Thursday, January 23, 2014

சிந்து வெளி அரசு தமிழரசா?

ஆய்வின் வழி அறியப்பட்ட உண்மைகள் 


தமிழர் அரசுகள் குறித்துத் தொடராக எழுதப்பட்டுவரும் இக்கட்டுரைத் தொடரின் முதற் பகுதியில் கடற்கோளில் அமிழ்ந்துபோன குமரிப் பெருநிலப்பரப்பில் நிலவிய தமிழ் அரசுகள் பற்றிப் பார்த்தோம். இத்தொடரில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நோக்குவோம்.

இமயமலைத்தொடரில் ஊற்றெடுத்து, அழகிய பெருநதியாக அரபிக் கடலில் கலப்பது (Indus River) சிந்துநதியாகும். இந்த நதி இப்போதும் பாகிஸ்தான் நாட்டடில் பாய்ந்துகொண்டிருக்கின்றது.  ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நதியின் கரைகளில் பெருநகரங்கள் அமைக்கப்பட்டு சிறந்த நாகரிகங்களோடு மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லைக்குள் கண்டறியப்பட்ட நகரங்களுக்கு ஹரப்பா, கனரிவாலா, மொகஞ்சதாரோ  (Harappa, Ganeriwala, Mohenjo-Daro)  எனப் பெயரிட்டுள்ளனர். இந்திய எல்லைக்குள் இனங்காணப்பட்ட நகரங்கள்  Dholavira, Kalibangan, Rakhigarhi, Rupar, Lothal     என அழைக்கப்படுகின்றன. ஏறக்குறைய 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் ஆறு பெரிய நகரங்களும் 200க்கு மேற்பட்ட ஊர்களையும் கொண்டிருப்பதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர்.

கி.மு 3000க்கும் 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நகரங்கள் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்ததாக ஆய்வாளர் கருதுகின்றனர்.

உலகில் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இப்புலத்தில் மிகவுயர்ந்த நாகரிக விழுமியங்களைக் கொண்டவர்களாக வாழ்ந்த இந்த மக்கள் யார் என்பதே பெறுமதி மிக்க வினாவாக எழுந்து நிற்கின்றது. இந்த வினாவுக்கு விடைகளாக ஆய்வாளர்  பல முடிவுகளை முன்வைத்த போதும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளாக இன்றுவரை எதுவும் பெறப்படவில்லை.

அங்கு வாழ்ந்தோர் யாராக இருக்கக் கூடும் என்ற வினாவுக்கு விடைகாண முயன்றோரின் முடிவுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மொழியியல் சார்ந்து சிந்துவெளி பற்றி ஆய்வுசெய்தவர் ஆய்வாளர் பர்ரோ. இவர் ஆரிய மொழியான ரிக் வேதத்தை (ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்தபோது முதலில் எழுதிய நூல்) நன்கு ஆய்வுசெய்து 20க்கு மேற்பட்ட திராவிடச் சொற்களைக் கண்டறிந்துள்ளார். (திராவிடம் என்ற சொல்லின் விளக்கம் இறுதியில் தரப்பட்டுள்ளது.) வடமொழியை ஆழமாக ஆய்வுசெய்தபின் இவர், ஆரியர் இந்தியாவுக்கு வருகை தரமுன் திராவிடர்கள் சிந்துவெளியில் வாழ்ந்திருக்கக்கூடும் என்கிறார்.

ஆரியர் கைபர் கணவாய் (heber valley) வழியாக சிந்துவெளிப்பரப்புக்குள் நுழைந்தபோது இங்கு வாழ்ந்த மக்களோடு போரிட்டனர். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த இந்த போர்க்காலப் பொழுதில்  எழுதப்பட்டதே ரிக்வேதம். எனவே ரிக்வேதத்தில் வடமொழி தவிர்ந்த பிறசொற்கள் கலப்புற்றிருந்தால் அந்தச் சொற்கள் சார்ந்த மொழிக்குரியவர்களே சிந்துவெளியில் வாழ்ந்திருக்கக்கூடும் என்பது இவர் கருத்து.

சிந்துவெளி பற்றி ஆய்வு செய்து கருத்துகளை வெளியிட்டோரில் லஹோவரி குறிப்பிடத்தக்கவர். மேற்காசியப் பகுதியில் சிறப்புற்ற விளங்கிய சுமேரியர், மெசப்பத்தோமியர் போன்றோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் வழியாகப் பெயர்ந்து சிந்துவெளியில் குடியேறியிருக்கலாம் என்கிறார் லஹோரி. இவர்களே திராவிடர் எனக்கூறும் இவர் திராவிடருக்கும் சிந்துவெளி மக்களுக்கும் சுமேரியர்களுக்குமுள்ள நெருக்கமான தொடர்புகளை ஆய்வின் வழி முன்வைக்கின்றார்.

சிந்துவெளி அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் இன்றுவரை வாசித்தறியப்படாதுள்ளது. எனினும் மொகஞ்சதாரோ முத்திரைகளின மேல் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளுக்குமிடையில் இயைபு இருப்பதாக ஹிராஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். அகழ்வாய்வின் போது தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களுக்கும் சிந்துவெளி ஓவியங்களுக்குமிடையே பெரும் ஒற்றுமைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு மொழியியல், கலைப்புலங்களோடு ஒப்பிட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னிந்தியத் திராவிடருக்குமிடையே ஒற்றுமை காண முயன்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹிராஸ் பாதிரியார், ஐ. மகாதேவன் போன்றோர் ஆவர்.

‘சிந்துவெளி நாகரிகம் திராவிடர்களுக்குரியதே’ என வலிந்து கூற முற்படுவது வரலாற்று ஆய்வுமுறைக்கு முரண்’ எனக்கூறும் பேராசிரியர் கே. கே பிள்ளையவர்கள் ‘சிந்துவெளி நாகரிகம் ஆரியர்களுடையதல்ல’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டுப் பல ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

2007இல் மயிலாடுதுறையில் ஒரு கற்கோடாரி கண்டெடுக்கப்பபட்டுள்ளது. இது கிமு 2000 – 1500களில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர் கருதுகின்றனர். சிந்துவெளியில் காணப்பட்ட அதே எழுத்துகள் இந்தக் கோடாரியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் பண்டைய தமிழகத்திற்கும் சிந்துவெளிக்குமுள்ள தொடர்புகள் தொடர்பான ஆய்வுகள் வலுவடைந்துள்ளதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார். இதேபோன்று காவிரி கழிமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் பொறிக்கப்பட்ட எழுத்துகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்குமுள்ள ஒற்றுமைகளையும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் உருவாக்கிய இந்தியா தொடர்பான வரலாற்று ஆவணத்தில் ‘ஆரியருக்கு முன் இந்தியாவெங்கும் வாழ்ந்த மக்கள் திராவிடரே’ என்று கூறப்பட்டிருக்கின்றது.

திராவிடர் என்ற சொல்லுக்கு விளக்கம் தர முற்பட்ட கார்டுவெல் எனும் அறிஞர் பின்வருமாறு தெரிவிக்கின்றார். குறித்தவொரு மக்கள் குழுவிற்குப் பெயரிடுவது அந்த மக்களல்ல. இவர்களை அழைப்போரே குறித்த இனமக்களுக்கு பெயரிடுகின்றனர். தமிழ்மொழி பேசியோரை அழைக்க முற்பட்ட வேற்றினத்தார் Dravid என்றே அழைத்தனர்.  'தமிழ்' என்பதைத் துல்லியமாக உச்சரிக்கத் தெரியாதோர் 'ற்மில்' என உச்சரிக்க முற்பட்டு அதுவே திரவிட் என்றானது என்கிறார் கார்டுவெல். ( தமிழ் - றமிழ் - றமிட் - டர்மிட் - டிரமிட் - டிராவிட் என மாற்றமடைந்தது.) எனவே தொடக்ககாலத்தில் தமிழ் பேசியோரே திராவிட் என அழைக்கப்பட்டனர். கார்டுவெல் வெளியிட்ட இக்கருத்து சிந்தனைக்குட்படுத்தப்பட வேண்டியதொன்று.

தொடர்ந்தும் அறிவியல் வழிநின்று சிந்துவெளி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச மட்டங்களில் போதிய ஆதரவு இல்லையென்றபோதும் தனிப்பட்ட முறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடல்கோள் கொண்ட குமரிக்கண்டத்திற்கும் சிந்துவெளிக்கும் கூடத் தொடர்புகள் இருந்திருக்கலாம். ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நிலவிய உயர்ந்த அரசுகளாக இவை இருந்திருக்கின்றன. தொடர்ச்சியான வலுவான ஆய்வுகளின் வழியேதான் இவை தொடர்பான உண்மைகளைக் கண்டறிய முடியும்.

இந்த ஆய்வுகளின் வழி, சிந்துவெளி நாகரிகம் தமிழர்களினுடையதுதான் என நிறுவப்பட்டால் பண்டைய தமிழர் அரசுகளில் உயர்வாதொரு அரசாக சிந்துவெளி திகழும்.

திருவேங்கடம் தென்குமரி ஆயிடைத் திகழ்ந்த தமிழர் அரசுகள் குறித்தும், ஈழத்தமிழர் அரசுகள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

                                                                                     பொன்னையா விவேகானந்தன்

தாய்வீடு கனடா - தைத்திங்கள் இதழில் வெளிவந்த கட்டுரை. 

No comments:

Post a Comment