Tuesday, December 1, 2015

நாம் தொலைந்து போகாதிருக்க....

 தமிழ், தமிழர், தமிழியல் பற்றிச் சற்றே ஆழமாகவும் இறுக்கமாகவும் கருத்துகளை முன்வைக்க முற்படுகின்றவேளை ‘இவர் ஒரு தமிழ் வெறியர்’ என எளிதாகச் சிலர் கூறிவிடுகின்றனர்.

கனடா போன்ற பல்லினப் பண்பாட்டுச் சூழலில் வாழ முற்படுகின்ற தனித்துவமான இனங்கள் ஒவ்வொன்றும் தத்தமது அடையாளங்களைப் பேணுவதற்காகப் பெரும் போராட்டங்களை நடத்துகின்றன. தாம் சார்ந்த இனத்துக்குள்ளிருந்தும் புறச்சூழல்களிலிருந்தும் கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்குக் கனடா தமிழ்ச் சமூகமும் விதிவிலக்கல்ல.

அடையாளங்களைப் பேண ஏன் போராட வேண்டும்?

தாயகத்தில் வாழும்போது ஓர் இனத்துக்குள் அடையாளங்களைப் பேணுவதற்காகப் போராட வேண்டியதில்லை. அங்கே எங்கு காணினும் தமிழர், எத்திசை நோக்கினும் தமிழ்ச் சூழல். அடையாளங்களே வாழ்வாகி வாழ்வே அடையாளங்களாகக் கொண்ட தாய்ப்பெருநிலம் அது. நமக்கு அங்கே வேறு பணிகள் இருந்திருக்கும்.

கனடா முற்றிலும் மாறுபட்டதொரு புதியதளம். வண்ணமயமான வாழ்வியல் கவர்ச்சிகள் மிக்க அழகுப்புலம். போற்றிப் பொத்திப் பாதுகாக்கத் தவறின் சுய அடையாளங்கள் யாவும் தானாக நழுவி விழுந்துவிடும் அபாயம் நிறைந்த நிலம்.

கனடாவுக்கே உரித்தான ஒரு பொதுமைப் பண்பாட்டுச் சூழல் எங்கும் வலுவாகச் சூழ்ந்திருக்கின்றது. அது கொண்டிருக்கும் கவர்ச்சிகள் கணக்கற்றவை. சிறியோர், இளையோர், பெரியோர் என அனைத்துத் தரப்பையும் ஈர்த்து இழுத்து விழுங்கிவிட வல்லவை. காலங்காலமாக ஒவ்வோர் இனத்திலும் குறிப்பிட்ட தொகையினர் இந்தச் சூழலுக்குள் அகப்பட்டுத் தொலைந்து வருகின்றனர்.

கனடாவின் பொதுமைப் பண்பாட்டுச் சூழல் வேண்டத்தகாத ஒன்றல்ல. ஒவ்வோர் இனமும் பின்பற்ற வேண்டிய சிறந்த பண்புகளை அது கொண்டுள்ளது. அவற்றை எம்மால் முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது. புறக்கணிக்கவும் கூடாது. பல்லினத்தோடும் நாம் கூடி ஊடாடும் பொதுமை வட்டம் இதுவே. கனடாவில் வாழும் அத்தனை இனத்தாரும் இவ்வட்டத்தக்குள் இணைந்தவாறே கனடாவின் தேசியப் பண்பினை வெளிப்படுத்துவர்.

ஒவ்வோர் இனமும் இனமாக வாழ்ந்தவாறே கனடாவின் தேசிய நீரோட்டத்தில் வலுவாக இணைந்திருக்க வேண்டும். இதையே கனடாவின் பல்லினப் பண்பாட்டுக்கொள்கை வெளிப்படுத்துகின்றது.

ஆயினும் கனடியராகிவிட்ட சிலர் “நாம் இனிக் கனடியர், எமக்கு மொழி உட்பட தனித்துவ அடையாளங்கள் எதுவும் தேவையில்லை. ஆங்கிலமும் கனடிய மயப்பட்ட வாழ்வும் போதும்” எனக் கூறியவாறு வலிந்து அடையாளங்களைத் துறந்து தொலைந்து போகின்றனர். பொதுமைப் பண்பாட்டுக்குள் காணப்படுகின்ற, எம் பண்பாடுகளுக்கு ஒத்துவராத கவர்ச்சிகளுக்குள் கட்டுண்டு போகின்றனர். அவர்களைத் தொடர்கின்ற தலைமுறைகளும் இனவடையாளங்கள் ஏதுமின்றி கரைந்து காணாமற் போகின்றனர்.

இவ்வாறானோரை இனங்கண்டு பேச முற்படுகையில் “ இந்த நாட்டில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என சிந்திக்கவும் முடிவெடுக்கவும் எமக்கு உரிமை இருக்கிறது. தாய்நாட்டோடு எனக்கு எந்த உறவும் இல்லை. நாம் முழுமையான கனடியர். எம்மைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்கின்றனர்.

இவ்வாறானோரை எண்ணி வருந்துவதைவிட நாம் என்ன செய்ய முடியும்?

பல இனங்ககள் கலந்து வாழும் இச்சூழலில் ஒவ்வோர் இனமும் தனித்துவ அடையாளங்களைப் பேணி வலுவேடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே எம் இனஞ்சார் தேவைகளை இம்மண்ணில் வென்றெடுக்க முடியும்.

இனஞ்சார்ந்த எம் வலிமையான செயற்பாடுகளே,
அரச நிர்வாக அலகுகளுக்குச் சில பிரதிநிதிகளைத் தெரிவு செய்தமைக்கும்
தாயகம் சார்ந்த சாதகமாக முடிவுகள் சிலவற்றை அரசு மேற்கொண்டமைக்கும்
தமிழர் மரபுத்திங்கள் போன்ற தீர்மானங்களை அரச நிர்வாக அலகுகள் அங்கீகரித்தைமைக்கும் காரணங்களாகும்.

இவற்றை விட மிக முதன்மையான பணி தாயகம் நோக்கிய செயற்பாடுகளே. பரம்பரை பரம்பரையாக எம்மையும் எம்மினத்தையும் தாங்கி வளர்ந்த அந்தப் பெருநிலத்தைப் போற்றிப் பேண வேண்டியது எம் வரலாற்றுக் கடன். வறியோரையும் பாமரரையும் கணிசமாகக் கொண்டுள்ள எமது தாயகம் அரசை விடப் புலம்பெயர்ந்தோரான எம்மையே பெரிதும் நம்பியிருக்கின்றது. இனஞ்சார்ந்த ஒருங்கிணைப்பு இன்றி இவற்றை எம்மால் நிறைவேற்ற முடியுமா?

தாயகத்தில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியபோது ஓரிரு நாட்களுக்குள் சில மில்லியன டொலர்களைச் சேகரித்தனுப்பிய எமகு சமூக இறுக்கம் சாதனையாக நோக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் அந்த மக்களை ஓரளவேனும் வழமையான வாழ்வுக்கு மீட்டெடுத்தோரும் புலம்பெயர்ந்தோரே.

மற்றுமோர் பேரழிவு தாயகத்தில் எக்காலத்திலும் எவ்வடிவத்திலும் ஏற்படலாம். அவ்வேளை எம்மையன்றி அவர்களைக் காக்க யாரிருக்கின்றனர்?

புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் நாம் கொண்டிருக்கும் இனஞ்சார்ந்த வலிமையான கட்டமைப்பே எம்மையும் எம் தாயகத்தையும் எக்காலத்திலும் காக்கவல்லது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இவ்வாறு இறுக்கமான கட்டமைப்பு மிக்க சமூகமாக வாழ்வதாலேயே சீக்கிய இனத்தோரில் அறுவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மூவர் அமைச்சர்களாகவும் உருவெடுத்திருக்கின்றனர். சீனர்களும் இவ்வாறே.

வலிமையான பிணைப்பைக் கொண்ட இனஞ்சார் வாழ்வு எத்துணைப் பயன்மிக்கது என்பதை ஓரளவு உணர்ந்திருப்பீர்கள்.

எமது இயந்திரத்தனமான வாழ்வோட்டத்தினிடையே சமூக ஒருங்கிணைவு பற்றிச் சிந்திக்கப பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அனைத்துத்; தரப்பினரும் பரபரப்பாகவே இயங்குகின்றனர். ஆற அமர சமைத்துண்ண நேரம் இல்லாமல் உணவகங்களிலும் பதப்படுத்தபட்ட உணவுப் பைகளிலும் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்குச் சமூகஞ்சார் செயற்பாடுகளைச் சிந்தித்துச் செயற்படுத்த நேரம் உண்டா?

இத்தகையோருக்கு இனஞ்சார்ந்த செயற்பாடுகளை விளக்குவதுவும் இனவடையாளம் பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதுவுமே எமது பணி. வெறி கொண்டு வேகமாய் நாம் இயங்கும்போதே இச்செய்திகள் சிலரையேனும் சென்றடைகின்றன.

இதற்காகவே நாம் போராடுகின்றோம். இளைய தலைமுறையை நோக்கி வலிமையான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். எம்மால் ஓய முடியாது. ஓய்ந்துவிடக் கூடாது. இப்பணியில் தொய்வோ இடைவெளியோ ஏற்படுமாயின் நாம் சிலரையேனும் முற்றிலுமாக இழந்துவிடுவோம்.

இப்பணி அரசியலுக்கு அப்பாற்பட்டது. உள்நோக்கங்கள் அற்றது. பதவிகளையோ விருதுகளையோ இலக்கு வைக்காதது. இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காது களமிறங்கிப் பணியாற்றுவோராலேயே நோக்கங்களைச் சென்றடைய முடியும்.

இதுவரையும் இனஞ்சார்ந்த சமூகச் செயற்பாட்டின் முக்கியத்துவம் கூறப்பட்டது.

இவற்றோடு நாம் தமிழர் என எம்மை வெளிப்படுத்தி வாழ்வதில் உள்ள பெருமைகளையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனங்கள் கூடத் தம் அடையாளங்களைப் பேணுவதிலும் வெளிப்படுத்துவதிலும் வெறியோடு செயற்படுகின்றனர். இவ்வுலகில் எப்போது தோன்றினோம்
என்ற காலக்கணிப்பு இல்லாத இனத்தோர் நாம். விபரம் தெரிந்தவரையில் வாழ்கின்ற எல்லா இனங்களுக்கும் தோன்றிய காலம் தெரிந்திருக்கின்றது, எம்மைத் தவிர.

இவ்வுலகில் தமிழர் முதற்குடிகளா என்பது எமக்குத் தெரியாது. ஆனால் நாம் இப்பூமியின் பழங்குடிகள் என்பது பேருண்மை.

‘நான் இந்த நாட்டின் குடிமகன் அல்லது குடிமகள்’ என எழுதி கழுத்தில் தொங்கவிடும் பெயரட்டடை நாடு விட்டு நாடு பெயரும் போது மாறவல்லது. ‘நான் இந்த மதம்’ என எழுதித் தொங்கவிடும் பெயரட்டையும் மதம் மாறும்போது மாறவல்லது.

உயிரணுக்களோடும் உணர்வோடும் தோலோடும் இரண்டறக் கலந்திருக்கும் இனவடையாளத்தை யாரால் எவ்வாறு மாற்றவியலும்?

இவ்வலகில் எம்மைத் தனிமனிதராகவும் இனமாகவும் பெருமைப்படுத்தவல்ல பேரடையாளம் நாம் தமிழரென்பதே. இதைத் துறந்தோ மறந்தோ செல்ல முற்படுகின்ற ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக்கொள்பவராவர்.

இத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கே அமைப்பு சார்ந்த செயற்பாடுகளாக தமிழர் மரபுத் திங்கள் நிகழ்வுகள் அமைகின்றன. இந்த நிகழ்வுகள் முழுமையான பெருவடிவம் கொள்ள நிதிவளமும் ஆட்பலமும் தேவை. இச்செயற்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாற்றுப்பயன் கருதாமல் பலரும் இணைவோமேயாயின் தோன்றவிருக்கும் ஒவ்வொரு தலைமுறையினையும் நாம் போற்றிப் பாதுகாக்க முடியும்.

--பொன்னையா விவேகானந்தன்

கனடா தாய்வீடு மார்கழி இதழில் வெளிவந்த கட்டுரை.

No comments:

Post a Comment