் குடும்பம் தொடர்பான சிறந்த விளக்கங்களையும் இலக்கண வரையறைகளையும் எமக்குத் தந்துள்ளது. இவ்வாறான குடும்ப ஒழுக்கநெறிகள் தொல்காப்பியர் காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கின்றது என்பதை அறியும் போது தமிழர் குடும்ப அமைப்பு தொல்காப்பியத்துக்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது.

தொல்காப்பியமும் அக, புற திணைகளைச் சார்ந்த சங்க இலக்கியங்களும் தமிழரது அக்காலக் குடும்பக் கொள்கைகளை வரையறுப்பதற்குரிய போதிய சான்றுகளைத் தருகின்றன. அவற்றை நோக்குவோம். 

தொல்காப்பியரின் குடும்பக் கொள்கைகள்: 

உலகில் இப்போது பேசப்படுகின்ற ஆயிரக்கணக்கான மொழிகளுக்கு முன்பே தோன்றிய மூத்த மொழி தமிழ். மனிதத் தோற்றத்தின் பின்னான முதல் மொழியாகிய சைகை மொழியில் இருந்து பேச்சு, எழுத்தாக வளர்ச்சி பெற்ற மொழி, பின்னர் இன்புறுத்தற்குரிய இலக்கியம் எனப் பன்முக வளர்ச்சி கொண்டு எழுச்சி பெற்ற மொழியாகத் தமிழ் திகழ்ந்தது. இலக்கியப் போக்குகளைச் சீரமைக்கவும் வரையறுக்கவும் இலக்கணத் தோற்றத்தின் அவசியம் உணரப்பட்டதையடுத்துப் பல இலக்கண நூல்கள் தோன்றின. பின்னாளில் அவ்விலக்கணங்களின் செழுமையான வடிவமாகத் தோற்றங் கொண்டு இன்றுவரை அழியாது தமிழர் வாழ்வியலின் பெருஞ்சான்றாகத் திகழ்வது தொல்காப்பியமாகும். 

மொழியால் செய்யப்படுவது இலக்கியம் என்பதால் இலக்கியம் படைப்பதற்கு மொழியிலக்கணம் அறிய வேண்டியது அவசியமாயிற்று. மொழி வல்லாளர் அக்காலத்திலேயே மொழியை எழுத்து, சொல் எனும் இரு பகுப்புகளாகக் கொண்டு இலக்கணம் செய்தனர். இன்றுவரை உலக மொழிகள் பலவும் இவ்விரு பகுப்புகளுக்கும் மட்டுமே இலக்ணம் செய்து வருகின்றன. 

இலக்கியம் ஆக்குதற்கு மொழியறிவு மட்டுமே போதுமா? காலத்தை விம்பமாய்க்; காட்டவல்ல இலக்கியம் படைக்க வேண்டுமாயின் தமிழர் வாழ்வு பற்றிய தெளிவும் வரையறைகளும் படைப்போருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே.

இதை நன்கு உணர்ந்து கொண்ட தமிழ் இலக்கணவியலாளர் தமிழர் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர் எழுத்து, சொல்லோடு இவ்விலக்கணத்துக்குப் ‘பொருள்’ எனப் பெயரிட்டனர். இந்தப் பொருள் இலக்கணமானது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த வாழ்வியலை உய்த்துணர்ந்து பகுத்தும் தொகுத்தும் உருவாக்கப்பட்டது. 

இலக்கியம் செய்வோர் தமிழர் வாழ்வியலை இயல்பாகவும் நுட்பமாகவும் செப்பமாகவும் படைக்க இவ்விலக்கண வரையரைகளே உதவின. இக்காலத்தே இயல்புக்குப் புறம்பான கற்பனை மிகுந்த காவியங்களை வடமொழி உட்பட பிற மொழிகள் படைத்துக்கொண்டிருந்தவேளை இயற்கையோடிணைந்த வாழ்வை இயல்பு மாறாமல் தமிழர் படைத்தனர். இதற்கான முதன்மைக்காரணம் இலக்கணத்தார் வரையறுத்த ‘பொருள்’ இலக்கணமே. 

அகம், புறம் என்ற இருபெரும் பகுப்புகளைக் கொண்ட பொருள் இலக்கணத்தில் அகத்திணையே தமிழரது குடும்பக் கொள்கை வகுப்பின் தளமாகத் திகழ்கின்றது. 

தொல்காப்பியர் காட்டும் அகத்திணையானது களவு, கற்பு என்னும் இருபெரும் பகுப்புகளைக் கொண்டதாகும். பருவம் எய்திய ஆணும் பெண்ணும் மனமொத்துச்; செய்யும் காதல் பெரிதும் களவு நெறி சார்ந்ததாகும். களவு ஒழுக்கம் வெளிப்பட்ட பின் திருமண உறவினூடாக இருவரும் இணைந்து  குடும்ப வாழ்வை ஆரம்பிப்பர். 

சங்க இலக்கியங்கள் பெரிதும் காதலைப் போற்றியுரைத்தாலும் அக்காலச் சமூகம் களவு ஒழுக்கமாகிய காதலை பெரிதும் ஏற்றுக்கொண்டதாகக் கூற முடியாது. தொல்காப்பியம் களவுக் காலத்தில் நிகழும் நான்கு விடயங்களைக் குறிப்பிடுகின்றது. இச்செறித்தல், அறத்தொடு நிற்றல், உடன்போகுதல், மடல் ஏறுதல் என்பனவாகும்.

இச்செறித்தல்: காதல் வயப்பட்ட தலைவியின் போக்கை உணர்ந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைப்பர். 

அறத்தொடு நிற்றல்: தலைவியின் காதலைத் தோழி போன்றோர் பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல்.

உடன்போக்கு: பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்காதவிடத்துத் தலைவனும் தலைவியும் உடன்போக்கின் வழியே தனித்துச் சென்று திருமணம் செய்தல்.

மடல் ஏறுதல்: விரும்பிய பெண்ணை அடைய முடியாதவிடத்து ஆண்மகன் பனை மட்டைகளால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி உடலில் பெண்ணின் உருவத்தையும் பெயரையும் பச்சை குத்தி ஊர்வலமாக வருதல். 

இளையோரது காதலைப் பெற்றோரும் சமூகத்தோரும் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையிலேயே இவையெல்லாம் நிகழ்ந்தன. 

தொடக்ககாலத்தில் ஊர் அறிய நிகழ்த்தப்படுகின்ற திருமண முறை இருக்கவில்லை. பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் இயல்பாகக் கூடி வாழ்தலே குடும்ப வாழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த வாழ்வில் ஏமாற்றுதலும் பொய்யும் களவும் தோன்றியதையடுத்து, ஊரார் அறிய நிகழும் திருமணமுறை தோன்றியது என்கின்றார் தொல்காப்பியர். 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 

ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொ. பொ. 72)

தொல்காப்பியர் குறிப்பிட்ட ஐயர் என்போர் ஆரியப் பிராமணர் அல்லர். சமூகச் சான்றோரே என ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பத்து வகையான பொருத்தங்கள் இருக்க வேண்டும் என இலக்கணம் கூறுகின்றது. 

“பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,

உருவு, நிறுத்த காம வாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு, திரு என

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. (தொ.பொ.மெ. 25)

நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பிறந்தால் போதாது. அந்நற்குடிக்கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார். இருவரிடமும் ஆண்மை அதாவது ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.

அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும். உருவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான இணையர் என்னும்படியாக உயரம், பருமன் இருக்க வேண்டும்.

நிறுத்தக் காம வாயில் என்பது தொல்காப்பியர் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்தாகும். உடலில் அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.

நிறை என்பது மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும். உணர்வு என்பது ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும். திரு என்பது செல்வம்.

இவ்வகைப் பத்துப் பொருத்தமும் நல்ல குடும்ப வாழ்வுக்குரிய திருமணத்துக்கு இன்றியமையாததாகும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். 

திருமணத்துக்குப் பின்னான குடும்ப வாழ்வைக் கற்புநெறி என்பர் இலக்கணவியலாளர். 

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக் 

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.”  (தொல் பொ. 71)

பெண்ணைப் பெறுவதற்குரிய மரபிற் தோன்றிய ஆடவனுக்குப் பெண்ணைக் கொடுக்கவல்ல மரபில் தோன்றிய பெற்றோர், உறவினர் என்போர் பெண்ணைக் கொடுக்க ஆடவன் தரப்பினர் கொள்வர். இதுவே கற்புநெறியின் தொடக்கமாகும். 

பெற்றோர், சமூகத்தோரது உடன்பாடு இன்றியும் திருமணங்கள் நடைபெறவல்லன என்பதையும் தொல்காப்பியம் சுட்டுகின்றது. 

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்தலுடன் போகிய காலையான” (தொல். பொ 73) 

மறைந்து ஒழுகும் களவுநெறியில் நின்று வெளிப்படுவதுவும், உறவினர் கொடுக்க நடக்கும் திருமணமும் இயல்புநெறி சார்ந்ததாகும். இத்திருமண உறவில் மகிழ்ச்சி, புலத்தல், ஊடல், ஊடல் உணர்தல், பிரிதல் ஆகிய நிகழ்வுகளும் உள்ளன எனவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.(தொல்.பொ.74)

இலக்கியங்களில் குடும்பக் கொள்கைகள்: 

திருக்குறள் தமிழரது குடும்பக் கொள்கைகளை விளக்கும் உயர்ந்த நூலாகும். திருக்குறள் வகுத்த கொள்கைகள் பலவும் தமிழரது நீண்ட வாழ்வின் வழியே பெறப்பட்ட சாரம் எனலாம். சங்க இலக்கியங்கள் பலவும் இக்குடும்பக் கொள்கைகளை அழகாகப் புலப்படுத்துகின்றன. 

கணவனும் மனைவியும் மனமொத்துத் தன்னலமில்லாமல் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொண்டு ஈருடல் ஓருயிராய் வாழ வேண்டும் என இலக்கியங்கள் கூறுகின்றன. 

இல்லறம் நல்லறம்

வாழ்க்கைத் துணை நலமாய் விளங்கும் பெண், அன்பு, கற்பு, பொறுமை, விருந்தோம்பல், சுற்றம் பேணல் முதலிய அருங்குணங்களைப் பெற்றுத் திகழ்தல் சிறப்பு. மேற்குறித்த பண்புகளோடு பிற சிறந்த பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற தலைவியை அகநானூறு பின்வருமாறு சித்தரிக்கிறது.


“அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,

…………………………………………………………………………

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,“……………(அகம் 225 : 1-3)

பாலைத்திணையில், ‘தன் மீது அன்பு கொண்டவள், சிறந்த மடமையும் சாயலும் குணங்களும் பொருந்தியவள், எலும்பையும் நெகிழச் செய்விக்கும் இனிதான பேச்சை உடையவள், இப்படி பிற சிறந்த குணங்களும் எல்லாம் ஒன்றுபட்டு இருக்கின்ற ஒரு குறிக்கோளுடையவளாக ஒருங்கே அமைந்திருப்பன போல விளங்குபவள் நம் தலைவி’ என்று தலைவன் கூற்றாக எயினந்தை மகனார் இளங்கீரனார் என்ற புலவர் தலைவியின் இயல்புகளைக் குறிப்பிடுகிறார்.

மனைவி என்பவள் தன் கணவன் மீது அன்பும், ஐம்பொறியால் நுகரும் மென்மைத் தன்மையினைக் கொண்டு இருத்தல் வேண்டும். இத்தகைய தன்மையினைக் கொண்ட தன் மனைவியைக் காணவேண்டுமென்று எண்ணித் தேரினை விரைந்து செலுத்த பாகனை வேண்டுகிறான்.

“வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து 

…………………………………………………………

இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! “……………(அகம் 94 : 12-14)

என்று நன்பலூர்ச் சிறுமேதாவியார் முல்லைத்திணையில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

பிறவிதோறும் தொடரும் உறவு:

கணவன் மனைவி உறவு சட்டெனத் தோன்றுதல்ல,  பல பிறவிகளாகத் தொடர்ந்து வருவதாகச் சங்கத் தமிழர் கருதினர். முதற் பிறப்பிலும் கணவன் மனைவியாக வாழ்ந்தோரே இப்பிறவியிலும் விதியின் வலிமையால் இணைந்துள்ளனர் என நம்பினர். 

ஒரு குறுந்தொகைப் பாடல் இதை அழகுறக் கூறுகின்றது. 

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானாகியர் நின் நெஞ்சுநேர் பவளே” (குறு 49)

இப்பிறப்பு நீங்கி மறுபிறவியில் பிறப்பினும் நீயே என் கணவனாவாய். நானே உன் நெஞ்சில் நிறைந்தவளாவேன் என்கிறாள் மனைவி. 

உண்மை மிக்க காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,

“சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்

பிறப்புப் பிறிதாகுவ தாயின்

மறக்குவென் கொல்என் காதலன் எனவே” (நற்றிணை 397)

என்னும் அடிகளும் காட்டுகின்றன.


“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர் அளவின்றே – சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை-3)

என்றுரைக்கிறாள் மற்றுமொரு பெண். என் காதலனோடான நட்பு நிலத்தை விடப் பெரியது. வானத்தை விட உயர்ந்தது, நீரை விட ஆழமானது என அன்பின் அகலத்தையும் உயரத்தையும் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றாள். 

வறுமையிலும் செம்மை:

செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

“கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே” (110)


காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன்; ஓசை இனிமை நிறைந்தன் எண்ணங்கள் மிக உயர்ந்தன.

இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை ஒரு புலவர் பின்வருமாறு பாடுகிறார்.

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”     (கலி.18)

காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி.

அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது

இன்பமும் உண்டோ எமக்கு?           (கலி. 6)

மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப் பற்றி எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா? என்கிறாள் தலைவி.

விருந்தோம்பல்:

தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெற்றிருக்கும் பெருமரபாகும். 

“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருவள்ளுவர் இல்லறத்தானின் கடமைமையை உணர்த்துகின்றார். குடும்ப வாழ்வின் உயர்ந்த கொள்கையாக விருந்தோம்பல் பேணப்பட்டு வந்திருக்கின்றது. 

நீண்ட மரபைக் கொண்ட சங்கத் தமிழரின் விருந்தோம்பல் பண்பின் தொடர்ச்சியே வள்ளுவத்தில் கூறப்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகள் பல சங்க இலக்கியங்களில் உள்ளன.

தொல்காப்பியம் புதியதாக வரும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.

விருந்தே தானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள் 1495)

இதனை அடிப்படையாகக் கொண்டே புதியதாக வருவோரை விருந்தினர் என அழைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம். 

இல்லறத்தார் தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் அவ்விருந்தினருக்கு இனிய உணவு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பர். அதனால் மீன் வேட்டைக்குச் சென்ற கணவர் விரைவில் திரும்பி வரவேண்டும் என்று மனைவி எதிர்நோக்கிக் காத்திருக்கும் செய்தியும் இரவில் விருந்தினர் வந்தாலும் மனைவியும் கணவனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் செய்தியும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

“... மனையிலிருந்து

இருங்கழி துழவும் பனித்தலைப்பரதவர்

திண்திமில் விளக்கம் எண்ணும்” (நற்:372)

”அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்” (42, 9-18)

பெருங்குன்றூர்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற பொழுது “எனக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்பதற்குத் தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது. அதனை மட்டும் தீர்த்து வைப்பாயாக” என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு வலியுறுத்தப்படுகின்றது.

“விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்

பொறிப்புன ருடம்பிற் றோன்றியென்

அறிவுகெட நின்ற நல் கூர்மையே” (புற:266)

என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.

சிறுபாணாற்றுப்படை அரசர்களின் கொடைச் சிறப்பைக் கூறுவதுடன் விருந்தோம்பல் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.

‘எயில்பட்டின பரதவப் பெண்கள் சூடான குழல் மீன் கறியையும், வேலூரில் இருக்கும் எயினர் குலப்பெண்கள் இனிய புளிக்கறி சேர்த்து சமைத்த சோற்றுடன் காட்டுப்பசு இறைச்சியையும், ஆழுரைச் சார்ந்த உழவர்களின் தங்கைகள், குற்றிச் சமைத்த சோற்றுக் கட்டியுடன் பிளந்த காலுடைய நண்டுக்கறியையும் விருந்தோம்பலுக்குப் பயன்படுத்துவர்’ என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.

“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை ஆயமொடு

ஆமான் நாட்டின் அமைவரப் பெறுகுவீர்” (சிறு 175 – 177)

“சுவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு

சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்” (சிறு 194-195)

நமது நெஞ்சம் வலிக்கத்தக்தாக காதலர் பொருள் தேடச் சென்றுள்ளார். அப்பொருள் நாம் அனுபவிப்பதற்காக அல்ல, இல்லை என்று வருவோருக்குக் கொடுப்பதற்காகவே. ‘இரக்கமே என் காதலர்’ எனத் தலைவி தன் தோழிக்கு உரைக்கின்றாள். 


'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் 

வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் 

பொருளே காதலர் காதல்;

அருளே காதலர் என்றி, நீயே. (அகம் 53)

‘அறநெறியிலிருந்து நீங்காது இல்வாழ்க்கை நடத்துதலும் சுற்றத்தாரது பலவகையான துன்பங்களைத் தாங்குதலும் பசித்தவர்க்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த பண்பையும்; தொல்தமிழர் பெற்றிருந்தனர்’ என முள்ளியூர்ப் பூதியார், அகநானூற்றில் குறிப்பிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அன்பு கொண்ட தலைவனும் தலைவியும் விருந்தோம்புதலையும், சுற்றம் தழுவுதலையும், வலியோர் தம்துயர் துடைத்தலையும் தம்முடைய கடமைகளாகக் கொண்டிருந்தனர் என்னும் பண்பு தெரிகிறது.

பிறரிடம் கேட்பதைத் விடவும் கொடுப்பதே சிறந்தது என்ற உள்ளம் கொண்ட தலைவனும் தலைவியும் இல்லறத்திலிருந்து பிறர்க்கு ஈதலையே தம்நெறியாகக் கொண்டனர். தான் ஈட்டிய செல்வம், தனக்கு மட்டுமேயின்றி பிறரும் பயனடைய வேண்டும் என்று விரும்பினர். அதுவே தம் பிறவிப்பயன் என்றும் கருதினர், இதனை,


“இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர் 

…………………………………………………………

அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்”…………… (அகம் 389 : 11-13)

என்று நக்கீரனார், பாலைத்திணையில் குறிப்பிடுகிறார். இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத உயர்ந்த பண்பு இன்றைய தலைமுறையினருக்குப் பாடமாக அமைகின்றது. இத்தகைய நற்குணங்களைக் கொண்ட தலைவன் தலைவி தம் இல்லத்திலிருந்து சமுதாயக் கடன்களை ஆற்றியுள்ளமை போற்றுதலுக்குரியது.


மக்கட்பேறு:

குடும்ப வாழ்க்கை மக்கள் பேறின்றி முழுமையடைவதில்லை என்பது தமிழ் ஆன்றோர் கொள்கையாகும். வள்ளுவர் மக்கட் பேறு என்னும் தனித்துவமான அதிகாரத்தின் வழியே குடும்பப் பேறிள் சிறப்பினை அழகுறக் கூறியுள்ளார். 

பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி எழுதிய ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெறுகின்றது. 

“படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்

உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே"(புறம்-188)

"எல்லாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருப்பது பயனில்லை. பலரோடு விருந்துண்டு உறவாடுதலிலும் பயனில்லை. வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவைத் தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை பெற்றிராதோரது வாழ்நாள் பயனற்றது என்கிறது இப்பாடல்.

ஐங்குநூறு என்ற இலக்கியத்தில் ஓர் அழகிய காட்சி. 

செவிலித்தாய் தலைவியும் தலைவனும் வாழும் வீட்டிற்குச் சென்றபொழுது, அவர்கள் மகனுடன் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து மகிழ்கிறாள். திரும்பி வந்து தலைவியின் தாயிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இவ்வாறு சொல்கிறாள். 


“மறி இடைப் படுத்த மான் பிணை போலப்

புதல்வன் நடுவணனாக நன்றும்

இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி

நீல் நிற வியல் அகம் கவைஇய

ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"

(ஐங். 401) 

மான் இணையின் இடையே படுத்திருக்கும் மான் போல மகன் நடுவில் படுத்திருக்க வெறுப்பின்றித் தலைவனும் தலைவியும் படுத்திருப்பது இனிமையிலும் இனிமையாய் இருக்கிறது. இக்காட்சி நீல நிறம் சூழப்பட்ட அகன்ற இவ்வுலகிலும் மறு உலகிலும் கிடைத்தற்கரியதாகும்.

குழந்தை பெற்ற தாய் இலக்கியங்களில் பல இடங்களிலும் பாராட்டப்படுகின்றாள். 

“மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்

தனக்கு விளக்கம் தகைசால் புதல்வர்” என விளம்பிநாகனார் என்னும் புலவர் கூறுகின்றார். 

குடும்ப வாழ்வில் பெருவரமாகச் சங்கத் தமிழர் மகப்பேற்றைக் கருதினர். 

அக்காலச் சமூகத்தில் குடும்பம் வலுவானதோர் அங்கமாகவே கருதப்பட்டது. இக்குடும்ப அமைப்பில் மகளிருக்குக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாவே இருந்தன. ஆண்களின் அதிகார எல்லை பரந்து விரிந்திருந்தது. எனினும் சிறப்பான வாழ்க்கை முறைகளும் ஒழுக்கநெறிகளும் குடும்பங்களுக்கென வகுக்கப்பட்டிருந்தன.

சங்கத் தமிழரின் வாழ்வு இலக்கியங்கள் வாயிலாக உணரப்பட்டு போற்றப்படுவதற்கு அக்கால குடும்ப அமைப்பே முதன்மைக் காரணம் எனலாம். 


துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழர் நாகரிகமும் பண்பாடும் - முனைவர் அ. தட்சனாமூர்த்தி

சங்ககாலம் - முனைவர் கு. முத்துராசன். 

அகநானூறு

புறநானூறு

ஐங்குநூறு 

https://thoguppukal.wordpress.com/2011/03/15/விருந்தோம்பலின்-சிறப்பு
https://ta.wikipedia.org/wiki/அறிவுடை_நம்பி
http://thaenmaduratamil.blogspot.com/2014/04/ainkurunooru401.html






Sunday, May 29, 2022

தமிழர் மரபுரிமை - புரிதலும் பேணலும்

 தமிழர் மரபுரிமை - புரிதலும் பேணலும்

இன்றைய காலத்தில் மரபுரிமை என்ற சொல்லாட்சியைத் தமிழர் பெரிதும் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்தோரும் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப இச்சொல்லை அதிகமாவே பயன்படுத்துகின்றனர். வாழும் சூழலும் காலமாற்றங்களுமே இச்சொல்லாட்சியின் பொருளையும் பயன்பாட்டையும் விரிவாக்கி விளக்கம் தருகின்றன எனலாம். 

மரபு உரிமை என்ற வேறுபட்ட பொருளைக் கொண்ட இவ்விரு சொற்களும் இணைக்கப்பட்டு, புதியதொரு சொல்லாட்சியில் தமிழர் கையாளத் தொடங்கிய காலம் கடந்த நூற்றாண்டாகவே இருக்க வேண்டும். 


Legacy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக மரபுரிமை என்ற சொல்லை அகராதிகள் சுட்டுகின்றன. Heritage  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக அகராதிகள் 'பாரம்பரியம்' என்பதைக் குறிப்பிடுகின்றன. 

இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட எந்தத் தமிழ் ஆக்கங்களிலும் மரபுரிமை என்ற சொல் பயன்பட்டதாகத் தெரியவில்லை. தமிழரிடையே ஏற்பட்ட ஆங்கில மொழித்தாக்கமும் மரபுரிமை என்ற சொல்லின் தோற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழர் இயல்பான அன்றாட வாழ்வுடன் இணைந்து வெளிப்பட்டும் மறைந்தும் பின்பற்றப்பட்ட வந்த மரபுகள், வாழிடச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே, அவை பேணப்பட வேண்டும் என்ற தேவையை சமூகத்துக்கு ஏற்படுத்திருக்கக் கூடும். 

எடுத்துக்காட்டாக, பிறவினத்தோரின் பண்பாட்டு நடத்தைகள், தமிழினத்தோரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலில், இனம் சார்ந்த தனித்துவமான மரபைப் பேணுதல் என்ற உணர்வு தோற்றம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. 

பண்பாட்டுப் படையெடுப்புகள், பண்பாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் தோன்றும் நிலையில், காலங்காலமாகப் பின்பற்றி வந்த மரபை தமது உரிமையாகக் கருதி, அவற்றைப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வை இனத்தோரிடையே ஏற்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

இன்றைய பொழுதுகளில் மரபுரிமை என்ற சொல், தமிழரின் மரபுகளை, அடையாளங்களைப் பேணிச் செல்லும் நோக்கில் எங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சொல் பற்றிய தெளிவான புரிதலையும் அதைப் பேணிச்செல்லும் வழிவகைகளையும் கூற முனைகின்றது இந்தக் கட்டுரை. 

சொல் விளக்கம்: 

தமிழர் மரபுரிமை என்றால் என்ன? என்பதற்கு விடையாக, ~ஒரு தனித்துவமான இனக்குழுமானது கடந்த காலங்களில் தமக்கென உருவாக்கிக் கொண்டு, பின்பற்றியும் போற்றியும் வருகின்ற மரபுகள், மொழி, கட்டிடங்கள் என்பன இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில் அவை மரபுரிமை எனக் கருதப்படுகின்றன| என்ற விளக்கத்தை கேம்பிறிஜ் அகராதியை அடியொற்றிக் குறிப்பிடலாம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்ககழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் ச. குமரதேவன் மரபுரிமை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

'மரபுரிமை என்பது எமது முன்னைய சந்ததிகளில் இருந்து கொண்டுவரப்படுவதாகும். இது பாரம்பரியமாக முன்னோர்களால் வைத்திருக்கப்பட்ட உருவமற்ற சொத்து அல்லது கலை அல்லது சம்பிரதாயத்தால் கொண்டுவரப்படும் நடைமுறைகள், கட்டடங்கள், சமூகம் மற்றும் கலாசாரம் போன்றவற்றிற்கு முக்கியமாக கருதப்படும் வரலாறு, நம்பிக்கைகள் போன்றவற்றை குறிக்கும். இதனால் மரபுரிமை என்பது வரலாற்றுச் சூழலின் ஒரு உள்ளீட்டு அங்கமாக கொள்ளப்படும். ஆனால் இதனை ஒரு விடயமாக மட்டும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. இது பல்வேறு அம்சங்களின் தொகுப்பாகும். பண்பு, அடையாளம், கலாசார வேறுபாடு என்பன காலந்தோறும் கட்டியெழுப்பப்படும். இவற்றின் கலவை ஒரு இடத்தின் மரபுரிமையை உருவாக்க பயன்படும். பொதுவாக ஒரு நாட்டின் மரபுரிமையை கலாசார மற்றும் இயற்கை அம்சங்களைக் கொண்டு கலாசார மரபுரிமை, இயற்கை மரபுரிமை என இரண்டாக பிரிக்கலாம். இதில் கலாசார மரபுரிமை. கண்ணுக்கு புலப்படக்கூடிய, கண்ணுக்கு புலப்படாத இரு அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு குழு அல்லது சமூகத்தால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதும் நிகழ்காலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதும், எதிர்காலத்தில் அடுத்த சந்ததியினரின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டியவையுமாகும். இவ்வாய்வு கண்ணுக்கு புலப்படக்கூடிய யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன குடியிருப்பு மையங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமய வழிபாட்டு ஸ்தலங்கள், யாழ்ப்பாண இராசதானி கால கட்டடங்கள், ஐரோப்பியர் கால கோட்டைகள், ஐரோப்பியர் கால அரச நிர்வாக மையங்கள், வெளிச்ச வீடுகள் முதலான மரபுரிமைச் சின்னங்களை அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தி, அதன் வரலாற்று முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்குவதாகும். இதன் மூலம் மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போவது மக்களால் தடுக்கப்படுவதற்குரிய ஒரு சூழலை உருவாக்குவதுடன், அவற்றை பாதுகாப்பதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைப்பதுமாகும்." 

இக்கூற்றானது, மரபுரிமை பற்றிய போதிய விளக்கத்தைத் தருவதாக அமைகின்றது. 

தொல்காப்பியத்தில் மரபு - உரிமை: 

பழம்பெரும் இலக்கணமான தொல்காப்பியம் மரபு, உரிமை என்ற இரண்டு சொற்களையுமே ஆழமான பொருளில் கையாண்டுள்ளது. 

மரபு என்றால் என்ன? என்பதற்கு 'மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல்" என்று தொல்காப்பியம் விளக்கம் தருகின்றது. அதாவது, மரபு என்பது மாற்றமுடியாத சிறப்பினை உடையது. மொழி முன்னோர் கூறிய மரபு வழியில் பேசப்படுகிறது. மரபுநிலை திரிந்தால் மொழி பலவாகச் சிதையும் என்பதே இதன் பொருளாகும். 

தொல்காப்பியரின் மரபு பற்றிய விளக்கம் மொழிப் பயன்பாடு சார்ந்ததேயாயினும் பிற்காலத்தில் அது தமிழரின் வாழ்வியற் கோட்பாடுகளை முன்னிறுத்தியும் பொருள் தருவதாயிற்று. 

பொதுவாகவே தமிழர் பேச்சுவழக்கில் மரத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவர். ‘கால் மரத்து விட்டது’ ‘கை மரத்து விட்டது’ என இன்றும் பலர் கூறுவதைக் கேட்கலாம். மரத்தல் என்றால் நிலைபெற்ற நிலை எனவும் பொருள் கொள்ளலாம். நிலைபெற்று நிற்கும் தாவரம் மரம் எனப்பட்டது. இதனடிப்படையிலேயே ஓரினத்தின் நிலைபெற்ற நடத்தைகளை மரபு என அழைக்கம் வழக்கம் தோன்றியிருக்கலாம் எனவும் கருதுவர்.

உரிமை என்ற சொல் மிகவும் தொன்மையானது. இச்சொல் பெரிதும் இலக்கணங்களில் கையாளப்பட்டுள்ளது. தொல்காப்பியர் சில இடங்களில் உடைமை என்ற பொருள்படக் கையாண்டிருக்கின்றார். 

'உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்

ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்.." என்பது தொல்காப்பியர் கூற்று. 

இலக்கியங்கள் பெரிதும் கிழமை என்ற சொல்லையே  உடைமை என்ற பொருளில் கையாண்டிருக்கின்றன. 

தொன்மையான தமிழ்ச் சொற்களான மரபு, உரிமை இரண்டையும் இணைத்து மரபுரிமை என்ற சொல்லை ஆக்கியோர் நுட்பமாகவே சிந்தித்திருக்கின்றனர். 

பன்முகப் பண்பாட்டு வாழ்க்கைச் சூழலும் உலக மயமாதலும்  உலகெங்கும் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவதான பண்பாட்டுச் சூழலுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ~எமக்கான எமது மரபுரிமை| என்ற உரவொலியே (கோஷம்) மக்களுக்குள் ஓர் எழுச்சியை ஏற்படுத்துகின்றது. 

தமிழர் மரபின் தொன்மை:

இனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமாக வரலாறுகள் இருக்கின்றன. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கொண்ட இனங்களும் இருக்கின்றன. பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்ட இனங்களும் இருக்கின்றன. 

பழமையானவற்றைப் பேணிச்செல்வதில் இவ்வுலகம் பெரும் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றது. பழைய கட்டிடங்களையும் தாவரங்களையும் பேணுவதற்காகப் போராட்டங்களே நடைபெறுகின்றன. 

தமிழினத்தின் தொன்மை குறித்து அதிகம் எழுத வேண்டியதில்லை. உலகில் இதுவரை செம்மொழி தகுதி பெற்ற ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ்மொழிக்குத் தாய்மொழி இல்லை. இன்றும் அன்றாடப் பயன்பாட்டிலும் இலக்கியப் பயன்பாட்டிலும் சிறந்திருக்கும் மொழி. 

நீண்ட வரலாற்றையும் உயர்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டிருக்கும் தமிழனம் உயர்வான வாழ்வியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததாகப் பிறவறிஞர் கூறுகின்றனர். அவ்வாறதொரு வாழ்வியல் கொள்கைகள் இல்லையெனில் திருக்குறள் என்ற மானுடப் பொதுமை மிக்க நூலை உருவாக்கியிருக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. 

பிறவினத்தோர் மற்றுமோர் இனத்துக்கான பெறுமானத்தை வழங்குவதில், அவ்வினத்தின் தொன்மையும் போற்றுதற்குரிய பண்பாட்டு நடத்தைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. வரலாறு அறிந்த பிறவினத்து அறிஞர் தமிழரைப் பெருமதிப்போடு நோக்குவது இயல்பு. 

பன்முகப் பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழர், இனஞ்சார் தொன்மையும் மரபையும் பேணிச் செல்வதனூடாகப் பிறவினத்தோரின் நன்மதிப்பைப் பெற முடியும். எமது தனித்துவத்தையும் காத்துக்கொள்ள முடியும். 

புலம்பெயர்ந்தோர் சூழலில் மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும்:

ஓரினத்தின் மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும் வாழும் சூழலுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படுகின்றன. நிரந்தரமானதொரு நிலத்தில் வரலாற்றுக்காலம் தொட்டு வாழ்கின்ற இனம், அந்த நிலத்தின் அமைவுக்கும் தட்பவெப்ப சூழலுக்கும் ஏற்பவே வாழ்வை அமைத்துக் கொள்கின்றது. அந்த வாழ்விலிருந்தே மரபுகளும் பண்பாட்டு நடத்தைகளும் தோற்றம் கொள்கின்றன. 

இயற்கை, மற்றும் போர்ச் சூழல் காரணமான இடப்பெயர்வுக்கு உள்ளாகி, புதிய சூழலில் வாழத் தொடங்கும் இனம், வாழும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள முற்படுகின்றது. இது தவிர்க்க முடியாத மாற்றமாகும். ஓரினமாது தமது தனித்துவத்தை ~மரபைப் பின்பற்றுதல்| என்ற இயக்கத்தின் மூலமே வெளிப்படுத்திப் பேணிச்செல்ல முடியும். 

இத்தன்மையைப் புலம்பெயர்ந்தோர் வாழ்வியலில் காண முடியும். 

தமிழர் பெரிதும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்தும் பன்முகப் பண்பாட்டுச் சூழலைக் கொண்டவையே. அந்நாடுகளில் குடியேறிய இனம் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைக் கொண்டிருப்பது இயல்பு. பெரும்பாலன இனங்கள் குடியேறிய நாடுகளில் தமது மரபுகளைப் பேணிச்செல்வதில் முனைப்போடு செயற்படுகின்றன. யூதர், சீக்கியர், ஆர்மேனியர், சீனர், இஸ்லாமியர் போன்றோரை இதற்கு எடுத்துக்காட்டாகக் கருதலாம். 

புதிய பண்பாட்டு, வாழ்வியல் சூழல்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாயகத்துக் வெளியே தமக்கானதொரு தனித்துவமான வாழ்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில் அங்கு வாழும் பிறவினங்களோடு இணைந்து வாழ்வதிலும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளைப் பேணுவதிலும் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும் காலவோட்டத்தில் வலுவான சமூகமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். 

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினர் பெரிதும் தாயக வாழ்வியல் நடத்தைகளையே பின்பற்றி வாழ்ந்திருந்தனர். அந்த வாழ்வில் இயல்பாகவே மரபும் பண்பாட்டு உணர்வுகளும் இணைந்திருந்தன. மரபைப் பேணுதல் வேண்டும் என்ற உணர்வு பெரியளவில் தலைதூக்கவில்லை எனலாம். 

இன்றைய காலத்தில் முதற் தலைமுறையினர் ஏறக்குறைய ஓய்வுக்கு வந்துவிடுகின்ற நிலையில், இளைய தலைமுறையினர் சமூகத்தில் முதன்மை பெற்று வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையினர் இளையோராக வளர்ந்து வருகின்றனர். 

குடியேறிய நாடுகளில் பிறந்தும் அல்லது சிறிய வயதில் குடியேறியவர்களுமான இளையோர் பெரிதும் வாழும் நாடுகளுக்குரிய பொதுமைப் பண்பாட்டு வாழ்வியல் முறைமைகளை உள்வாங்கி வளர்வது இயல்பானதே. 

எனினும் பன்முகப் பண்பாட்டுச் சூழலில், ஓரினம் என்ற அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒருமைப்பாடு மிக்க தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்கும் மரபுகள்,  பண்பாட்டு நடத்தைகள் பின்பற்றப்படுவது மிக அவசியமாகும். 

மரபுகள், பண்பாடுகள் என்பவற்றைப் பின்பற்ற வேண்டும் என கூறிச் செல்வது அனைவருக்கும் எளிதானது. ஆனால் தமிழர் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைமுறைகளுக்கமைய மரபுகளைப் பேணிச் செல்வது மிகவும் கடினமானது. 

புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையோர், தமிழருக்கான மரபுகளையும் பண்பாட்டு நடத்தைகளையும் விட்டு விலகிச் செல்கின்றனர்| என்ற கூற்றை முன் வைப்பதற்கு முன், அவர்களைப் தமிழர் மரபுகளின் வழியே நடத்திச் செல்வதற்கு சமூகம் எடுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் யாவை? எனக் கேட்பின், பொருத்தமான விடையை எவராலும்  கூற இயலாது. 

மரபியல் பண்பாட்டுக் கல்வி:

தமிழர் வாழும் நாடுகளில் அந்நாடுகளுக்குரிய தேசியப் பொதுமைப் பண்பாடு என்ற ஒரு பொதுமையான போக்கு காணப்படும். இந்தப் பொதுமைப் பண்பாடு அங்கு வாழும் அனைத்து இனங்களுக்கும் பொதுவானது. கிறிஸ்மஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்பன ஏறக்குறைய இந்தப் பொதுமைப் பண்பாட்டு இயக்கங்களுக்குள் உள்ளடங்கி விட்டன. பள்ளிகளிலும் பணியிடங்களிலும் இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தைகள் தவிர்க்க முடியாதன. 

இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தையை ஏற்றுக்கொண்டு வளரும் இளையோர், தமது இனஞ்சார்ந்த பண்பாட்டு நடத்தைகளைத் தமது சமூகத்திடமிருந்தே கற்றுக் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். சமூகக் கொண்டாட்டங்களிலும் வீட்டுச் சடங்குகளிலும் வெளிப்படும் மரபுசார் விடயங்கள், பண்பாட்டு நடத்தைகள் வாயிலாகவே இளையோர் பலவற்றைத் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இளையோர் மரபுகளையும் பண்பாட்டு நடத்தைகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை மட்டுமே சமூகம் வழங்குகின்றது. 

இதேவேளை, இளையோரின் சூழலையும் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட சமூகக் கொண்டாட்டங்களில் பெரும்பாலான இளையோர் பங்குபற்றுவதில்லை. அனைத்து இளையோரும் வீட்டுச் சடங்குகளில் பெரிதும் ஈடுபாடு கொள்வதில்லை. பல இளையோர், சமூகத்தோரால் பின்பற்றப்படும் மரபுகளுக்கும் பண்பாட்டு நடத்தைகளுக்கும் விளக்கம் கேட்கின்றனர். போதிய விளக்கம் தாருங்கள், அவற்றைப் பின்பற்றுவது குறித்துச் சிந்திக்கின்றோம் என்கின்றனர். மரபுசார் செயற்பாடுகள் பற்றிய போதிய விளக்கங்கள் பெரியோர் பலருக்கும் இல்லை என்பதே உண்மை. 

இந்நிலையில்தான் மரபு, பண்பாடு சார்ந்து கட்டமைக்கப்பட்ட தனித்துவமான கல்வியின் தேவை ஏற்படுகின்றது. இக்கல்வியானது மொழிக்கல்வியில் இருந்து வேறுபட்டது. அதேவேளை மொழிக்கல்வியோடு இணைத்துக் கற்பிக்கப்பட வேண்டியது. 

குடியேறிய பல நாடுகளிலும் மொழிக்கல்வி தொடர்பாடல் தேவையை அடியொற்றியே கற்பிக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் கல்வித்திட்ட மாற்றங்களில் பண்பாட்டுக் கல்வி ஓரளவு இணைக்கப்பட்டிருந்தாலும் பண்பாட்டுக் கல்வி சார்ந்த தனித்துவமான கட்டமைப்புக்குரிய தேவை உருவாகி வருகின்றது. 

தமிழர் மரபியல், பண்பாட்டுக் கல்வியைத் திட்டமிடுவோர், புலம்பெயர் வாழ்வியலை நன்கு உள்வாங்கியவர்களாகவும் தமிழர் மரபியல், பண்பாடு சார்ந்து தெளிந்த அறிவைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 

தாயகத்தில் பின்பற்றப்படும் மரபு, பண்பாடு செயற்பாடுகளை உள்ளதை உள்ளவாறே பிற சூழல்களில் பின்பற்ற முடியாது. வாழும் சூழலுக்கு ஏற்ப, சில செயற்பாடுகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டியிருக்கும். சிலவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருக்கும். சிலவற்றை உள்ளதை உள்ளவாறே பின்பற்றலாம். 

இவ்வாறான பண்பாட்டுக் கல்வியும் வாழிட மொழியில் எழுதப்பட்ட ஒரு பண்பாட்டுக் கையேடும் காலத்தின் தேவை என்பதைப் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அறிந்திருத்தல் வேண்டும். 

முன்னர் ஒருதடவை குறிப்பிட்டதைப் போன்று, தமிழர் மொழிவழிப்பட்ட இனத்தோர் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தமிழர் தன்னாட்சி அரசு என்ற ஆளுமையான தளத்தையோ, மதவழிப்பட்ட இனம் என்ற வலுவான தளத்தையோ கொண்டிருக்கவில்லை. உலகெங்கும் பரந்து வாழும் 80 மில்லியன் வரையான தமிழ்மக்கள் மொழியென்ற ஒற்றை இழையால் மட்டுமே தமிழர் பிணிக்கப்பட்டிருக்கின்றனர். 

எனவேதான் மொழி சார்ந்த பண்பாட்டுக் கல்வியானது தனித்துவத் துறையாகத் தோற்றம் கொண்டு பேணப்பட வேண்டும் என்ற கருதுகோளை இக்கட்டுரை முன்வைக்கின்றது. 

பெயர்வுச் சமூகத்தில் (Diapora) மரபுரிமையின் முதன்மை: 

இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே மரபுரிமை பற்றிய தெளிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. மரபுரிமை சொல்லின் ஆழமான பொருளை உணர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவைகளை அதிகமாகக் கொண்டுள்ள சமூகம் இதுவாகும். 

பெயர்வுப்புலத்தில் தனித்துவமான இருப்பைப் புலப்படுத்துவதற்கும் தம்மை நிலைநிறுத்துவதற்கும் மரபுப் பேணல் அவசியமாகின்றது என்பதை பெயர்வுச் சமூகம் உணர்ந்து வருகின்றது. 

பல்லினச் சமூகச் சூழல் கொண்ட வாழ்புலத்தில் ஒரு பொதுமைப் பண்பாடு நிலவும் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். பள்ளிகளிலும் வேலைத்தலங்களிலும் பெரிதும் ஆளுமை செலுத்தும் இப்பொதுமைப் பண்பாடு, தன்னினப் பண்பாடு மீது ஈர்ப்பு இல்லாதவர்களை எளிதாகவே ஆட்கொண்டுவிடுகின்றது. 

பொதுவாக நம்மவர்களால் மேற்கத்தைய நாகரிகம் என அழைக்கப்படுகின்ற இப் பொதுமைப் பண்பாடு, நடை, உடை, நடத்தை, பழக்கவழக்கங்கள் சிந்தனைகள் என்பவற்றில் எல்லா இனங்களுக்கும் பொதுவான தனித்துவங்களைக் கொண்டிருக்கும். 

எடுத்துக்காட்டாக, விருந்து, திருமண வரவேற்பு நிகழ்வுகளில் ஆண், பெண் ஒன்றாக இணைந்து ஆடுவதைக் குறிப்பிடலாம். னுயவiபெஇ டiஎiபெ வழபநவாநச என்று சொல்லப்படுகின்ற நடத்தைகளெல்லாம் இப் பொதுமைப் பண்பாட்டுக்குரியதே. 

ஒவ்வொரு இனங்களிலும் தன்னினம் சார்ந்த மரபு, பண்பாடு என்பவற்றில் விருப்பு இல்லாதவர்களைக் காணலாம். இவ்வாறானோர் பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளே தமது பண்பாடாகக் கருதி வாழத் தலைப்படுகின்றனர். 

தமிழ்ச் சமூகத்தின் இளையோர் பலரும் இவ்வாறான பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளையே தமது பண்பாட்டுத் தளமாகக் கருதத் தொடங்கியுள்ளனர். இளையோர் மட்டுமல்ல, குறிப்பிடத்தக்கவளவு பெரியோரும் முற்றுமுழுதான ஆங்கிலச் சூழலுக்குள் தம்மைக் கட்டமைத்து, தமிழியற் செயற்பாடுகளில் இருந்து முற்றும் விலகி வாழ்ந்து வருகின்றனர். 

தனித்துவமான மரபுகளையும் பண்பாடுகளையும் பேணுவதில் பெரும் சவால்களைக் கொண்டதான இந்த வாழ்புலத்தில், பொதுமைப் பண்பாட்டுக்குள் தொலைந்து காணாமல் போவோர் பல இனங்களிலும் இருக்கின்றனர். 

எனினும் இந்தப் பெயர்வுப்புலத்தில் வேர்களைத் தேடுதல் என்ற ஒரு பொது மரபும் இருக்கின்றது. பெற்றோரால் அடையாளங்களைத் தொலைத்த இளையோர் பலர் தீவிரமாகவே தமது வேர்களைக் கண்டறிந்து, தான் சார்ந்த இனத்தோடு இணைந்து செயற்படுவதையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது. 

தன்னினம் சார்ந்த மரபுகளிலும் பண்பாட்டு நடத்தைகளிலும் ஈர்ப்பு ஏற்படாமையே பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளைப் பலர் முழுமையாக உள்வாங்கக் காரணம் என்பதை பெயர்வுத் தமிழச்சமூகம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். 

நான் தமிழ்ப் பண்பாட்டை வெறுக்கின்றேன் எனக் கூறிய இளம் பெண் அதற்குக் கூறிய காரணம், 'எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என் அப்பாவும் அம்மாவும் நாள்தோறும் கெட்ட வார்த்தைகளைப் பேசி சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள். இடையே வந்துபோகும் உறவினர்களும் அவ்வாறே சண்டை பிடிப்பார்கள். என்னைக் கவனிக்க யாரும் இல்லை. இதனால் எனக்குத் தமிழர் என்றாலே பிடிக்கவில்லை" என்றாள். 

இவை போன்ற (தாயகத்தில் பொதுவாக நிகழும்) பல சமூகக் குறைபாடுகள் இளையோரைப் பாதிக்கின்றன. சமூகத்தின் நடத்தைகளைப் பொதுமைப் பண்பாட்டுடன் ஒப்பிட்டு, இனஞ்சார் நடத்தைகளைக் தாழ்வாக மதிப்பிடும் போக்கு இயல்பாகவே எங்கும் காணப்படுகின்றது. 

ஆங்கியேர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் வெளிப்படுத்திய மேற்குலகப் பண்பாட்டு நடத்தைகளைப் போற்றிய மனோபாவத்தில் இருந்து விடுபடாத பெற்றோரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களைப் போற்றத் தவறுகின்றனர். 

தமிழர் பின்பற்றிவரும் பல பண்பாடுசார் நடத்தைகளுக்கும் சடங்களுக்குமான போதிய விளக்கங்கள் இளையோருக்கு இல்லை. எடுத்துக்காட்டாக ஏன் நிறைகுடம் வைக்க வேண்டும் என ஒரு இளையவர் கேட்டால் அதற்கான விளக்கத்தைத் திருத்தமாக வழங்க எல்லோராலும் முடிவதில்லை. பொருத்தமான விளக்கங்கள் கிடைக்காதவிடத்து இளையோர் இனஞ்சார்ந்த பண்பாட்டு நடத்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். 

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, தமிழர் சிறப்பான பண்பாட்டு நெறிகளைக் கொண்டுள்ளனர் என்ற போதிலும் பெயர்வுப்புலத்திற்கேற்பத் தமிழர் தமது மரபுசார் இயங்கங்களையும் பண்பாட்டு நடத்தைகளையும் வடிவமைத்துக் கற்கைக்குரிய நெறியாகவே சமூகத்தோருக்குப் புகட்ட வேண்டிய தேவையைச் சமூகம் நன்குணர வேண்டும். 

இவ்வாறான வாழ்களச் சூழலில் குறிப்பிட்ட இளையோர், இனஞ்சார் மரபுகளையும் பண்பாட்டு செல்நெறிகளையும் உள்வாங்கிப் பின்பற்றுவதுடன், அவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருகின்றனர். 

தமிழ்ச்சமூகமானது, மேற்குறிப்பிட்ட சவால்களை வெற்றி கொண்டு வாழும் மண்ணில் மரபுரிமையை நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிதலே தற்போதைய தலையாய பொறுப்பு. தமிழர் மரபுகளை உறுதியுடன் பேணுவதோடு, அதை ஒவ்வொரு தலைமுறைக்கும் ஊட்டிச்செல்லும் வலுவான சமூகக் கட்டமைப்பையும் உருவாக்குதல் வேண்டும். அடையாளங்களைப் பேணும் நோக்கிலான தொடர் செயற்பாடுகள் இடையறாது நடைபெற வலுவான இயங்குதளங்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளே எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வதற்கும் இறுக்கமான சமூகப் பிணைப்புகளைப் பேணுவதற்கும் அவசியமானவை. 

இச்செயற்பாட்டுக்கு வலிமை செய்யும் வகையில் கனடா அரசு தைத்திங்களைத் தமிழருக்கான மரபுரிமைத் திங்களாக அங்கீகரித்துள்ளமை சிறப்புக்குரியது. 

தமிழர் மரபுரிமைத் திங்கள்:

பெயர்வுத் தமிழச்சமூகம் வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்ட நாடாகக் கனடா  திகழ்கின்றது. கனடாவின் பன்முகப் பண்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப, பலருடைய முயற்சியாலும் தைத்திங்கள் தமிழரின் மரபுரிமைத் திங்களாக அரச நிர்வாக அலகுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மரபுத்திங்களை முன்னிட்டு, பல அமைப்புகளும் நிறுவனங்களும் பல நிகழ்வுகளையும் ஒன்றுகூடல்களையும் நடத்துகின்றன. சில நிகழ்வுகளும் செயற்பாடுகளும் காத்திரமான பயன்களைத் தருகின்றன என்ற போதிலும் பல நிகழ்வுகள் ஆடலும் பாடலுமாக வழமையான கலைநிகழ்வுகளைப் போலவே நடந்தேறி விடுகின்றன. 

மரபுரிமை நிகழ்வுகளி;ன நோக்கம் பெரிதும் மரப்புப் பேணல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே இருத்தல் வேண்டும். அமைப்புகளும் விழா ஏற்பாட்டாளர்களும் கீழ்க்காணும் விடயங்களைக் கவனத்திற் கொள்ளுதல் சிறப்பாக இருக்கும். 

மரபுரிமை விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மூன்று தளங்களாக வகுக்கலாம்.

 

1. இளையோருக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்துதல்

2. பிறனத்தோருக்கு உணர்த்துதல்

3. இனஞ்சார் செயற்பாடுகளை வடிவமைத்தல்

இளையோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பில் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். 

இளையோரிடையே மொழி, பண்பாடு, கலை போன்ற  இனஞ் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்துதல்

மொழி, கலை, பண்பாடு, இனம் சார்ந்த செயற்பாட்டுக் களங்களை இளையோருக்கு உருவாக்கிக் கொடுத்தல்.

செயற்படும் மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கி வழிகாட்டி இயக்கிச் செல்லுதல்

இளையோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடத்துதல். 

உலகலாவிய இளையோர் அமைப்புகளை எதிர்கால இருப்புநோக்கி ஒருங்கிணைத்தல். 

இளையோரிடையே தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி, இனஞ்சார்ந்து பணியாற்றத் தூண்டுதல். 

பிறவினத்தோருக்கு உணர்த்துதல்: 

நாம் பல நாடுகளிலும் பிறவினங்களோடு இணைந்தே வாழ்கின்றோம். எமது பண்பாடு, மொழி, கலை தொடர்பில் பிறவினத்தோருக்குப் பெருமதிப்பை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். 

பிறவினத்தோர் எம்மினம் குறித்து உயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் நிலையில், நாம் புலம்பெயர மண்ணில் எம்மைச் சிறப்பாக நிலைநிறுத்த முடியும். ஓரினம் கொண்டிருக்க வேண்டிய அனைத்துச் சிறப்புகளும் எமக்கு உண்டு. அதைத் திட்டமிட்டுப் பிறவினத்தோரிடையே எடுத்துச்செல்ல வேண்டும்.

பள்ளிகளில், வேலைத்தலங்களில், பொதுஅமைப்புகளில் அங்கம்பெறும் தமிழர்கள் மரபுரிமை மாதத்தைப் பயன்படுத்தி இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். 

இனஞ்சார் செயற்பாடுகளை வடிவமைத்தல்:

நாம் அன்றாட நடத்தைகளில் பின்பற்றிச் செல்ல வேண்டிய பல பண்புகளை இழந்து செல்கின்றோம். எமது விழாக்கள், சடங்குகள் என்பன பண்பாட்டுத்தளங்களை விட்டு, விலகிச் செல்கின்றன.

கலை வகுப்புகளில் ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு என்பன இடம்பிடிக்கின்றன. சடங்குகளில் இந்திப் பாடல்கள் தாராளமாக இடம் பிடிக்கின்றன. ஆடை முறைமைகள் வடநாட்டைத் தழுவிச் செல்கின்றன.

தமிழர்கள் மட்டுமே கூடும் அரங்குகளில் நிகழ்ச்சித் தொகுப்பு ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகின்றது. தமிழ்,பண்பாட்டு வகுப்புகளுக்கு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

மரபுகள் பண்பாடுகள் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி, தான்தோன்றித்தனமாக எதுவும் செய்யலாம், எதையும் மாற்றியமைக்கலாம் என்ற போக்கு இயல்பாகவே தமிழர் பலரிடமும் இருக்கின்றது. இதனாலேயே பொதுமைப் பண்பாட்டு நடத்தைகளும் வடஇந்தியப் பண்பாட்டு நடத்தைகளும் தமிழர் பண்பாடுகளுக்குள் எளிதாகக் கலந்துவிடுகின்றன. 

இந்தப் பெயர்புலங்களில் தமிழர் பின்பற்ற வேண்டிய மரபுகள், பண்பாட்டு நடத்தைகள் என்பன தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு கையேடாக வழங்கப்பட வேண்டும். 

ஆடை, அணிகலன், ஒப்பனை தொடர்பில் தமிழர் மரபியல் அழகின் வெளிப்பாடாக அமைதல் நன்று. 

பெரிதும் தமிழர் கலந்துகொள்ளும் நிகழ்வில் நிகழ்வுகளும் நிகழ்வுத் தொகுப்பும் தமிழ்மொழியிலேயே இருத்தல் வேண்டும். 

தமிழ்மொழிக்கல்வி எங்கும் ஊக்குவிக்கப்பட வேண்டும். 

தமிழருக்கிடையேயான தொடர்பாடலில் பெரிதும் தமிழ்மொழியே பயன்படுத்தப்பட வேண்டும். 

தாயக உறவுகளுடன் இளையோருக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி அதைப் பேணல் வேண்டும்.


இவை போன்ற எளிதான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டாலே இனஞ்சார்ந்த இருப்புகளுக்கு வலுச் சேர்க்க முடியும். இளையோரிடையும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இவ்வாறான சமூக ஈடுபாடு கொண்ட செயற்பாடுகளைப் பலர் செய்து வருகின்றனர். 

 முடிவுரை

கனடாவில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர் மரபுரிமை விழிப்புணர்வு நிகழ்வுகள், பெயர்வுப் புலங்கள் யாவற்றிலும் முன்னெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். தைத்திங்களில் உலகெங்கும் இவ்வாறான மரபுரிமை விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுமாயின் அது உலகத் தமிழரிடையே இனவுணர்வு தொடர்பில் பேரெழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  

தமிழினம் மொழிவழி நின்று, மரபுகள், பண்பாடுகள் வாயிலாவே தம்மை ஓரினமாகக் கட்டமைத்திருக்கின்றது. மதவழி, தன்னாட்சிக் கட்டமைப்புகளை விட இக்கட்டமைப்பு வலிமை குறைந்தது. அடையாளங்களைப் பேணிச்செல்வதில் பெரும் சவால்களையும் இடர்களையும் எதிர்கொள்ளக் கூடியது. 

வலிமையான செயற்பாட்டுத்தளமும் இனவொருமையும் இருந்தால் மட்டுமே நாம் எமது மரபுரிமைகளைக் காலாகாலத்துக்கும் பேணிச்செல்ல முடியும். 


பொன்னையா விவேகானந்தன் 

விரிவுரையாளர் - ரொரண்ரோ பல்கலைக்கழகம் 


 






 


Monday, May 16, 2022

புலம்பெயர் தமிழர்களின் தாய்மொழிக்கல்வியும் பண்பாட்டு மொழியும்

 புலம்பெயர் தமிழர்களின் தாய்மொழிக்கல்வியும் பண்பாட்டு மொழியும்

முன்னுரை:

பண்டைய இலக்கியங்கள் தமிழர் வாழ்வை நிலம், காலம் முதற்பொருட்களுக்கமைய ஐந்தாக வகுத்திருந்தன. இந்தப் பகுப்பின் அடிப்படையில் இன்றைய தமிழர் வாழ்வை உற்றுநோக்கின் புதியதும் ஆறாவதுமான ஒரு வாழ்வியல்தளத்தை நாம் அடையாளம் காண முடியும். 

குறிப்பாகப் பெருமளவில் இலங்கையில் இருந்து பெயர்ந்த தமிழர்கள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறி, அங்கு நிரந்தரமான வாழ்வுத்தளத்ததை கட்டமைத்துள்ளனர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் இக்கட்டமைப்புச் சூழல் அடையாளம் காணுமளவுக்கு வளர்ச்சிபெற்றிருந்தது. இத்தளத்தின் வழியே ஒரு புதிய தலைமுறைத் தொடர்ச்சி குடியேறிய நாடுகளில் ஏற்படத் தொடங்கிவிட்டது. தாயக வாழ்வியல் நெறிகளில் இருந்து பெரிதும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டதான இத்தமிழ்ச் சமூகத்தையே ஆறாம்திணை எனச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சமூகம் ‘புலம்பெயர் தமிழச் சமூகம் எனத் தமிழிலும் (Diaspora Tamil) என ஆங்கிலத்திலும் குறிக்கப்படுகின்றது. 

இச்சமூகத்தின் இன்றியமையாத தேவைகளில் முதன்மையானதான தாய்மொழிக்கல்வி பற்றியும் அதன் வழியே பண்பாட்டு மொழி என்ற நோக்கில் பண்பாட்டுக்கல்வி குறித்தும் இக்கட்டுரை சுருக்கமாக ஆய்வு செய்வதாக அமைகின்றது.

தாய்மொழிக் கல்வியின் தேவையும் தோற்றமும் 

பெயர்வுத் தமிழர்கள் வாழும் நாடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான தேசியப் பண்பாட்டைக் கொண்டிருந்தன. இ;ந்தத் தேசியப் பண்பாட்டு ஓட்டத்துடன் இணைய வேண்டிய அழுத்தம் இயல்பாகவே  அங்கு குடியேறும் ஒவ்வொரு இனத்துக்கும் உண்டு. குறிப்பாக, அந்நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகள் வாழிட நாடுகளுக்கான தேசியப் பண்பாட்டை ஒட்டியே வளர்ந்து வருவர். இந்நிலையில் தாய்மொழியையும் பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் கல்;வி வாயிலாகவே பெயர்வுத் தமிழர்களின் புதிய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் வழியே தமிழ்மொழிக்கல்வியின் தேவையை உணர்ந்த பெயர்வுத்தமிழர்கள் வலுவான தாய்மொழிக்கல்விக் கட்டமைப்புகளை உருவாக்கத் தலைப்பட்டனர். 

புலம்பெயர்ந்தோர் சமூகச் சூழலில் தமிழ்க்கல்வியின் தோற்றம் ஏறக்குறைய கால் நூற்றாண்டைக் கடந்துவிட்டது. இந்தக் கால் நூற்றாண்டில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தொடக்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் உளப்பாங்கு இப்போது இல்லை. வாழும் நாட்டுக்குரிய பண்பாட்டு வடிவங்களை உள்வாங்கிய தலைமுறையினர் தலையெடுத்து விட்டனர். பொருளாதார வளங்களும் வேறு தளத்துக்குச் சென்றுவிட்டன. சமூகத்தவரின் அடிப்படைச் சிந்தனைகளும் தேடல்களும் மாற்றங்களை நோக்கிச் செல்கின்றன. 

பெயர்வுத்தமிழர்கள் முன்னெடுத்துவரும் தாய்மொழிக்கல்வி, அடையாளம் சார்ந்த இருப்பைப் பேணுவதில் பெரும்பங்கு வகிக்க வேண்டியதொன்றாகும். இக்கல்வியின் தேவை குறித்தும் எதிர்ப்படும் சவால்கள் பற்றியும் சற்றே விரிவாக ஆராய்கின்றது இக்கட்டுரை.

தாய்மொழியை இரண்டாம் நிலையில் கற்கும் சூழலின் தோற்றம்:

‘தாய்மொழியைப் பாரம்பரிய மொழியாக முதல் மொழிக்கு அடுத்த நிலையில் கற்றல்’ என்னும் சூழலின் தோற்றம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அவதானத்துக்குரியதாக உருக்கொண்டதெனலாம். இக்கல்விச் சூழல் தோற்றம் கொண்டதற்கான பின்புலத்தை நாம் அறிந்திருத்தல் இக்கட்டுரையை முழுமையாக விளங்கிக்கொள்ள உதவும். 

ஐரோப்பியரது ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்புகளுக்காக அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த பிறநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டோர் இருவகையினராவர். கூலித்தொழிலாளிகளாகக் கொண்டு செல்லப்பட்டோர் ஒருவகை. கல்விப் பின்புலம் சார்ந்து தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றோர் மறுவகை. இத்தகையோரும் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். 

விடுதலைக்குப் பின்னரும் கல்வி தொழில் வாய்ப்புகளுக்காக வளர்ச்சியுற்ற நாடுகளுக்குச் செல்வோரும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்நாட்டு யுத்தங்கள், இயற்கைப் பேரழிவுகள் காரணமாக அகதிகள் என்ற பகுப்பில் கணிசமானோர் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறினர். இத்தகையோரும் குடியேறிய நாடுகளில் நிரந்தரமாகத் தம் வாழ்வை அமைத்துக்கொண்டனர். 

இவ்வாறு குடியேறியோர் தமது முதற் தலைமுறைக் காலத்தில் தாய்மொழியிலேயே பெரிதும் தமது தொடர்பாடலைக் கொண்டிருந்தனர். அவர்களது சிந்தனா மொழியாகவும் தாய்மொழியே இருந்தது. 

மொழியாலும் பண்பாட்டாலும் பழக்கவழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு புலத்தில் வாழத்தலைப்பட்ட ஓரினத்தினுடைய தனித்துவ இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். 

குடியேறியோரது இரண்டாம் தலைமுறையே இவ்வாறான மாற்றங்களை பெரிதும் வெளிப்படுத்துவோராக இருந்தனர். குடும்பம் என்ற சிறு வட்டத்துக்கு அப்பால் இரண்டாம் தலைமுறையினரின் சமூக மொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் அந்தந்த நாடுகளுக்குரிய மொழியே ஆதிக்கம் பெற்றுச் சிந்தனா மொழியாகவும் திகழ்ந்தது. அவர்களது தாய்மொழி இரண்டாம் மொழி என்னும் நிலையை அடைந்தது. 

இந்நிலையில்தான் முதல்மொழியை அடுத்து, தாய்மொழியை பாரம்பரிய மொழியாக இரண்டாம் நிலையில் கற்கும் சூழல் தோற்றம் கொண்டது. இச்சூழல் தமிழருக்கு மட்டும் உரியதன்று. ஆசிய, ஆபிரிக்க தென்னமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோருக்கும் பொருந்தும். 

தமிழ்மொழி இரண்டாம் நிலையில் கற்பிக்கப்படும் நாடுகள்: 

ஒரு நூற்றாண்டுக்கு முன்னேரே தாயகங்களை விட்டுப் புலம்பெயர்ந்தோரில் தமிழரும் அடங்குவர். பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழர் பெயர்வுகள் தொடங்கிவிட்டன. ஆங்கிலேயர் தமிழரைக் கூட்டங்கூட்டமாகக்  கரிபியன் தீவுகள், லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, பிஜி தீவுகள், சிங்கப்பூர், மலேசியா, மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே கல்வி, தொழில் போன்றவற்றோடு அகதிகள் என்ற வகையிலும் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களில் தமிழர் குடியேறினர். பிரஞ்சு நாட்டின் ஆளுகைக்குட்பட்டிருந்த பாண்டிச்சேரியில் இருந்தும் தமிழர் கணிசமான தமிழர் பிரஞ்சு நாட்டில் குடியேறியிருந்தனர்.

 இன்றைய காலத்தில் கரிபியன் தீவுகளிலும்  கயானா, ட்ரினிடாட், ரியூனியன், பிஜி போன்ற நாடுகளிலும் வாழ்வோர் பெரிதும் தமிழருக்கான அடையாளங்களை இழந்துவிட்டனர். தாய்மொழி எதுவெனத் தெரியாதோராகவே பலரும் வாழ்கின்றனர். அவர்களது மொழி ஆங்கிலம் அல்லது ஸ்பானிய மொழியாகவே மாறிவிட்டது. 

தமிழர் குடியேறிய பிற பகுதிகளான ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா கண்டங்களிலும்  மொறிசியஸ் பர்மா போன்ற நாடுகளிலும் தாய்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் சூழல் தற்போது வலுவாகத் தோற்றம் கொண்டுள்ளது. 

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டாலும் முதல்மொழி என்னும் தகுதியை அது இன்னும் இழந்துவிடவில்லை எனலாம். சமூகமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் தமிழ் இப்போதும் அங்கு நிலைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் தாயகத்தோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதனால் தமிழ்மொழி பயன்பாட்டுச் சூழல் எளிதில் மாற்றமடைய வாய்ப்பில்லை. 

தமிழ்மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும் நாடுகளான ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா போன்றவற்றினது கல்விச் சூழலே இக்கட்டுரைக்குக் தளமாக அமைகின்றது. 

தமிழ்மொழி இரண்டாம் நிலையில் கற்பிக்கப்படும் சூழலைப் புரிந்து கொள்ளல்: 

உள்நாட்டுப் போர் காரணமாகப் பெருமளவில் தமிழர் புலம்பெயர்வதற்கு முன்பாகவே குறிப்பிடத்தக்க தமிழர் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்காப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இவர்களில் சிலர் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்க முனைந்தனர். தொடக்கத்தில் வீடுகளில்; தமிழ்ப் பெற்றோர் அல்லது தமிழ் மொழியறிவு கொண்டோரால் தமிழ் கற்பிக்கப்பட்டது. 1980க்கு பின் ஈழத்தமிழர் பெருமளவில் வெளிநாடுகளை நோக்கிப் புலம்பெயரத் தொடங்கினர். தொடக்கத்தில் பெரிதும் இளைஞர்களே புலம்பெயர்ந்திருந்தனர். 80களின் கடைசியில்தான் கணிசமான அளவில் குடும்ப வாழ்க்கைச் சூழல் தோற்றம் கொண்டது. புதிய இளந்தலைமுறையில் தோற்றம் அவதானிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தமிழ் கற்பித்தல் செயற்பாடுகள் முனைப்புப் பெறத் தொடங்கின.

ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டத்திலும் கனடாவிலும் தாய்மொழிக் கல்விச் செயற்பாடுகள் 1990க்குப் பின் நிறுவனமயப்படுத்தப்பட்டன. இதன் பின்பே இக்கல்விச் சூழல் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச்சமூகத்தவருக்கு ஏற்பட்டது.  

இக்கருத்துக்கு ஆபிரிக்கா விதிவிலக்காகும். ஆபிரிக்கத் தமிழர் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆபிரிக்காவில் வலுவான சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். தாய்மொழியாக இரண்டாம் மொழியை கற்பிக்கும் சூழல் அங்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே உருவாகிவிட்டது. ஆபிரிக்காவில் குடியேறியோர் பலரும் கற்றறிந்தோர் என்பதனால் இனஞ்சார் அடையாளங்கள் பெரிதும் அங்கு பேணப்பட்டன. அதன் தொடர்ச்சியை இன்றும் அங்கு காணலாம். 

இப்புதிய கல்விச் சூழலானது, தாயகத்தின் மொழி கற்பித்தல் முறைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். 

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தோர் வீட்டில் பேச்சு மொழியாகத் தமிழைப் புரிந்து கொள்பவராகவும் சிலவேளை ஓரளவு அல்லது சில சொற்கள் பேசவும் தெரிந்திருப்பர். இவர்களுடைய தொடர்பாடலும் சிந்தனையும் கல்வி மொழியும் அந்நாட்டிற்குரிய மொழி வழியாகவே நடைபெறும். இந்த மொழியே இவர்களது முதல் மொழியாகும்.  இந்நிலையில் தாய்மொழியான தமிழை இரண்டாம் நிலையில் கற்பர். 

இவ்வாறானோர் தமிழைக் கற்கும்போது அந்நாட்டுக்குரிய மொழியோடு ஒப்பிட்டே கற்பர். அந்நாட்டுக்குரிய கற்பித்தல் முறைகளையும் வகுப்பறைச் சூழலையும் தமிழ் மொழி கற்பித்தல் சூழலோடு ஒப்பிடுவர். 

இந்நாடுகளில் தாய்மொழி கற்றலில் அந்நாடுகளுக்குரிய கல்விச் சூழல் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இச்சூழலில் தாய்மொழி கற்பிப்போர் அந்நாட்டுக்குரிய கல்விச் சூழலைப் புரிந்து கொள்வது மிக அவசியமானது. 

குடியேறிய புலங்களில் தொடக்ககாலக் கற்பித்தல் முறைகள்: 

தாய்மொழிக் கல்வி நிறுவனமயமாக்கப்படுவதற்கு முன்னரும் பின்னான தொடக்க காலத்திலும் பெரிதும் தாயகத்தில் கையாளப்பட்ட  கற்பித்தல் முறைகளே பின்பற்றப்பட்டன. தொடக்கத்தில் இக்கற்பித்தல் முறை பயன் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தாயகத்தில் பிறந்து இந்நாடுகளில் குடியேறியேறிய மாணவரே பெருமளவில் தமிழ் கற்போராக இருந்தனர். 

தாயகத்தில் இருந்து தருவிக்கப்பட்ட பாடநூல்களும் அவற்றை அடியொற்றி இங்கு உருவாக்கப்பட்ட சில நூல்களும் பயன்படுத்தப்பட்டன. பெரிதும் ஆசிரியர் மையக்கல்வி (Teacher-centered instruction) முறையே பின்பற்றப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் தொடக்கக் கல்வியைத் தாயகத்தில் கற்றிருந்ததனால் அவர்களுக்கு மரபுசார் கற்பித்தல் முறைகள் சிக்கலாக இருக்கவில்லை.

தொடக்ககாலத்தில் தமிழ் கற்பிக்க முற்பட்ட ஆசிரியர்கள் தமிழ் கற்பித்தலில் தாய்நாட்டில் மொழி கற்பிக்கப்படும் வழிமுறைகளையே முற்றிலும் நம்பினர். குடியேறிய நாட்டில் நடைமுறையில் இருந்த கற்பித்தல் முறைகளையும் வகுப்பறைச் சூழலையும் பெரிதும் அறியாதவராக இருந்தனர். அதற்கான அவசியமும் அக்காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு தமிழ் கற்பிக்க ஆரம்பித்தோரில் சிலர் தாயகத்தில் தமிழ்மொழி கற்பிக்காதவராகவும் வேறு சிலர் ஆசிரியத் தொழிலுக்கே புதியவர்களாகவும் இருந்தனர். 

இக்கற்பித்தல் முறைகள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற மொழிப்பயன்பாடுகளையே உச்ச இலக்குகளாகக் கொண்டிருந்தன. கற்போர் தமிழில் தொடர்பாடுதலும் அதற்குரிய மொழியறிவு பெற்றிருத்தலும் தொடக்ககாலக்  கல்விமுறையின் நோக்கங்களாக இருந்தன. தகவற்றொழில் நுட்பக் கருவிகளின் பயன்பாடுகள் அக்காலத்தில் பெரிதும் இல்லாதிருந்தன. 

தொடக்ககாலத்தில் வீடுகளில் பெரிதும் தமிழே பேச்சுமொழியாக இருந்தது. மாணவர்களும் தமக்கிடையேயான தொடர்பாடல்களைத் தமிழிலேயே மேற்கொண்டனர். 

அரச கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்பிக்கத் தொடங்கியபின்தான் வாழும் நாட்டின் கல்விச் சூழலோடு தமிழ்மொழிக் கல்வியை இணைத்து நோக்கும் போக்கு ஏற்பட்டது. 

தமிழ் கற்கும் தற்கால மாணவரின் பின்னணி: 

1980க்குப் பின்  மேற்கூறிய நாடுகளில் இதுவரை ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் வட, கிழக்குப் பகுதிகளிலிருந்து ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்தோராவர். 2009க்குப் பின்னர் இலங்கையிலிருந்து புலம்பெயர்வோரது எண்ணிக்கை வீழ்ச்சிடைந்து வருகின்றது. 2015க்குப் பின்னர் தொழில், கல்வி கருதி தமிழகத்திலிருந்து புலம்பெயர்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

ஆயினும் குடியேறியோரது குடும்ப வாழ்வின் வழியே பிறக்கும் குழந்தைகளும் குடும்ப அழைப்பு (குயஅடைல ளிழளெழச) வாயிலாக வருவோரும்  தமிழரது எண்ணிக்கை உயர வழிசெய்கின்றனர். இத்தகைய நாடுகளில் தொடக்க காலத்தில் இளம் வயதில் குடியேறியோரும் இங்கு பிறந்தோருமே இரண்டாம் தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். இக்காலத் தமிழ் சமூகத்தின் வலிமைமிக்க உறுப்பினர்களாக இவர்களே அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய பெற்றோராகத் திகழ்ந்த மூத்த தலைமுறையினர் மெல்லமெல்ல ஓய்வை நோக்கிக் சென்று கொண்டிருக்கின்றனர். 

தற்காலத்தில் சமூகப் பொறுப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமுறையினரின் பிள்ளைகளே இப்போது மாணவராகத் திகழ்கின்ற மூன்றாம் தலைமுறையினராவர். இவர்களுடைய பெற்றோராகிய இரண்டாம் தலைமுறையினர் வாழும் நாட்டினுடைய மொழியைச் சரளமாகப் பயன்படுத்துவர். கணிசமானோருடைய வீட்டுமொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் அந்நாட்டுக்குரிய மொழியே பயன்படுவதாக இருக்கும். இவர்கள் கணிசமானவளவு வாழும் நாட்டினுடைய பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கியவராகவும் இருப்பர். இவர்களுடைய தாயகத் தொடர்புகள் முற்றிலும் அறுபட்டோ அல்லது குறைவாகவோ காணப்படும். 

இவ்வாறானதொரு சூழலில்தான் தற்போதைய மாணவர் சமூகம் வளர்கின்றது. அந்நாட்டுக்குரிய மொழியை ஏறக்குறைய எல்லாநிலைகளிலும் முதல்மொழியாக்கிக் கொண்ட இந்த மாணவ சமூகம் தாய்மொழி தமிழை முற்றிலும் இரண்டாம் மொழியாகப் பயில்கின்றவராக உள்ளனர். 

தலைமுறை இடைவெளிகள் பெரிதும் காணப்படுகின்ற இச்சமூகங்களில் தலைமுறை தோறும் தமிழ்ப் பயன்பாடு வீழ்ச்சியடைந்து செல்வதை வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். மொழி, பண்பாடு வாழ்வியல் நடைமுறைகள் சார்ந்து வாழும் நாட்டினது இயல்புகளைப் பெரிதும் உள்வாங்கியோராகவே மூன்றாம் தலைமுறையினர் பெரிதும் திகழ்கின்றனர். 

ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கொண்டிராத நாடுகளில் தமிழ் வீட்டுமொழியாக ஓரளவு பேணப்பட்டு வருகின்றது. இந்நாடுகளில் பயிலும் மூன்றாம் தலைமுறையினரின் தமிழ்க்கல்வி ஏனைய நாடுகளை விட மேம்பட்டிருக்கின்றது. 

நாடுகள் தோறும் மாறுபடும் கற்பித்தல் முறைகள்: 

மொழிக்கல்வி தொடர்பான கற்பித்தல் முறைகள், பெரிதும் கடந்தகால அனுபவங்களில் இருந்தும் கற்கும் மாணவரின் சூழலை நன்கு புரிந்து கொள்வதிலிருந்தும் தோன்றுகின்றன. 

மொழிக்கல்வி கற்பித்தல் முறைகள் நாடுகளின் சமூக அமைவுகளுக்கமைய மாறுபடுகின்றன. உலகெங்கும் காணப்படும் கற்பித்தல் முறைகளைக் கீழ்க்காணும் நான்கு பகுப்புகளுக்குள் அடக்கி விடலாம். 

•தமிழே மூல மொழியாக இருக்கும் சூழலில் அதனையே முதல் மொழியாகவும் கற்கும் முறை. எ-டு தாயகத் தமிழ்க்கல்வி

•தமிழ்மொழி வீட்டு மொழியாகவும் தொடர்பாடல் மொழியாகவும் பேணப்பட்டுவரும் சூழலி;ல் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் முறை. எ-டு சிங்கப்பூர், மலேசியா 

•இயற்கை, பண்பாட்டுத் தளங்களில் பெரிதும் மாறுபட்ட நாட்டில் பிறிதொரு மொழியின் பேராதிக்கம் மிக்க சூழலில் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாப் பயிற்றுவிக்கும் முறை. எ-டு ஐரோப்பிய நாடுகள் (பிரித்தானியா தவிர்த்து) 

•ஆங்கில மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளில் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிக்கும் முறை எ-டு பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா 

பின்னிரண்டு பகுப்புகளும் தமிழ்மொழி கற்பித்தலில் பெருஞ்சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 

ஏறக்குறைய முப்பது ஆண்டுகால புலம்பெயர்ந்த தமிழர் வரலாற்றைக் கொண்ட ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளும் அவுஸ்திரேலியாவும் தொடக்க காலத்தில் தாயகக் கற்பித்தல் முறைகளையும் பின்னர் சிங்கப்பூர் கற்பித்தல் முறைகளையும் பின்பற்றின. தொடக்ககாலத்தில் புலம்பெயர்ந்தோர் வீட்டிலும் வெளியேயும் தொடர்பாடல் மொழியாகப் பெரிதும் தமிழையே கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இந்நாடுகளில் சமூக அமைவுகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்குள்ளாகியுள்ளன. 

இந்நாடுகளுக்குரிய மொழியையே முதல்மொழியாகக் கொண்ட இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் தலையெடுத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி கற்பித்தல் முறைகள் தனித்துவமான மாற்றங்களுக்குள்ளாக வேண்டிய வலுக்கட்டாய நிலை இப்போது தோன்றியுள்ளது. 

பெரும்பாலான தமிழர் குடும்பங்கள் இந்நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடத் தலைப்பட்டு விட்டன. கல்வி, தொழில் சார்ந்து அந்தந்த நாட்டுக்குரிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து வரும் புதிய தலைமுறையினரே எங்கும் தலையெடுத்துள்ளனர். இவ்வாறானோர் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் தேவையும் அதன் போக்கும் பெரிதும் மாறியுள்ளன. 

ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொண்ட நாடுகளில் குடியேறிய தமிழர் வெகுவிரைவாகத் தமது வீட்டுமொழியாகவும் ஆங்கிலத்தை ஆக்கிக் கொண்டு வருகின்றனர். வட அமெரிக்க நாடுகளில் வாழ்வோருடைய தாயகத் தொடர்புகளும் குறைவடைந்து வருகின்றன. இந்நாடுகளில் தோற்றம் கொண்ட புதிய தலைமுறையினர் தமிழ்மொழியை ஓர் அந்நிய மொழி போன்றே கற்க வேண்டியுள்ளது. 

ஆனால் பிரித்தானியா தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்வோர் பெரிதும் தமிழையே வீட்டுமொழியாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பெரும்பாலான வீடுகளில் தமிழே பேசப்பட்டு வருகின்றது. புதிய தலைமுறையினர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தமிழ்மொழியை நன்கு பேசத் தெரிந்தவர்களாக உள்ளனர். தாய்நாட்டு உறவுகளுடனும் தொடர்பில் இருக்கின்றனர். இவர்களுடைய தமிழ்க்கல்விச் சூழல் பிறவற்றிலிருந்து வேறுபட்டிருக்கின்றது. 

இவ்விரு சமூக அமைவுகளுக்கும் ஏற்ப, புலம்பெயர்தோர் மொழிக்கல்வி இருவேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேற்கூறப்பட்ட கற்பித்தல் சூழல்களுக்கான கற்பித்தல் வழிமுறைகள் இப்போதும் முழுமையானதாக உருவாக்கப்படவில்லை. இந்த மாறுபட்ட சமூக அமைவுகளைக் கருத்திற் கொண்டு சிறந்த பாடத்திடங்களும் கற்பித்தல் முறைகளும் வகுக்கப்பட வேண்டும். 

இக்கல்விச் சூழலோடு நீண்டகாலமாக இணைந்திருந்து பெற்ற அனுபவமும் மொழி, மொழியியல் அறிவும் உலகளாவிய மொழிக்கல்விக் கோட்பாடுகள் பற்றிய தெளிவும் வாழும் நாட்டினது கல்விக்கொள்கை பற்றிய புரிதலும் கொண்டோரே புதிய கற்பித்தல் உத்திகளைக் கண்டறியவும் வகுக்கவும் வல்லோர் ஆவர். 

ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலகத் தமிழர்கல்வி மேப்பாட்டுப் பேரவை என்ற கல்விக்கான தமிழர் அமைப்பு, மாணவ சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, புதிய தாய்மொழிக்கல்வி கோட்பாடுகளை வகுத்து அதற்கமைய கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றது. 

நீண்ட வாழ்வியல் மரபையும் அதைத் தலைமுறைதோறும் காவிச்செல்லும் தனித்துவமான மொழியையும் கொண்ட ஓர் இனமானது புலம்பெயரந்து பலவினங்கள் வாழும் ஒரு சமூகத்தில் நிரந்தரமான வாழத் தலைப்படுகின்றது. இப்புதிய வாழ்களத்தில் வளரும் தலைமுறைகளிடையே வாழிட மொழியே ஆதிக்கம் பெற்றுவரும் நிலையில் தாய்மொழிக் கல்வியின் வடிவங்களை மாற்றிச் செல்ல வேண்டிய நிலை வலுவாக உணரப்பட்டு வருகின்றது. எனினும் மொழிக்கல்வி தொடர்பாடற் பயன்பாடு என்பதற்கு அப்பால் பண்பாட்டு மொழியாகவும் கற்பிக்க வேண்டியது முதன்மையாகின்றது. 

பண்பாட்டுக் மொழிக்கல்வி பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகப் பண்பாட்டு மொழி என்றால் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும். பண்பாட்டு மொழி என்பது மொழியின் தொடர்பாடல் பண்பிலிருந்து வேறுபட்டதாகும்.

தனக்கேயுரித்தான ஒரு நிலத்தில் தலைமுறை தலைமுறையாக மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஒரு இனமானது, உணவு, உடை, இருப்பிடம், உறவு முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழங்கங்கள், கலைகள் தொடர்பாக தனித்துவ வினைத்திறன் கொண்டியங்குவதாக இருக்கும். இவை தலைமுறை தோறும் காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்று அவ்வினத்தால் கைக்கொள்ளப்படுவதாக இருக்கும். 

ஒரு சமூகத்தின் இவ்வாறான தனித்துவமான வினைத்திறன் மிக்க இயக்கமே அவ்வினத்தின் பண்பாடு எனப்படுகின்றது. இந்தப் பண்பாட்டு நடத்தைகளை அச்சமூகம் சார்ந்த மக்கள் எவ்வாறு தலைமுறை தோறும் காவிச் செல்கின்றனர்? என்ற வினா இவ்விடத்தில் முக்கியமானது. ‘சமூகத்திலுள்ள மூத்தோரிடமிருந்து இளையோர் பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுச் செல்கின்றனர்’ என மேம்போக்காக விடையைக் கூறிவிட முடியாது. 

அச்சமூகத்தோடு இணைந்தியங்கிச் செல்லும் சில காவிகளே தலைமுறைதோறும் பண்பாட்டு நடத்தைகளைச் சுமந்து செல்கின்றன. சில இனங்களிடையே காவிகளாக மதங்கள் இருக்கின்றன. இவ்வனங்களின் மதம் அழியுமானால் வெகுவிரைவில் இவர்கள் பண்பாட்டுத் தனித்துவத்தையும் இழந்து விடுவர்.

வேறு சில இனங்களில் அரசியல் சட்டங்கள் பண்பாட்டு நடத்தைகளைக் காவிச் செல்கின்றன. இந்த அரசுகள் சிதையுமானால் விரைவிலேயே இவர்கள் பண்பாடும் சிதைந்துவிடும்.

இன்னும் சில இனங்களில் மொழியே அவற்றைப் பன்னூற்றாண்டுகளாகப் பாதுகாத்துச் செல்கின்றன. இவ்வாறான மொழிகள் வழக்கொழியுமானால் அத்தோடு இவ்வினங்களில் பண்பாடும் வழக்கற்று விடும்.

இதில் இறுதியாகக் கூறப்பட்ட நிலையிலேயே ஒரு மொழி பண்பாட்டு மொழியாகின்றது. உலகில் பல மொழிகள் பண்பாட்டு மொழியாகப் பேணப்பட்டு வருகின்றன. 

பண்பாட்டு மொழிக்கான அத்தனை வரைவிலக்கணங்களையும் கொண்ட மொழியாக தமிழ் திகழ்ந்து வருகின்றது. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் எழுதியதோடு நின்றுவிடாது, தமிழருடைய வாழ்வியல் நெறிகளுக்கும் வரைவிலக்கணம் எழுதியது. இந்த வாழ்வியல் நெறிகளினூடாகத் பழந்தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகள் தெளிவாக வெளிப்பட்டிருந்தன. 

காலந்தோறும் தமிழ்மொழி, இலக்கியங்களின் வாயிலாகத் தமிழருடைய பண்பாட்டுச் செல்நெறிகளைப் பதிவு செய்து வருவதுடன் ஒவ்வொரு தலைமுறைக்கும் அதைப் புகட்டி வருகின்றது. தமிழர் தமது பண்பாட்டு மரபுகளையும் வரலாற்றையும் மொழிவழிப் பதிவுகளான இலக்கியங்களாகவே கொண்டுள்ளனர். 

தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் அற நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் சமகாலப் படைப்புகளுமே தமிழர் பண்பாட்டைச் சுமந்து நிற்கின்றன. 

தமிழினத்தின் இருப்புக்கும் அடையாளத்துக்குமான ஆதார ஊற்று தமிழ்மொழியே. தமிழர் எக்காலத்தில் தமது தாய்மொழியை இழக்கின்றனரோ அன்றே இனவi-யாளத்தையும் இழந்துவிடுவர். இதனாலேயே தமிழ் சிறந்த பண்பாட்டு மொழியாகத் திகழ்கின்றது. 

புலம்பெயர்ந்தோர் வாழிடங்களில் பண்பாட்டு மொழி.

பண்பாட்டு மொழி தொடர்பான புரிதல் அனைத்துத் தமிழர்களுக்கும் பொதுவான ஒன்றே. வாழும் சூழலும் அது சார்ந்த சமூக அமைப்புமே இது பற்றிய தேடல்களையும் தேவைகளையும் விரிவாக்குகின்றன.

இந்த நூற்றாண்டில் தனித்துவமான இனங்கள் பலவும் ஒரே சூழலில் இணைந்து வாழும் வாழ்க்கை முறைகள் பெருமளவில் பெருகியுள்ளன. இவ்வாறான பல்லினக் கலப்புகளைக் கொண்ட சமூகத்தில் பண்பாட்டு மொழி என்ற சொற்றொடர் இப்போது பலம் பெற்று வருகின்றது. இவ்வாறான சூழலில் வாழும் இனங்கள் பல தமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதற்காகப் ‘பண்பாட்டு மொழி’ என்ற துறையைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளன. 

உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படுகின்ற பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற தமிழர் பலர் அந்நாடுகளில் தமது வாழ்வை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களில் பலரும் தாயகத்துக்குத் திரும்பப் போவதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் வாழும் நாடுகளில் இறுக்கமும் தனித்துவமும் மிக்க சமூகமாக வாழ வேண்டியுள்ளது. 

பல்லின சமூகத்தில் வாழும் ஓர் இனம் அந்தந்த நாடுகளுக்குரிய பொதுவான வாழ்வியல் முறைகளையே  பெரிதும் பின்பற்ற வேண்டியுள்ளது. வேலைத்தலங்களிலும் பள்ளிகளிலும் இந்தத் ‘தேசியப் பொதுப் பண்பாட்டு வாழ்வியல்’ தவிர்க்க முடியாதவொன்றாகின்றது. 

பல பண்பாடுகளைக் கொண்ட சமூகங்கள் வாழுகின்ற சூழலில் ஒரு பொதுமைப் பண்பாடு உருவாவதுவும் அதைப் பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும். வாழும் நாட்டினுடைய தேசிய அடையாளங்களைக் கொண்டதாகவும் தேசிய தனித்துவங்களில் ஓர் அங்கமாகவும் திகழும் வாய்ப்பினை இந்தப் பொதுமைப் பண்பாடு கொண்டுள்ளது. கனடாவில் நீண்ட காலத்துக்கு முன் குடியேறிய பல இனங்கள் இந்தப் பொதுமைப் பண்பாட்டையே தமது இனஞ் சார்ந்த பண்பாடாகவும் கொண்டுவிட்டன. 

இவ்வாறானதோர் சூழ்நிலையில்தான் இனஞ் சார்ந்த தனித்துவமான பண்பாட்டுப் பேணல்கள் தொடர்பான ஆழமான சிந்தனைகள் எழுகின்றன. பொதுமைப் பண்பாட்டைப் பின்பற்றும் அதேவேளையில் எவ்வாறு இனஞ் சார் பண்பாடுகளையும் மரபுகளையும் பேணலாம்? என்ற தேடல்களும் உருவாகின்றன. பல்லினப் பண்பாட்டு வாழ்புலத்தில் வாழும் தனித்துவ அடையாளங்கள் மிக்க இனத்தோரிடையே எழுகின்ற இவ்வாறான தேடல்கள் தவிர்க்க முடியாதவை. இயல்பானவை. 

தாயகங்களில் பாரம்பரியமானதும் பாரியதுமான பரந்த பண்பாட்டுச் சூழலுக்குள்ளேயே தமிழரின் வாழ்வு காலங்காலமாக இயங்கி வருகின்றது. புலம்பெயர் சூழலில் முற்றிலும் புதியதான வாழ்வியல் தளத்தில் திட்டமிட்டும் அதற்கான ஒழுங்குமுறை நெறிகளை வகுத்தும் பண்பாட்டுத் தொடர்ச்சியைப் பேணவேண்டியுள்ளது. 

இதுவே பண்பாட்டுச் சிந்தனை தொடர்பில் தாயக வாழ்வியலுக்கும் புலம்பெயர்ந்தோர் வாழ்புலச் சூழலுக்குமுரிய பாரிய வேறுபாடாகும். 

பெரிதும் பொருளாதாரப் பின்புலத்தையே மையமாகக் கொண்டியங்கும் இயந்திர இயக்கத்துக்கு ஒப்பான புலம்பெயர் வாழ்புலத்தில் தனித்துவமான பண்பாட்டுப் பேணல் எளிதானதல்ல. ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்திருக்கும் பொருளாதாரத் தேவைகளையும் அன்றாட இருப்புக்காகத் தொடர்கின்ற போராட்டங்களையும் மீறி, பண்பாட்டுப் பேணல் குறித்து ஆழமாகச் சிந்தித்துச் செயற்படுவது பெருஞ் சவால்களைக் கொண்டது. 

கனடா போன்ற பன்முகப்பண்பாட்டுச் சூழலைக் நாடுகளில் இவ்வாறான வாழ்வியல் போராட்டங்களுக்கு ஆட்பட்ட பல இனங்கள் தமது தனித்துவப் பண்பாட்டை இழந்துவிட்டன. வாழ்ந்து கொண்டிருக்கும் இனங்களிலிருந்து பல குடும்பங்கள் ஆண்டுதோறும் தொலைந்து கொண்டிருக்கின்றன. 

தாயகத்தில், ஐரோப்பியர் இனக்கலப்பில் தோன்றி, ஐரோப்பியப் பண்பாடு பழக்க வழங்க்ளைப் பின்பற்றி வாழ்கின்ற ‘பறங்கியர்’ என்ற இனத்தோரைப் போலவே இங்கு பல தமிழ்க் குடும்பங்கள் வாழத் தலைப்பட்டுவிட்டன. அவை தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்துவதை விடுத்துக் கனடியர் என்றே தம்மைக் கருதிக் கொள்கின்றன. 

இவ்வாறான சூழலில்த்தான் பண்பாட்டுத் தொடர்ச்சியை எவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட வழிமுறைகளில் பேணலாம் என்ற வினா பெரிதாக எழுகின்றது. 

இவ்வாhனதொரு சிந்தனைத்தளத்திலேயே தாய்மொழிக்கல்வி பண்பாட்டு மொழிக்கல்வியாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோட்பாடு வலுப்பெறுகின்றது. 

நிறைவுரை:

ஆறாந்திணைச் சமூகம் என்று கருதப்படக்கூடிய பெயர்வுத் தமிழ்ச்சமூகம் புதிய புலத்துக்கான வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்துக் கொள்வதிலும் அவற்றைப் பின்பற்றிச் செல்வதிலும் தாய்மொழிக்கல்வியின் வகிபாகம் முதன்மையானதாகவே இருக்கப் போகின்றது. இச்சமூகத்தினரின் தாய்மொழிக்கல்வியின் ஆய்வு பரப்பு பெரியது. இன்னுமொரு பொழுதில் அதை விரிவாக நோக்குவோம்.