Monday, April 18, 2016

ஈழத்தில் பெண்ணிய எழுச்சியும் அரசியல் பங்களிப்பும்

ஈழத்தில்
பெண்ணிய எழுச்சியும் அரசியல் பங்களிப்பும்

பதினெட்டாம் நூற்றாண்டில் உலகெங்கும் தோற்றம் கொண்ட பெண்ணிய எழுச்சி 1900களின் தொடக்கத்தில் இலங்கையிலும் பலவடிவங்களில் தோற்றங்கொண்டிருந்தது.  இலங்கைப் பெண்கள்; சமூகத்தில்    பெண்ணியச் சிந்தனைகள் வலுவாகக் காலூன்ற, பலர் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கின்றனர். இலங்கையில் தோற்றங்கொண்ட பெண்ணிய எழுச்சியின் வரலாற்று வழிநின்று, அதன் தோற்றத்தினையும் அரசியல் பங்களிப்பினையும் சுருக்கமாகத் தர முயல்கின்றது இக்கட்டுரை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலகெங்கும் பெண்ணியச் சிந்தனைகள் செயல்வடிவம் பெறத் தொடங்கியிருந்தன. பிரித்தானியர் ஆட்சி பரந்திருந்த நாடுகளிலும் பெண்ணியச் சிந்தனையின் தாக்கங்கள் வெளிப்பட்டன. பெரும்பாலும் மேலைநாட்டுப் பெண்ணியப் போக்குகளோடு தொடர்புபட்டோரே கீழைத்தேய நாடுகளில் ஏற்பட்ட தாக்கங்களுக்கும் காரணமாயினர்.

ஆயசபயசநவ நுடணையடிநவா ழேடிடந என்ற அயர்லாந்துப் பெண்மணி 1898 இல் கல்கத்தா சென்று நிவேதிதா அம்மையாராகி, இந்தியாவெங்கும் பெண்ணியச் சிந்தனைகளை விதைத்தார்.

கனடாவைச் சேர்ந்த ஆயசல ர்நடநn ஐசறin என்ற பெண்மணி மருத்துவ சேவை செய்வதற்காக, 1896இல் இலங்கைக்குச் சென்றார்; என்பதுவும் அவரே இலங்கைப் பெண்ணிய எழுச்சிக்கு வித்திட்டார் என்பதுவும் பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கலாம்.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஈழத்தமிழ் சமூகத்தினர் கல்வித்துறையில் மேம்பட்டனராயினும் ஆண் பெண் உறவுநிலை மரபுவழிப்பட்ட பண்பாட்டியல் கட்டமைப்புக்குள்ளே கட்டுப்பட்டிருந்தது. ஒத்த உரிமைகளுக்காகக் குரல் எழுப்பவல்ல உந்துதல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஈழப்பெண்களிடத்தே தோன்றியதற்கான சான்றுகள் இல்லை.

கனடா ஒன்ராறியோவில் உள்ள நுடழசய என்ற இடத்தில் பிறந்த ஆயசல ர்நடநn ஐசறin என்ற பெண், தன்;னுடைய மருத்துவக் கல்வியை ரொறன்ரோவில் முடித்துக் கொண்டு மருத்துவ சேவை செய்யும் நோக்கில் அமெரிக்க மிஷனில்; சேர்ந்தார். இந்த மிஷன் பிரித்தானியர் ஆளுகைக்குட்பட்டிருந்த நாடுகளில் மருத்துவ சேவைகளைச் செய்துவந்தது. இது தொடர்பாகப் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். இலங்கையின் வட பகுதியில் பணியாற்றுவதே இவரது நோக்கமாக இருந்ததனால் தமிழ் கற்க விரும்பினர். அவ்வேளை, அமெரிக்காவில் Pசinஉநவழn பல்கலைக்கழகத்தில் முதுமானிக் கல்வியை மேற்கொண்டிருந்த வேலணையைச் சேர்ந்த தமிழரான சாமுவேல் கிறிஸ்மஸ் கனகரத்தினம் என்பவரிடம் தமிழ் கற்றார். தமிழ்க் கல்வியினூடாகத் தமிழ் பண்பாட்டில் ஆர்வம் கொண்டு,  திரு. கனகரத்தினத்தை திருமணம் செய்ய விரும்பினார்.

இருவரும் 1996 யூலையில் திருமணம் செய்து, டிசம்பரில் இலங்கை சென்றனர். பிற்காலத்தில் இவர் இலங்கையெங்கும் மேரி இரத்தினம் என்றே அறியப்பட்டார்.

மேரி இரத்தினம் வடக்கில் இயங்கிய அமெரிக்கன் மிஷன் அமைப்போடு இணைந்து பணியாற்றச் சென்றவேளை, இலங்கையரைத் திருமணம் செய்தமையைக் காரணம் காட்டியும், கனடா மருத்துவக் கல்வியை ஏற்க முடியாதென்றும் கூறிய அமெரிக்கன் மிஷன், அவரை மருத்துவப் பணியிலிருந்து நீக்கியது.

தமிழ்ப் பண்பாட்டை மிகவும் நேசித்தவரான மேரி இரத்தினம் இலங்கையை விட்டுச் செல்ல விரும்பாது, தனக்கென ஒரு மருத்துவமனையை அமைத்துத் தன் மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். அரச மருத்துவமனையிலும் பணியாற்றினார்.

இவ்வேளையிலேயே இலங்கைவாழ் பெண்களுடைய அவல வாழ்வை உணர்ந்தார். பெண்களுக்கான உரிமைகள் பற்றிய உணர்வை பெண்களிடத்தே தோற்றுவித்தார். 1904இல் ‘ஊநலடழn றுழஅநn ருnழைn’  என்ற அமைப்பையும் 1909இல் ‘வுயஅடை றுழஅநn ருnழைn’ என்ற அமைப்பையும் பெண்களுக்காக ஆரம்பித்தார். கொழும்பு சமூக அறிவியலாளர் சங்கம்  (ஊழடழஅடிழ ளழஉயைட ளஉநைவெளைவ  யளளழஉயைவழைn) 1993 இல் “னுச. ஆயசல சுரவயெஅ – யு ஊயயெனயைn Pழைநெநச கழச றுழஅநn'ள சுiபாவள in ளுசi டுயமெய” என்ற நூலை வெளியிட்டது. இந்நூல் மேரி இரத்தினத்தை “இலங்கைப் பெண்ணுரிமைவாதத்தின் முன்னோடி” என்றே கூறுகின்றது.

தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகிய மருத்துவர் மேரி இரத்தினம் அவர்களே இலங்கைப் பெண்ணியச் சிந்தனையின் முன்னோடி எனலாம்.

ஈழப் பெண்ணான மங்களம்மாள் என்பவரே ஈழப்பெண்ணியவாதத்தின் முதற் குரலாகப் பதிவு செய்யப்படுகின்றார். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த கதிரவேற்பிள்ளை என்பவரின் மகளாவார். துறைசார் கல்விப் பின்னணி இல்லாதபோதும் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை இவர் பெற்றிருந்தார். இவர் கணவர் மாசிலாமணி கேரளாவில் கல்வி கற்ற முற்போக்காளராவர். யாழ்ப்பாணத்தில் 1921இல் ‘தேசாபிமானி’ என்ற நாளிதழையும் இவர் வெளியிட்டார்.

பெண்களுக்கான குரலை வலிமையாக உயர்த்திய மங்களம்மாள், இதழ்கள், அமைப்புகள் வாயிலாகவும் பெண்களுக்கான பணிகளைத் தொடர்ந்தார்.

பெண்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மங்களம்மாள் 1902 இல் வண்ணார்பண்ணையில் ‘பெண்கள் சேவா சங்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தாகக் குறிப்பிடும் திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் ‘இதற்கு முன் பெண்களுக்கான வேறு அமைப்புகள் இருந்ததாகத் தெரியவில்லை’ என்கின்றார்.

பெண்களுக்கான அறிவையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இது என்பதால், இதுவே ஈழத்தமிழ்ப் பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட, பெண் விடுதலையை நோக்கிய முதல் சங்கம் எனலாம் என்கிறார் திருமதி வள்ளிநாயகி.

ஐரோப்பாவில் பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புநிலைச் செயற்பாடுகள் கருக்கொண்ட காலகட்டமான 1889 இல், ‘றுழஅநn நுனரஉயவழைn ளுழஉநைவல’  (யேசi ளூமைளாய னுயயெ ளுயபெயஅயலய)   என்ற அமைப்பு இலங்கையில் உருவாக்கப்பட்டதாக ‘நுnஉலஉடழிநனயை ழக றுழஅநn in ளுழரவா யுளயை (Pயபந 269)’ என்ற நூல்  தெரிவிக்கின்றது.

1923ம் ஆண்டில் மங்களம்மாள் ‘தமிழ் மகள்’ என்ற சஞ்சிகையைப் பெண்களுக்காக ஆரம்பித்தார். ஈழத்தில் பெண்களுக்காக வெளியிடப்பட்ட முதற் சஞ்சிகை இதுவாகும். இலங்கையின் முதல் பெண் இதழாசிரியரும் இவரே. பெண் விடுதலை, சமத்துவம், சீதனக் கொடுமை போன்ற விடங்களை முன்னிறுத்தி வெளிவந்த இச்சஞ்சிகை பெண்ணிய எழுச்சியின் வலுவான தளமாகத் திகழ்ந்தது. “நாமார்க்கும் குடியல்லோம்”  என்ற வரியையே இச்சஞ்சிகை தன் குறியீடாகக் கொண்டிருந்தது.
பொருளாதார வளம் காரணமாக இச்சஞ்சிகை இடையிடையே நின்று போனாலும் 1971வரை வெளிவந்தது.

மங்களாம்மாள் இந்த சஞ்சிகையில் மட்டுமன்றி, பிற இதழ்களிலும் பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை எழுதினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ‘பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும்’ என்ற குரல் உலகெங்கும் வலிமையாக ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

1927இல் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக பிரித்தானிய அரசு டொனமூர் தலைமையில் ஓர் ஆணையத்தை உருவாக்கியது. அரசியல் சீர்திருத்தத்தை உருவாக்கும் நோக்கில் டொனமூர் ஆணையம் பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டது. திருத்தத்திள் ஒரு பகுதியாக மக்களுக்கான வாக்களிக்கும் உரிமையை ஆணையம் விரிவுபடுத்த விரும்பியது. இதனைச் சேர். பொன். இராமநாதன் உட்பட பெரும்பான்மையான ஆண் தரப்பினர் எதிர்த்தனர். இவ்வேளை தமிழ், சிங்களத் தரப்புகளைச் சார்ந்த பெண்கள் ஒன்று கூடி ‘பெண்கள் வாக்குரிமைச் சங்கம்’ என்ற அமைப்பை 1927இல் நிறுவினர். இந்த அமைப்புக்கு டேஸி டயஸ் பண்டாரநாயக்கா தலைமை தாங்கினார். (இவர் பின்னாளில் இலங்கைப் பிரதமராகத் திகழ்ந்த ளு.று.சு.னு. பண்டாரநாயக்காவின் தாயாராவார்). மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான திருமதி ஈ. ஆர். தம்பிமுத்து, திருமதி நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர், மீனாட்சியம்மாள் நடேசையர் போன்றோரும் இவ்வமைப்பில் அங்கம் பெற்றனர். ஏறக்குறைய இலங்கைப் பெண்ணாக மாறிவிட்ட டாக்டர் மேரி இரத்தினமும் இந்த அமைப்பில் அங்கம் வகித்தார்.

அரசியல் சீர்திருத்தம் தொடர்பாகப் பல்வேறு சாட்சியங்களையும் பெற்ற பின்னர் இறுதியாகவே டொனமூர் ஆணையம் பெண்கள் வாக்குரிமை சங்கத்தை அழைத்தது.

1928 ஜனவரி 11ம் திகதி டொனமூர் ஆணையத்தின் முன் இச்சங்கத்தைச் சார்ந்த பன்னிரண்டு பெண்கள் சாட்சியமளித்தனர். இலங்கையெங்கும் பெண்கள் படும் இன்னல்களை இவர்கள் எடுத்துரைத்தனர். இந்த சாட்சியங்கள் பெண்களின் துயரை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தின.

“உங்கள் சங்கத்தில் எல்லா சாதியினரும் அங்கம் வகிக்கலாமா?” என்று என டெனமூர் கேட்ட வினாவுக்கு “ஆம், எல்லாச் சாதியினரும் அங்கம் வகிக்கலாம்” எனப் பதில் கூறினார் டாக்டர் மேரி இரத்தினம். “முஸ்லீம் பெண்களும் அங்கம் வகிக்கிலாமா?” டொனமூர் திருப்பிக் கேட்டார். “ஆம், முஸ்லீம் பெண்களும் அங்கம் வகிக்கலாம், இச்சங்கத்தின் செயற்பாடுகள் வெற்றியளிக்குமானால் எம்முடன் இணைவதாகக் கூறியிருக்கின்றனர்” என்றார் சங்கத்தின் அங்கத்தவரான திருமதி ஜியோடி சில்வா.

இன எல்லைகளைக் கடந்து உரிமைக்காக ஒன்றுபட்ட அமைப்பாக இச்சங்கம் இயங்கியது. சரிநிகர் பத்திரிகையில் வெளியான ‘இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் பெண்கள்’ என்ற கட்டுரையில் இந்த சாட்சியங்கள் விரிவாக வெளிவந்துள்ளன.

பெண்கள் வாக்குரிமைச் சங்கம் சாட்சியமளிப்பதற்கு முன்பாக, 1927 டிசம்பர் 20 நாள் சாட்சியமளிப்பதற்காகச் சேர். பொன். இராமநாதன் அழைக்கப்பட்டிருந்தார். தன் சாட்சியத்தின் போது கீழ்க்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

“நீங்கள் எங்கள் பெண்களை அவர்கள் பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக் உள்ளமை எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயம் இல்லை. பெண்களது முழுவாழ்க்கையும் அவர்களது கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்கப்பாலான ஒரு உலகம் இல்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.” (சாட்சிய இலக்கம் 101)

டொனமூர் ஆணையம், பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கெதிராகப் பொன். இராமநாதனைப் போன்றே பலரும் சாட்சியங்களை வழங்கியருந்போதும் பெண்களின் கருத்துகளைக் கவனத்திற் கொண்டது. ‘இலங்கைப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்’ என டொனமூர் ஆணையம் பிரித்தானிய அரசுக்குப் பரிந்துரைத்தது. 1928ம் ஆண்டு பிரித்தானிய அரசு இலங்கைப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுமே வாக்களிக்கலாம் என டொனமூர் திருத்தம் தெரிவித்தது. பெரும்பான்மையான ஆண்களும் இலங்கை காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்தோரும் பெண்கள் வாக்குரிமை பெறுவதை எதிர்த்ததாலேயே பெண்களின் வயதெல்லை 30 ஆக உயர்த்தப்பட்டது. பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் சிலவற்றில் கல்வியறிவு பெற்ற, வசதி படைத்த பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த போதும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் வாக்களிக்கலாம் என்ற உரிமையைப் பெற்ற (பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்ட) முதல் நாடு இலங்கையே.

1918ம் ஆண்டில் அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமையை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.

பெண்கள் வாக்குரிமை பெற்றதைக் கண்டித்து சேர் பொன். இராமநாதன் “பெண்கள் பெற்றிருக்கும் வாக்குரிமையானது குடும்ப அங்கத்தவர்களுடைய அமைதியையும் இசைவையும் குலைத்து அமைதியின்மைக்கு வழி வகுத்துவிடும்” என டெய்லி மிரர் (1927.12.01) பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்தார்.

‘இந்து சாசனம்’ என்ற பத்திரிகை 1927.11.08 அன்று பெண்கள் வாக்குரிமை பெற்றதைக் கண்டித்து ஆசிரியர் தலையங்கம் எழுதியது. மங்களம்மாள் இந்தப் பத்திரிகையின் கருத்துக்குப் பதிலளித்துக் கடிதம் எழுதினார்.

இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்த மெட்ராஸ் பட்டினத்தில் (தற்போதைய தமிழ்நாடு) வாழ்ந்த கல்வியறிவு பெற்றோரும் வசதி படைத்தோருமான பெண்கள் மட்டும் வாக்களிக்கும் உரிமையை 1921இல் பெற்றனர்.

இக்காலப்பகுதியில் தமிழகத்தில் சிலகாலம் வாழ்ந்த மங்களம்மாள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்து செயற்பட்டார். 1927 இல் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியி;ட்டு, நீதிக்கட்சி வேட்பாளரிடம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியுற்றார்.

டொனமூர் சீர்திருத்தத்தின் பின்னர் இலங்கையின் முதலாவது தேர்தல் 1931இ;ல் நடைபெற்றது. அதற்கு முன்பாகவே இந்தியா சென்று தேர்தலில் போட்யிட்ட முதல் ஈழத்தமிழ் பெண்ணாக மங்களம்மாளைக் கருதலாம்.

ஈழத்துப் பெண்ணிய எழுச்சி, மங்ளம்மாள் மாசிலாமணியைத் தவிர்த்து நோக்கப்பட முடியாதவொன்றாகவே அமைந்து விட்டது.

1900களின் தொடக்கத்தில் மலையகத்தில் குடியேறிய தஞ்சாவூரைச் சேர்ந்தவரான மீனாட்சியம்மாள் மற்றுமொரு தொடக்ககாலப் பெண்ணியலாளராகக் கருதப்படுகின்றார். மலையகத்தில் முதல் தொழிற்சங்கத்தை நிறுவியவரான திரு நடேசையர் என்பவரைத் திருமணம் செய்தார்.  காந்தீயப் போராட்டங்களால் கவரப்பட்டிருந்த இவர் சமூகம் சார்ந்து துணிச்சலாகப் பணியாற்றினார்.

அக்காலகட்டத்தில் மலையக மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் இவர் எழுப்பிய குரல் வலிமையாக ஒலித்தது. நடேசையர் நடத்திய ‘தேசபக்கதன்’ என்ற இதழில் தலையங்கங்களும் கட்டுரைகளும் எழுதினார். இப்பத்திரிகையில் 1928ம் ‘ஸ்திரீகள் பக்கம்’ என்ற பெயரில் பெண்ணிய எழுச்சிக்கான ஆக்கங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டார்.

பெண்கள் கல்வி, சமத்துவம், சுதந்திரம், பெண்களுக்காகச் சட்டங்களைச் சீர்திருத்துதல் போன்ற விடயங்களைத் தன் கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுத்தினார்.

 1928.06.18 அன்று வெளியான தேசபக்தன் இதழில், “ஸ்திரிகள் முன்னேற்றமடைய வேண்டுமெனப் பலபேர்கள் எழுத்து மூலமாயும் வெறும் பேச்சாகவும் பேசுகிறார்களே தவிரக் கையாள்வது கிடையாது. சில மகான்களும் பிரசங்க மேடைகளில் நின்று பெண்களுக்குக் கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும் அவர்கள் முன்னேற்றமடையாவிட்டால் தேசம் முன்னேற்றமடையாது என்று வாயால் பேசுகிறார்கள். அவர்கள் வீட்டில் அம்மாக்களுக்கோ கோஷா திட்டம். இவ்வாறு விபரம் அறிந்தவர்கள் நிலைமையே மோசமாயிருந்தால் அதிகம் படிப்பறிவில்லாத ஆடவர் தங்கள் மனைவிமாரை எப்படி நடத்துவார்கள்? பெண்மக்களில் சிலர், பெண்கள் முன்னேற்திற்காக ஈடுபட்டு உழைத்தாலும் அதற்கு ஆயிரம் இடயூறுகள் ஏற்படுகிறதே தவிர, அனுகூலங்கள் ஏற்படுவது அரிதாக இருக்கிறது.” என எழுதினார்.

பெண்களுக்குக் கிடைத்த வாக்குரிமையை எதிர்த்த சேர். பொன். இராமநாதனின் கருத்துகளைக் கண்டித்துக் கட்டுரையொன்றையும் 1928.04.13 அன்று வெளியான தேசபக்தன் இதழில் எழுதினார்.

பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் பங்குபெற்ற மீனாட்சியம்மாள் இலங்கையெங்கும் பரந்து வாழும் ஏழைச் சகோதரிகளுக்காகவும் இதன் சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். (தேசபக்கதன் 1929.01.26)

1940 இல் மலையக மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இவர் வெளியிட்ட பாடல் தொகுப்பு முக்கியமான ஆவணப் பதிவாகக் கருதப்படுகின்றது.

மீனாட்சியம்மாளின் பெண்ணியம் சார்ந்த பணிகளும் மலையக மக்களுக்கான அர்ப்பணிப்பும் பெரிதும் போற்றப்பட வேண்டியவையாகும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலப் பகுதியில் ஈழப்பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர்களாக, திருமதி ஈ. ஆர். தம்பிமுத்து, நல்லம்மா, நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர், அன்னம்மா முத்தையா, பரமேஸ்வரி கந்தையா, நேசம் சரவணமுத்து, நோபிள் இராஜசிங்கம் போன்றோர் கருதப்படுகின்றனர். இவர்களைப் பற்றியும் ஆற்றிய சேவைகள் குறித்தும் போதிய பதிவுகள் இல்லை என்கிறார் சித்திரலேகா மௌனகுரு.

டொனமூர் திருத்தங்களுக்குப் பின் முதல் தேர்தல் 1931இ05.04 அன்று நடைபெற்றது. இத்தேர்தலின் போது, கொழும்பு வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மருத்துவரான திரு இரத்தினசோதி சரவணமுத்து ஆவார். இவர் தேர்தல் விதிகளை மீறினார் என்றெழுந்த குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதி 1932.03.08 அன்று தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பானது, இரத்தினசோதி சரவணமுத்துவின் பதவியையும் ஏழாண்டுகாலக் குடியுரிமைத் தகுதியையும் பறித்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் தேர்தல் முறைகேடு காரணமாகப் பதவி பறிக்கப்பட்ட முதல் அரசாங்க சபை உறுப்பினர் இவரே.

வெற்றிடமான கொழும்பு வடக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற ஏற்பாடாகியது. குடியுரிமை பறிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்கு ஆளான இரத்தினசோதி சரவணமுத்து, தன் மனைவியான நேசம் சரவணமுத்துவை வேட்பாளராக நிறுத்தினார்.

இலங்கை அரசியலில் நிறுத்தப்பட்ட முதல் தமிழ் பெண் வேட்பாளரானார் நேசம் சரவணமுத்து. 1932.05.28 இல் தேர்தல் நடந்தபோது, 8681 அதிகப்படியான வாக்குகளால் நேசம் சரவணமுத்து வெற்றி பெற்று இலங்கைப் அரசாங்க சபைக்குத் தெரிவான ‘முதல் தமிழ் பெண்’ என்ற பெருமையைப் பெற்றார்.

‘ஜோன் ஹென்றி மீதெனிய அதிகாரம்’ என்ற பாராளுமன்ற உறுப்பினர் இறந்ததைத் தொடர்ந்து, 1931 நவம்பரில் ரூவான்வெல என்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகளான எட்லின் மொலமூரே வெற்றியீட்டி, இலங்கை அரசியலில் முதல் ‘பெண் அரசாங்க சபை உறுப்பினர்’ ஆனார்.

அரசாங்க சபை உறுப்பினராக இருந்த நேசம் சரவணமுத்துவின் பதவியும் எட்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. இவர் மீதும் சுமத்தபப்ட்ட தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இவரது பதவியையும் பறித்தன. ஆனால் கணவனைப் போன்று குடியுரிமை பறிக்கப்படவில்லை.

மீண்டும் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் 1932.11.12 இல் நடத்தப்பட்டபோது நேசம் சரவணமுத்து மீண்டும் போட்டியி;ட்டு 7730 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார்.

இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் 1936.02.22 நடைபெற்ற போதும் நேசம் சரவணமுத்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினராகத் திகழ்ந்த ஓரேயொரு பெண் இவரே. இப்பதவிக்காலத்தில் கல்வி மற்றும் உடல்நலம் தொடர்பான நிர்வாகக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்தார்.

தன் பதவிக்காலத்தில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய நேசம் சரவணமுத்து தன்னுடைய இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர், உடல்நலக் குறைவு காரணமாக 1941.01.10 அன்று இறந்தமை துயரமான நிகழ்வாகும்.

இவர் அரசாங்க சபை உறுப்பினராக இருந்த பொழுதுகளில் வறிய மக்கள், பெண்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களுக்காக வாதாடினார். விதவைகள், அநாதைகள், ஆதரவுப்பணம், சம்பளச் சபை நிறுவுதல் பெண் ஆசிரியர் திருமணமானதும் வேலையிலிருந்து நிறுத்தப்படும் நடைமுறையை நீக்குதல் என்பன அரசாங்க சபையில் இவரால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் சிலவாகும்.

கல்வித் திணைக்களம், ஆசிரியராகப் பணி புரியும் பெண்கள் திருமணமானதும் வேலையிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற பிரேரணை ஒன்றை அரசாங்க சபைக்கு முன்மொழிந்திருந்தது. ‘பெண்கள் நலத்துக்கு எதிரான இந்தப் பிரேரணை நடைமுறைப்படுத்தக் கூடாது’ என நேசம் சரவணமுத்து வாதாடினார். ‘இது மாணவரின் கல்வி நலத்துக்கும், நாட்டினது நலத்துக்கும் உகந்ததல்ல’ என அவர் கூறினார். நேசம் சரவணமுத்துவின் வாதங்களை ஆராய்ந்த கல்வி நிர்வாகக் குழு, பெண் ஆசிரியர் எவரையும் ஓய்வு பெறுமாறு வற்புறுத்தக்கூடாதென அறிவித்தது.

பொருளாதாரத்திலும் கல்விப் பின்னணியிலும் மேம்பட்டவரான நேசம் சரவணமுத்து, கணவருடைய செல்வாக்கினால் வெற்றி பெற்றிருந்தார் என்றபோதும் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி சமூகத்துக்கும் பெண்களுக்கும் பல நன்மைகளைச் செய்திருந்தார்.

நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர் ஒரு மருத்துவராவார். மீனாட்சியம்மாளின் கணவர் நடேசையருடன் சேர்ந்து மலையகத்தில் தொழிற்சங்கத்தை உருவாக்க உழைத்தார். நல்லம்மா, மீனாட்சியம்மாளுடன் சேர்ந்து மலையகத் தொழிலாளரிடையே சமூக சேவைகள் பல செய்தார். அத்துடன் 1928இல் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நிறுவப்பட்ட போது அதன் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரானது மாத்திரமன்றி இணைச் செயலாளராகவும் பணி புரிந்தார்.

வாக்குரிமைச் சங்கத்தின் நிறுவன திருமதி ஈ.ஆர். தம்பிமுத்துவின் கணவரான திரு ஈ. ஆர். தம்பிமுத்து மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக இருந்தபோது 1923இல் பெண்களுக்கு வாக்குரிமை தொடர்பான ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தார். ஆனால் அப்போது அப்பிரேரணைக்கு ஆதரவு கிடைக்கவில்லை. (வுhந ர்யளெயசனஇ ஊNஊ பக் 649) தொடர்ந்து திருமதி தம்பிமுத்து பெண்களுக்கான வாக்குரிமைக் கோரிக்கையை வற்பறுத்தினார். பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நிறுவப்பட்டபோது அதன் உபதலைவர்களில் ஒருவரானார்.1927 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி முதன் முதல் இச்சங்கத்தை நிறுவுவதற்காகப் பெண்கள் கூடிய போது திருமதி தம்பிமுத்துவே பெண்கள் வாக்குரிமைச் சங்கம் றுழஅநn குசயnஉhளைந ருnழைn என்ற பெயரை முன்மொழிந்தார். (னுயடைல நேறள 08.12.1927)

1936இல் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் நடைபெற்றபோது, ஹட்டன் தொகுதியில் லக்ஷ்மி ராஜரட்னம் என்ற பெண் போட்டியிட்டார். எனினும் மீனாட்சியம்மாளின் கணவரான நடேசையரிடம் தோல்வியுற்றார்.

இதேவேளை, 1941 இல் நெடுந்தீவு கிராமசபை தலைவியாகத் திருமதி செல்லம்மா நாகேந்திரர் தெரிவுசெய்யப்பட்டார். 1948 வரை கிராமசபைத் தலைவியாகத் திகழ்ந்தார். இலங்கையின் முதல் பெண் கிராமசபைத் தலைவி என்ற பெருமை இவருக்குண்டு.

நேசம் சரவணமுத்துவுக்குப் பின்னர் தமிழ் பெண்களின் அரசியல் பங்களிப்பு கட்சிகளுக்கான ஆதரவாளர் என்ற எல்லைக்குள்ளேயே ஒடுங்கிப் போனது. 1931க்குப் பின் நேசம் சரவணமுத்துவைத் தவிர, ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை வேறு எந்தத் தமிழ்ப் பெண்ணும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படவில்லை.

1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு எம். கனகரத்தினம் 1980 இல் மரணடைந்ததைத் தொடர்ந்து அவரது சகோதரியான திருமதி ரங்கநாயகி பத்மநாதன் நியமனம் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். சுதந்திர இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார். இவர் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் செயற்பட்டார். பின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட இவர் 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார்.

1989 தேர்தலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான மற்றுமொரு தமிழ்ப் பெண் இராஜமனோகரி புலேந்திரன் ஆவார். பருத்தித்துறை நகரசபையின் முதல்வராக இருந்த திரு துரைராஜா என்பவரின் மகளாகிய ராஜமனோகரி ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றி திரு புலேந்திரனின் மனைவியாவார். இவரும் கட்சிப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1983இல் புலேந்திரன் படுகொலை செய்யப்பட்தைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட பொறுப்புகளை ஏற்றார்.

1989ம் ஆண்டிலும் 1994ம் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக ஏறக்குறைய 10 ஆண்டுகள் பதவி வகித்தார். அவ்வேளை பிரதிக் கல்வியமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். இலங்கைப் பாரளுமன்ற அரசியலில் அமைச்சுப் பொறுப்புகளை வகித்த முதல் தமிழ்ப் பெண் இவரே.

இவரை அடுத்து, 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார் பத்மினி சிதம்பரநாதன். யாழ் மாவட்டம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த முதல் பெண் இவரே. 2010வரை இவர் பதவி வகித்தார்.

2004ம் ஆண்டிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான மற்றுமொரு பெண் தங்கேஸ்வரி கதிராமன் ஆவார். இவரும் 2010வரை பதவி விகித்தார். இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்தனர்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல் பெண் மேயராக 1998இல் தெரிவு செய்யப்பட்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன். மார்ச் 11இல் தெரிவு செய்யப்பட்ட இவர் அதேயாண்டு மே 17இல் கொல்லப்பட்டார். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரனின் மனைவியாவார். தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்து செயற்பட்டார்.

இவரைத் தொடர்ந்து மாநகர சபை மேயராக பதவி வகித்த பெண் யோகேஸ்வரி பற்குணராஜா என்பவராவர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (நுPசுகு) சார்பில் போட்டியி;ட்டு 2009இல் மேயரானார்.

சிவகீதா பிரபாகரன் என்பவர் 2008 இல் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாநகர மேயரானார்.

தற்போது வடக்கு மகாண சபையில் ஒரேயொரு பெண் உறுப்பினராக ஆனந்தி சசிதரன் பதவி வகித்து வருகின்றார். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றத்துக்காக இவர் பல பணிகளை ஆற்றி வருகின்றார்.

இலங்கை இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்கள் சிலரும் அரசியலிலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆயிஷா ரவுப் என்ற பெண்மணி அரசியல், சமூகப்பணிகள் பெரிதும் போற்றப்படுகின்றன.

1917இல் கேரளாவில் ஆயிஷா பீபி, பிறந்த இவரது தந்தை ஒரு முற்போக்காளராவார். மிக அரிதாக பெண்கள் பயின்ற அக்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்  ஆயிஷா பட்டம் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த எம்.எஸ். எம். ரவூப் என்பவரைத் திருமணம் செய்து கொழும்பில் குடியேறினார். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆயிஷா 1947 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதில் தோல்வியடைந்தபோதும் 1949இல் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று கொழும்பு மாநகரசபையின் துணை மேயரானார். இலங்கையின் முதல் இஸ்லாமியப் பெண் வேட்பாளராகவும் மாநகர சபை உறுப்பினராகவும் திகழ்பவர் இவரே.

சமூக முன்னேற்றத்துக்காகப் பெரும்பணியாற்றிய ஆயிஷா ரவூப் கொழும்பில் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியைத் திறந்த சாதனையாளராவர். பெண்கள் சமூகத்திற்கும் பெண்கள் கல்விக்கும் இவர் ஆற்றிய பணி பெரிதும் போற்றப்படுகின்றது.

2000இல் பொதுத்தேர்தல் இஸ்லாமியப் பெண்கள் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே நோக்கப்படுகின்றது. ஜே.வி.பி. யின் உறுப்பினரான அன்ஜான் உம்மா 1999 மகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்ட்ட முதல் இஸ்லாமியப் பெண்ணாவார். தொடர்ந்து ஜே.வி.பி. சார்பில் தேசியப் பட்டியல் மூலம் 2000இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இவர் 2012இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவியாகிய பேரியல் அஷ்ரப், 2000 தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அப்போதைய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் இணைத்தலைவராகவும் இருந்த பேரியல், தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் தலைவராகவும் சிலகாலம் திகழ்ந்தார்.
அதன் பின்னர் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதுவராகவும் கடமையாற்றினார்.

இன்றைய அரசியலில் உள்ளூராட்சி நிர்வாகங்களுக்கு அப்பால் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் போயுள்ளது.

மிதவாத அரசியலுக்கப்பால் 1970களின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற தமிழர் விடுதலைப் போராட்ட அமைப்புகளிலும் தமிழ்ப் பெண்கள் பங்குபற்றியுள்ளனர்.

விடுதலைப் போராட்டம் மண் விடுதலையையே நோக்காகக் கொண்டிருந்த போதிலும் சமூக விடுதலை சார்ந்தும் அவை செயற்பட்டன. எழுத்துகளிலும் பேச்சுகளிலும் மட்டுமே இருந்து வந்த சாதிய, பெண்ணிய கட்டுகளை அறுத்தெறிய விடுதலைப் போராட்டங்கள் உதவின. கரண்டிகளை மட்டுமே பிடிக்கவல்லன எனக் கருதப்பட்ட கைகள் கணைகளை இலாவகமாகத் தூக்கித் திரிந்தன. மிதிவண்டியோடு வாழ்ந்த பெண்கள் கனரக வாகனங்களைச் செலுத்தினர். விடுதலை மேடைகளிலும் ஊடகங்களிலும் கலைகள் படைத்தனர். பழைய மரபுகளைத் தகர்த்தனர். களங்களிலும் நிலங்களிலும் ஆணுக்கு நிகராயினர்.

இந்த சமூக விடுதலைப் பாய்ச்சலானது, ஒருவகை அதிகாரத்தளத்திலேயே நிகழ்ந்தது. ஒரு சமூகத்தின் நீண்டதும் வலுவானதுமான அடிப்படை மாற்றங்களிலிருந்து இது தோற்றங்கொள்ளவில்லை. விடுதலைப் போராட்டம் வலுவற்றிருக்கும் இக்காலத்தில் போராட்ட காலத்தில் நிகழ்ந்த சமூக விடுதலை எழுச்சி பலங்குன்றிப் போனமையே இதற்குச் சான்றாகும்.

இக்கட்டுரையானது, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் சமூகம் சார்ந்து நிகழ்ந்த பெண்ணிய எழுச்சி பற்றிய சில நிகழ்வுகளையும் செய்திகளையும் பதிவு செய்திருப்பதுடன், இலங்கை அரசியலில் ஈடுபட்ட தமிழ்ப் பெண்கள் பற்றிய தகவல்களையும் தந்திருக்கின்றது.

மார்ச் 2016 தாய்வீடு இதழில் வெளிவந்த கட்டுரை.

                                                                                                                பொன்னையா விவேகானந்தன்


‘இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் பெண்கள்’ – சரவணன் - சரிநிகர் 
இலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்திருத்த இயக்கங்களில் முன்னோடிகளான - 
சில தமிழ்ப் பெண்கள் - சித்திரலேகா மௌனகுரு 
மங்களம்மாள் மாசிலாமணி – வள்ளிநாயகி இராமலிங்கம் 
நூலகம்.கொம் - நிவேதினி
நூலகம்.கொம் - பெண்ணின் குரல் 
Encyclopedia of Women in South Asia
ttps://canadiansrilankanpartnerships.wordpress.com/.../dr-mary-rutnam-

No comments:

Post a Comment